இறால் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களைச் சமைத்து உண்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையோ அனுமதியோ இருப்பதாக கூறப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் மூலம் அவற்றை உண்பது ஆகுமானதே எனும் முடிவுக்கு நாம் வரலாம்.
கடல் நீர் சுத்தமானதே அதில் இறந்துபோனவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டவைகளே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்கள்: அபூதாவுத்,திர்மீதி,நஸயீ,இப்னுமாஜா
மேலும்
புகாரி 5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
'கருவேல இலை' ('கபத்') படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது 'அம்பர்' என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)
மேலே கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் தான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் செயல்பட்டார்கள் என்பதையும் அறியமுடிகின்றது. ஆக கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே அனுமதிக்கப்பட்டவையே எது உடலுக்கு தீங்கு என நீங்கள் கருதுகின்றீர்களோ அதை தவிர.