அறம் எனப்படுவது ……!

Share this:

சாலையோரத்தில் கிடந்த பணம் நிறைந்த ஒரு பை.  அதைப் பாதுகாப்பாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டாம் வகுப்பு மாணவன்!

பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்யத் தயங்காத இந்தக் காலத்தில், நேர்மையும் நன்னெறியும் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டியிருக்கின்றான் தமிழ்நாட்டின் இந்தக் குட்டிச் சிறுவன்.

ஈரோடு மாவட்டம் சின்னசெமூர் கிராம அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முகமது யாசீன் என்பவன்தான் தற்போது சமூக வலைதளங்களிலும் மக்களின் இதயங்களிலும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றான்.

பள்ளிக்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் யாரோ விட்டுச்சென்றிருந்த ஒரு பையை யாசீன் கவனித்தான். அதைத் திறந்து பார்த்த அந்தச் சிறுவன் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தான்! சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கட்டுகள் அந்தப் பையில் இருந்தன.

ஆனால் ஒரு ரூபாய்கூட எடுத்துக் கொள்ள அந்தக் குழந்தை மனம் சம்மதிக்கவில்லை. உடனே தனது வகுப்பு ஆசிரியை ஜெயந்தி மேடத்திடம் அந்தப் பையை ஒப்படைத்தான். ஆசிரியர்கள் மூலம் தகவல் அறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அவர்களுக்கு, யாசீனின் இந்தச் செயல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.

பரிசாக முதலில் 1000 ரூபாயும் பின்னர் 2500 ரூபாயும் வழங்க முயன்றபோதும், தன்னம்பிக்கையுடன் அந்த குட்டிச் சிறுவன் அதை மறுத்துவிட்டான்!

இறுதியில் அந்த அதிகாரி, யாசீனையும் அவன் சகோதரனையும் கடைக்கு அழைத்துச் சென்று புதிய யூனிஃபார்ம், ஷூ, உடைகள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தார்.

சாலையோரத்தில் துணி வியாபாரம் செய்து, தினமும் 300 முதல் 500 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கும் சாதாரண மனிதர்தான் யாசீனின் தந்தை. இல்லாத நிலையிலும் தன் மகன் காட்டிய இந்த நேர்மையை நினைத்து இன்று அந்த தந்தையின் மார்பு பெருமையால் நிரம்பியுள்ளது.

சிறிய தொகைக்காகவே உறவுகளை உடைக்கும் மனிதர்கள் இருக்கும் இந்த உலகத்தில், யாசீன் போன்ற குழந்தைகள்தாம் நாளைய பெரிய நம்பிக்கை. வறுமையிலும் அந்தக் குழந்தைக்கு நல்ல மதிப்புகளையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த பெற்றோருக்கு மனமார்ந்த வணக்கம்!

உன்னை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம் மகனே…

அன்றும் இன்றும் நன்மைக்குத்தான் மதிப்பு!

நன்றி : வினித் குமார்


Share this: