இலண்டனில் இருக்கும் மையப் பள்ளியின் இமாம்களில் ஒருவர் மீது கடும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக வளர்ந்து வரும் வெறுப்பினால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலாக இருப்பதை அறிய முடிகிறது.
இலண்டன் மையப்பள்ளியின் 58 வயதான இமாமிடம், கடந்த வெள்ளியன்று (10/8/2007) காலையில் 40 வயது மதிக்கத்தக்க ஐரிஷ் மனிதர் வந்து, தான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினார். அவரை வரவேற்ற இமாம் அவருக்கு பேரீச்சைக் கனிகளை அளித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார். அதனை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பாசாங்கு செய்த ஐரிஷ் நபர் திடீரெனத் தரையில் குப்புறப் படுத்து ஏதேதோ மந்திரங்களைச் சொன்னார். பின்னர் விருட்டென எழுந்து இமாமை இரத்தம் வரும் அளவுக்குக் கண்மூடித்தனமாகத் தாக்கி அவரைத் தரையில் தள்ளினார். இமாம் அவர்களின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவரது கண்களைத் தனது இரு விரல்களால் குத்திக் காயப் படுத்தினார்.
இதனால் நிலைகுலைந்த இமாம் உதவி கேட்டுக் கூச்சல் எழுப்பினார். இதனால் மஸ்ஜிதில் பணியில் இருந்த காவலாளிகள் ஓடிவந்து இமாமை ஐரிஷ் நபரிடம் காப்பாற்றினர். காவல்துறையின் அவரசப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐரிஷ் நபர் கைது செய்யப்பட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இமாம் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மஸ்ஜிதின் இயக்குனர் டாக்டர். அஹ்மத் அல் துபயான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நிச்சயமாக பெருகிவரும் இஸ்லாமோஃபோபியாவின் விளைவு தான் என்றும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து மஸ்ஜித்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி: முஸ்லிம் நியூஸ்