வள்ளியூர். ஜன.3 – குமரி மாவட்டம் மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்சந்திரன் (வயது 44)
இவர் பாரதீய ஜனதா கட்சியில் வர்த்தகர் பிரிவு மாநில துணை தலைவராக உள்ளார்.
நேற்று இவர், கையில் கத்திக்குத்து காயத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அவரிடம் வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் கூறியதாவது:
“நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கஸ்தூரி ரெங்கபுரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பினேன். வள்ளியூர் அருகே வரும் போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் காரை மறித்து கத்தியால் குத்தினர்” என்றார்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேல்சந்திரனின் கார் டிரைவர் அருண்குமாரைப் பிடித்து விசாரித்தனர்.
கார் டிரைவரோ “வேல்சந்திரனை யாரும் கத்தியால் குத்தவில்லை. அவரே கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்” எனக் கூறினார்.
போலீஸ் பாதுகாப்புக்காகவும், தேர்தலில் எம்.பி சீட் பெறுவதற்காகவும் அவர் நாடகமாடியதை காவல்துறையின் விசாரணையில் டிரைவர் அருண்குமார் தெரிவித்தது கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.