வகுத்தவன் உதவி
வந்திட்டபோது – வழிவகை
விதித்தவன் வெற்றி
வாய்த்திட்டபோது
அலையலையாய் யாவரும்
அணி திரண்டுவந்து
ஆண்டவன் மார்க்கத்தில்
அவர் இணையும்போது
ஆண்டவன் புகழை
அதிகம் துதித்திடுவீர் – அவன்றன்
அளப்பரிய அருளை
அழுது கேட்டிடுவீர்;
மன்னிப்பை ஏற்குமந்த
மாண்புடையோன் முன்னிலையில் – எல்லாப்
பாவமும் பிழைகளும்
பொறுத்தருள வேண்டிடுவீர்!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 110 அந் நஸ்ரு)
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்