ராமர் கோயிலைத் தகர்ப்போம் – முஸ்லிம் பெயரில் மிரட்டல் அனுப்பிய ஓம்பிரகாஷ் கைது!

bomb threat
Share this:

உத்தரபிரதேசம் (04 ஜனவரி 2023): உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்வோம் என்றும் அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று முஸ்லிம் பெயரில் மிரட்டல் கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கைத் தீர விசாரித்த காவல்துறையினர், முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு இந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். முஸ்லிம் பெயரில் பெரும் கலவரம் செய்ய சதித்திட்டம் தீட்டிய சங்பரிவார் தலைவர் தேவேந்திர திவாரி தலைமறைவாக உள்ளார். இவரைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 27, 2023 ஆம் தேதி, பாரதிய கிசான் மஞ்ச் மற்றும் பாரதீய கவு சேவா பரிஷத் தலைவர் தேவேந்திர திவாரிக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை தகர்க்கப் போவதாக ஒரு மின்னஞ்சல் வந்தது.

இதில் “ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்; உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கொல்வோம்; பசு பாதுகாப்பு துறையில் செயல்படுவதால் தேவேந்திர திவாரியான உங்களையும் கொல்வோம்” என்று எழுதப் பட்டிருந்தது.

முஸ்லிம் பெயரில் மிரட்டல்:

இமெயில் அனுப்பிய நபரின் பெயர் “ஜுபைர் கான்” என்றும், தான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் ஏஜென்ட் என்றும் எழுதப் பட்டிருந்தது.

இதைக் கண்ட தேவேந்திர திவாரி, உ.பி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் Anti Terrorist Squad (ATS) புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கின. தற்போது, ​​இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துக்கள் இருவரை உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சத்தியமார்க்கம்.காம் 

திடுக்கிடும் உண்மைகள்:

காவல்துறையின் முழு விசாரணையில், காவல்துறையினரே எதிர்பார்க்காத வகையில் திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன.

அதன்படி, காவல்துறையில் புகார் அளித்த இந்து இயக்க தலைவர் தேவேந்திர திவாரியே அவரிடம் வேலை செய்யும் பணியாளர்ளைப் பயன்படுத்தி முஸ்லிம் பெயரில் இந்தக் கலவர சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

கலவர திட்டத்தில் ஈடுபட்ட ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹர் சிங் ஆகியோர் லக்னோவின் கோமதி நகர் விபூதி காண்டில் வைத்து IPC 153 A (பிற மதத்தினர் பெயரில் கலவரம் செய்தல், பல்வேறு மதத்தினர் இடையே பகையை மூட்டுதல்) மற்றும் 507 (தொழில்நுட்ப அடிப்படையில் பிறர் பெயரை பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேவேந்திர திவாரிக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும், கலவரம் செய்வதன் மூலம் பாஜக-வில் பெரிய தலைவர் ஆக வேண்டும் என்று அவரே திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஓம்பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹர் சிங் ஆகிய இருவரும் முஸ்லிம்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்புவதற்காக ஜுபைர் கான் (zubairkhanisi199@gmail.com) மற்றும் ஆலம் அன்சாரி (alamansarikhan608@gmail.com) என்ற பெயரில் போலி ஐடிகளை உருவாக்கியுள்ளனர்.

காவல்துறையினரின் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்குப் பிறகு, முஸ்லிம் பெயரில் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கிய ஓம்பிரகாஷ் மிஸ்ராவையும் மற்றும் தஹர் சிங்கையும், பயன்படுத்திய லேப்டாப் உபகரணங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடித்து கைது செய்ததன் மூலம், நடக்கவிருந்த பெரும் மதக்கலவரம் முறியடிக்கப் பட்டுள்ளது.  – சத்தியமார்க்கம்.காம் 


கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)


காந்தியைச் சுட்டுக் கொன்றது முதல் காலம் காலமாக, கலவரம் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போடுவது சங் பரிவாரத்தினரின் வழக்கம். சமீபத்திய சில செய்திகளின் தொகுப்பு:


Share this: