ஜெருசலம் (அல்-குத்ஸ் அஷ்ஷரீஃப்): முஸ்லிம்களின் மூன்று புனிதத் தலங்களுள் ஒன்றான அல் அக்ஸா பள்ளியைச் சுற்றிப் பெரும் பள்ளங்கள் தோண்டி அப்பள்ளியின் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்ய இஸ்ரேல் கெடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவதையும், ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் நமது சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே பதிவு செய்திருந்தோம்.
இந்தக் கெடுதல் நடவடிக்கையின் முதல் விளைவுகள் தற்போது தென்படத் தொடங்கி விட்டன. அக்ஸா பள்ளியைச் சுற்றியிருக்கும் நடைபாதையில் சனியன்று (16/02/2007) உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் உட்புறமாக மண்சரிவு ஏற்பட்டுப் பெரும் பள்ளம் தோன்றியுள்ளது. இரண்டு மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட இப்பள்ளம் அக்ஸா பள்ளியின் அல்-ஸில்ஸிலா வாயிலின் அருகே தோன்றியுள்ளது.
இஸ்ரேலில் தடை செய்யப்பட்டுள்ள ‘இஸ்ரேலில் இஸ்லாமிய இயக்கம்’ (Islamic Movement in Israel) என்ற அமைப்பு, இந்த மண்சரிவிற்கு அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்ரேல் மேற்கொண்டுவரும் பெரும் பள்ளம் தோண்டும் பணியே காரணமாகும் என்றும் உடனடியாக உலக முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை இப்பணியை நிறுத்த சர்வதேச சமூகம் மூலம் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
அல் அக்ஸா பள்ளி அமைந்துள்ள இடத்தில் மாபெரும் யூதக் கோயிலொன்றை நிர்மாணிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது இங்உ குறிப்பிடத்தக்கது.