சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 86

Share this:

86. ஹமா கொம்புப் போர்

சிரியாவில் நிகழும் அரசியல் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார் மோஸுலின் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf ad-Deen Ghazi II). ஸலாஹுத்தீனின் அதிகாரமும் ஆளுமையும் மாபெரும் சக்தியாக அவர் உருவாவதும் அவரது செல்வாக்கு பரந்து விரிவதும் ஸைஃபுத்தீனுக்குப் பெரிதும் கவலையளித்தன; அச்சமூட்டின. அலெப்போ மட்டுமே ஸலாஹுத்தீனிடம் விழாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அது அவரிடம் வீழ்ந்து விட்டால், அடுத்து அவரது பார்வை மோஸுலுக்குத் திரும்பும்; தமது ஆட்சி பறிபோகும்; அதனால் இப்பொழுதே அலெப்போவுடன் கூட்டணி அமைத்து ஸலாஹுத்தீனுக்குக் கடிவாளம் இட வேண்டியது முக்கியம் என அவர் நினைத்தார். அதற்கேற்ப இளம் மன்னர் ஸாலிஹ் உதவிப் படை கேட்டு அனுப்பிய கோரிக்கையும் மோஸுலுக்கு வந்து சேர்ந்தது. தாமதிப்பாரா ஸைஃபுத்தீன்? படை திரட்டினார். ஸின்ஜாரின் ஆட்சியாளரான தம் சகோதரர் இரண்டாம் இமாதுத்தீன் ஸெங்கிக்கு, (Imad ad-Deen Zangi II), ‘நீயும் படையுடன் கிளம்பி வந்து இணையவும்’ என்று தகவல் அனுப்பினார்.

‘முடியாது’ என்று பதில் அனுப்பினார் இமாதுத்தீன். ஏன்? மேற்கொண்டு தொடரும் முன் இராக்கின் அரசியலை 72ஆம் அத்தியாயத்திலிருந்து சிறிது எடுத்து இங்கு அசைபோடுவோம்.

இமாதுத்தீன் ஸெங்கி மரணமடைந்த பின் அவருடைய மூத்த மகன் முதலாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf al-Din Ghazi I) மோஸுலுக்கும், இளையவர் நூருத்தீன் அலெப்போவுக்கும் அதிபர்கள் ஆகியிருந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலாம் ஸைஃபுத்தீன் இறந்துவிட்டார். அவருக்குப் பின் மற்றொரு சகோதரர் குத்புத்தீன் மவ்தூத் மோஸுலின் அதிபரானார். இருபது ஆண்டுகாலம் நீடித்தது அவரது ஆட்சி.

குத்புத்தீன் மவ்தூதுக்கு மூன்று மகன்கள் முறையே: இரண்டாம் இமாதுத்தீன் ஸெங்கி, இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி, இஸ்ஸத்தீன் மஸ்ஊத் ஆகியோர். இரண்டாம் இமாதுத்தீன் ஸெங்கி தம் பெரியப்பா நூருத்தீனின் மகளைத் திருமணம் முடித்து அவருக்கு மருமகனாகவும் ஆகியிருந்தார். குத்புத்தீன் தமது இறுதிக் காலத்தில் மோஸுலின் ஆட்சியை இமாதுத்தீனுக்கு அளிக்க விரும்ப, அதை இடையில் புகுந்து குழப்பினார் ஆட்சி நிர்வாகி ஃபக்ருத்தீன் அப்துல் மஸீஹ். தம் திட்டப்படி இரண்டாம் ஸைஃபுத்தீனை மோஸுலின் அதிபராகவும் ஆக்கிவிட்டார் அவர். விளைவாக இமாதுத்தீன் நூருத்தீனிடம் உதவி கோர அவர் படையுடன் கிளம்பி வந்து, நிலைமையைச் செப்பனிட்டு. . .. ஒருவழியாக இமாதுத்தீனுக்கு ஸின்ஜார் ஆட்சி, ஸைபுத்தீனுக்கு மோஸுல் என்று ஆட்சி பாகம் பிரிக்கப்பட்டது. வேண்டா வெறுப்புடன் பெரியப்பா நூருத்தீனுக்குக் கட்டுப்பட்டிருந்த இரண்டாம் ஸைஃபுத்தீன், அவர் மரணமடைந்ததும் கட்டவிழ்த்துக் கொண்டதையே முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.

என்னதான் ஸின்ஜாரின் ஆட்சியாளராக ஆகியிருந்தாலும் மோஸுலின் அதிபதியாக இருந்த தம்பி ஸைஃபுத்தீனிடம் அண்ணன் இமாதுத்தீனுக்குப் பெரிதாக இணக்கம் ஏற்படவில்லை. மாறாக, ஸலாஹுத்தீன் மீது அபிமானம் ஏற்பட்டு, அவரது ஆதரவளராக ஆகியிருந்தார். இந்நிலையில் ஸலாஹுத்தீனுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க தம்பி கூப்பிட்டால் அண்ணன் வந்து விடுவாரோ? முடியாது என்று தெரிவித்துவிட்டார். ‘அப்படியா சேதி. இருக்கட்டும் இதோ வருகிறேன்’ என்று கறுவிய ஸைஃபுத்தீன் தம் மற்றொரு சகோதரர் இஸ்ஸத்தீன் மஸ்ஊத் தலைமையில் அலெப்போவுக்குப் படைகளை அனுப்பிவிட்டு, தம்முடன் இணைய மறுத்த இமாதுத்தீனை அடக்க ஸின்ஜாரின் மீது படையெடுத்தார்; முற்றுகையிட்டார். ஆனால் வலிமையுடன் அதைத் தற்காத்து எதிர்த்து நின்றார் இமாதுத்தீன்.

இங்கு இவ்விதம் சகோதரர்கள் போரிட்டபடி இருக்கட்டும். அதற்கு முன் ஸைஃபுத்தீன் அனுப்பிய படையினருக்கு அங்கு சிரியாவில் நேர்ந்த கதியைப் பார்த்துவிட்டுப் பிறகு இங்கு வருவோம்.

oOo

இஸ்ஸத்தீன் மஸ்ஊத் தலைமையில் கிளம்பி வந்த படை அலெப்போவை அடைந்தது. அங்கிருந்த படைகளுடன் ஒன்றிணைந்தது. பெரும் எண்ணிக்கையில் திரண்டது கூட்டணிச் சேனை. அந்நிலையிலும் ஸலாஹுத்தீன் ஆயுதப் பூசலைத் தவிர்க்கவே விரும்பினார். ஸைஃபுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார். நான் கைப்பற்றியுள்ள ஹமாவையும் ஹும்ஸையும் தந்துவிடுகிறேன்; டமாஸ்கஸ் மட்டும் என் வசம் இருக்கும்; மன்னர் ஸாலிஹின் ஆளுநராக அதை நிர்வகிப்பேன் என்று பேரம் பேசிப் பார்த்தார். அதற்கெல்லாம் ஸைஃபுத்தீன் இணங்குவதாக இல்லை. சிரியாவில் உன் வசம் இருக்கும் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு எகிப்துக்குத் திரும்பு என்று பதில் அளித்துவிட்டார். குமுஷ்திஜினும் இஸ்ஸத்தீனும் கைகோர்த்துக்கொண்ட அலெப்போ-மோஸுல் கூட்டணிப் படை அலெப்போவுக்குத் தெற்கே ஸலாஹுத்தீன் வசமாகியிருந்த ஹமாவை முற்றுகையிட்டது. அவருக்கும் போரைத் தவிர வேறு வழி இல்லை என்றாகி விட்டது. ஹமாவுக்கு அணிவகுத்தது அவரது தலைமையிலான படை.

ஸலாஹுத்தீனின் படையினரை விட அலெப்போ-மோஸுல் கூட்டணிப் படை எண்ணிக்கை மிக அதிகம். எனவே ஸலாஹுத்தீன் எகிப்திலிருந்து துணைப்படை வருவதற்குக் காத்திருந்தார். அவருடைய சகோதரர் மகன்கள் ஃபாருக்‌ஷா, தகீயுத்தீன் தலைமையில் அது வந்துகொண்டிருந்தது. இதனிடையே, முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்பட வேண்டாம் என்ற நோக்கத்தில் ஸலாஹுத்தீன் குமுஷ்திஜினுடனும் இஸ்ஸத்தீனுடனும் சமாதானம் பேசிப் பார்த்தார். குமுஷ்திஜினும் பேச்சுவார்த்தை நிகழ்த்தி உடன்படிக்கை ஏற்படுத்தவே விரும்பினார். தமக்கு அதுவே ஆதாயம் என்று அவருக்குத் தோன்றியது. ஏனெனில்,

நூருத்தீன் அலெப்போவில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தியிருந்தார். அது பாரம்பரியமாக மோஸுலுக்கு இருந்துவந்த ஆட்சியதிகார மேலாண்மையை அலெப்போவின் பக்கம் திருப்பியிருந்தது. இப்பொழுது அந்த அலெப்போவைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த குமுஷ்திஜினுக்கு ஸலாஹுத்தீனை முற்றிலும் நசுக்கும் நோக்கம் குறைந்து போனது. ஏனெனில் போர் நிகழ்ந்து ஸலாஹுத்தீனைத் தோற்கடித்து அவரை சிரியாவிலிருந்து வெளியேற்றி விட்டால் மோஸுலின் ஸைஃபுத்தீனுக்கு குமுஷ்திஜின் கட்டுப்பட்டவராக ஆகிவிட நேருமல்லவா? அப்படியன்றி, சண்டை போடாமல் ஸலாஹுத்தீன் தாம் அண்மையில் கைப்பற்றிய இடங்களை அலெப்போவுக்கு விட்டுத் தருவதாக இருந்தால் அது பெருத்த இலாபமல்லவா? மோஸுல் படை வந்ததன் பலனையும் அறுவடை செய்யலாம்; மோஸுலுக்கு சிரியாவில் பங்கும் பிடிமானமும் இல்லாமலும் ஆக்கலாம்; தாம் தம்மிஷ்ட அதிபதியாகத் தொடரலாம் என்று கணக்குப் போட்டார் குமுஷ்திஜின்.

இருதரப்புக்கும் இடையே தகவல் பரிமாற அங்கும் இங்குமாகத் தூதுவர்களின் போக்குவரத்து பரபரத்தது. ஸலாஹுத்தீனும் பெருமளவு இணங்கிச் செல்லவே முற்பட்டார். டமாஸ்கஸை மட்டும் வைத்துக்கொண்டு, தாம் அதில் அஸ்-ஸாலிஹின் ஆளுநராக மட்டுமே இருந்துகொண்டு, ஹும்ஸ், ஹமா, பால்பெக் ஆகியனவற்றை அலெப்போவுக்கு அளித்துவிடுவதாகக் கூறினார். கருவூலத்திலிருந்து மக்களுக்கு வழங்கப்பட்ட பணத்தையும் தாம் கருவூலத்துக்குத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறினார். அனைத்துமே தாராள சலுகைகள்; அலெப்போவுக்கு மேலாண்மை அளிக்கும் முடிவுகள். அவற்றை ஏற்று அத்துடன் அவர்கள் திருப்தி அடைந்திருந்தால் அலெப்போ வெற்றியடைந்திருக்கும். ஆனால் அலெப்போ-மோஸுல் கூட்டணி, குட்டக் குட்டக் குனிகிறாரே இவர் என்று அதை ஸலாஹுத்தீனின் பலவீனமாகக் கருதியது; அவரை மேலும் நெருக்கும் விதமாக ரஹ்பா என்ற பகுதியையும் விட்டுத் தரச் சொல்லி வற்புறுத்தியது; தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டது.

ஸலாஹுத்தீனின் சிற்றப்பா அஸாதுத்தீன் ஷிர்குஹ்வுக்கு சொந்தமாக இருந்த பட்டணம் ரஹ்பா. ஷிர்குஹ் மரணமடைந்த பின் அது நூருத்தீன் வசம் சென்றிருந்தது. நூருத்தீனின் மறைவுக்குப் பின், அதை அவருடைய அடிமைகளிடமிருந்து மீட்டு ஷிர்குஹிவின் மகன் நாஸிருத்தீனுக்கு அளித்திருந்தார் ஸலாஹுத்தீன். அதையும் குமுஷ்திஜின் பறிக்க விரும்பியதும் ஸலாஹுத்தீனின் பொறுமை முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தையை முற்றிலும் முறித்தது. அந்நிலையில் கூட்டணிப் படைக்கோ ஸலாஹுத்தீனைப் போரில் எளிதில் தோற்கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

ஹமா நகரின் வடக்கே 8 கி.மீ. தொலைவில் ஒரு மலை. அதற்கு இரட்டை உச்சி. அதனால் ஹமாவின் கொம்புகள் (Horns of Hamah) (قرون حماة) என்பது அதன் பெயர். 19 ரமளான் 570 / 13 ஏப்ரல் 1175 அங்கு நிகழ்ந்தது போர். சரியான நேரத்தில் ஸலாஹுத்தீன் எதிர்பார்த்திருந்த துணைப்படையும் எகிப்திலிருந்து அப்பொழுது வந்து சேர்ந்திருந்தது. ஒரு போர் நிகழ்கிறது என்று சொல்வதற்குக் கூட அவகாசம் இல்லாமல் அடுத்து நடந்தவை மின்னல் வேகம். என்ன, ஏது என்று நிதானிப்பதற்குள் வெகு எளிதில் அலெப்போ-மோஸுல் கூட்டணிப் படை துடைத்து எறியப்பட்டது. தூசு பறக்க, பின்னங்கால பிடரியில் படத் தெறித்து ஓடினார்கள் அவர்கள். பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் அதை, ‘ஓர் உயிர் கூடப் பலியாகாமல் எதிரிகளைக் கண்ணாடியைப் போல் நொறுக்கினேன்’ என்று விவரித்துள்ளார்.

வியக்கத்தக்க முறையில் அந்தப் போரில் முஸ்லிம்களின் உயிர் பலியாகாமல் தடுத்திருக்கிறார் ஸலாஹுத்தீன். அவர் மட்டும் கட்டளையிடாமல் இருந்திருந்தால் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும்; தலைகள் பல உருண்டிருக்கும்; குருதி ஓடை உருவாகியிருக்கும். ஆனால், களத்தில் புகுந்து எதிரிப் படையினர் எவரும் கொல்லப்படாமல் தடுத்துவிட்டார் அவர். எனினும் களத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் பலரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். போர் வெகுமானங்களாக ஏராளமான ஆயுதங்களும் போர்த் தளவாடங்களும் குதிரைகளும் கைப்பற்றப்பட்டன.

கூட்டணிப் படையினரின் முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிட்டார் ஸலாஹுத்தீன். மதுக்கூடங்கள் போல் காட்சிளித்தன அவை. ஏராளமான சாராயக் குடுவைகள்; இசைக் கருவிகள்; நூற்றுக்கணக்கில் பாடகிகள். ‘இத்தகு பாவங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று தம் படையினர் அறிய இறைஞ்சினார் அந்த மாமன்னர். சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி!

தோல்வியுற்ற படை அலெப்போவுக்குத் திரும்பியது. நகர வாயில் வரை அந்தக் கூட்டணிப் படையைத் துரத்தி வந்த ஸலாஹுத்தீன் இப்பொழுது இரண்டாம் முறையாக அதை முற்றுகையிட்டார். முந்தைய பேச்சுவார்த்தையில் மமதையிலிருந்த குமுஷ்திஜின் இப்பொழுது தோற்றுப்போய் மனமொடிந்து சமாதானம் வேண்டினார். ஸலாஹுத்தீன் சிரியாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பொறுமையும் தாராளமும் மிகைத்திருந்தன என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அவை இச்சமயமும் அரங்கேறின. பேச்சுவார்த்தையில் தம் கை ஓங்கியிருந்த போதும், போரில் தோற்ற அலெப்போவின் நிலை பலவீனமாக இருந்த போதும் வியக்கத்தக்க முறையில் அவரது நடவடிக்கைகள் வெகு மென்மையாக இருந்தன. இன்று இவர்கள் எதிரிகளாக இருக்கலாம். ஆனால், நாளை பரங்கியர்களுடனான ஜிஹாதிற்கு அவர்கள் கூட்டாளிகள் ஆக வேண்டும் என்பதே அவரது தொலைநோக்குத் திட்டமாக இருந்தது. ஆகவே பழிவாங்கும் எண்ணம் கூடாது என்பதில் அவர் மிக மிகக் கவனமாக இருந்தார். போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அலெப்போவும் சில பகுதிகளை அவருக்கு அளித்து சமாதானம் பேசியது. வேறு சில உடன்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. அவை:

‘இளம் மன்னர் ஸாலிஹ் அலெப்போவில் மன்னராக நீடிப்பார்; குமுஷ்திஜினின் பாதுகாவலில் தொடர்வார். நூருத்தீனின் மகன் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் தாம் கோரிய உரிமையை ஸலாஹுத்தீன் கைவிடுவார். அவரவர் வசமுள்ள பகுதிகள் அவரவருக்கு. ஸலாஹுத்தீன் வசம் உள்ள பகுதிகளுக்கு அவருக்கே அதிகாரம் என்பதை அலெப்போ ஏற்றுக்கொள்ளும். பரங்கியர்களுக்கு எதிராக ஸலாஹுத்தீன் போர் தொடுக்கும்போது அவரது தலைமையின் கீழ் அலெப்போ வந்து இணைய வேண்டும்’.

அலெப்போவைச் சரணடைய வைக்குமளவிற்கு நீண்ட முற்றுகைக்கான நேரமோ, ஆதார வளங்களோ ஸலாஹுத்தீனிடம் அச்சமயம் இல்லாததால் இந்த உடன்படிக்கையை அவரும் ஏற்றுக்கொண்டார். அது கையெழுத்தானது. முற்றுகை கைவிடப்பட்டது. அதையடுத்து, ஏப்ரல் இறுதியில் மன்னர் ஸாலிஹின் பெயர் நாணயங்களில் இனி இடம்பெறக் கூடாது என்று ஸலாஹுத்தீன் கட்டளையிட்டார். அவரது பெயர் குத்பாவிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார். மாறாக நாணயங்களில் ஸலாஹுத்தீனின் பெயரும் குத்பாவில் அவருக்கான இறைஞ்சலும் சேர்க்கப்பட்டன.

1175 மே மாத மத்தியில் டமாஸ்கஸ் திரும்பினார் ஸலாஹுத்தீன். கலீஃபாவின் தூதர்கள் வந்து அவரைச் சந்தித்தனர். சம்பிரதாயமாகப் பரிசுகளையும் அனுப்பியிருந்தார் கலீஃபா. அலெப்போவைத் தவிர இதர பகுதிகளுக்கு ஸலாஹுத்தீனே சுல்தான் என்ற கலீஃபாவின் அங்கீகாரத்தை அவர்கள் முறைப்படி அறிவித்தனர்.

இவ்வாறாக, எகிப்துக்கும் சிரியாவின் பெரும் பகுதிகளுக்கும் அவரே சுல்தான், ஆட்சியாளர்; அவரே நூருத்தீனின் உண்மையான பிரதிநிதி என்றானதும் அலெப்போவும் மோஸுலும் ஜெருசலமும் பொருமிக்கொண்டிருந்தன. சமாதான உடன்படிக்கையை முறித்து, மீண்டும் சண்டையைக் கிளப்பக் காத்திருந்தன.

அவை-

(தொடரும்)


Share this: