பா.ஜனதா நிர்வாகி மர்மச்சாவு: கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

குன்னூர், ஜூலை 8–

நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குன்னூர் நகர பா.ஜனதா பொதுச் செயலாளராக இருந்தார்.

இவருக்கும் குன்னூர் ரெயில்வே காம்பவுண்டை சேர்ந்த கோகிலா (32) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது.

கோகிலா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். ஒரு மகன் உள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். நேற்று இரவு மணிகண்டன் ரெயில்வே காலனியில் உள்ள கோகிலா வின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்ற சில மணி நேரத்தில் கோகிலா குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போன் செய்து 108 ஆம்புலன்சை வர வழைத்தார். அதில் மயங்கிய நிலையில் மணிகண்டனை ஏற்றிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலறிந்ததும் மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். மணி கண்டனின் உறவினர்கள் கோகிலாதான் மணிகண்டனை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் செய்தனர்.

மேலும் மணிகண்டனின் பிரேத பரிசோதனை குன்னூரில் நடக்கக்கூடாது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்தால்தான் உண்மை வெளிவரும். எனவே அங்கு பிணத்தை கொண்டு செல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே போலீசார் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். முதலில் கோகிலா திடீரென்று மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார் என தெரிவித்தார். பின்னர் அவரை யாரோ அடித்து உதைத்து படுகாயத்துடன் மயங்கிய நிலையில் தனது வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு சென்று விட்டனர் என முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனால் போலீசாருக்கு கோகிலாவின் மீது சந்தேகம் வலுத்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணிகண்டன் இறந்த தகவல் கிடைத்ததும் பா.ஜனதா தொண்டர்கள் ஆங்காங்கே பரபரப்பாக தென்பட்டனர்.

இதன் காரணமாக பதட்டம் நிலவியது. இதைத் தொடர்ந்து குன்னூர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: மாலை மலர் (08-07-2014)