இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத ஆக்ரமிப்பா?

புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத உளவுபடையினர் கலந்துள்ளனர் என்று நேற்று டெல்லியில் கூடிய இந்திய முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் கூறியது. தீவிரவாதமும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என்ற விஷயத்தைக் குறித்து விவாதம் செய்வதற்காக இக்கூட்டம் நேற்று இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் கூடியது. இதில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

நாட்டில் நடக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளோடு எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல் குருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயம் முழுமையையும் தொடர்பு படுத்திக் குற்றவாளியாக்கும் ஊடகங்களின் செயல்பாட்டைத் தடைசெய்ய வேண்டும் என இவ்விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

எங்கு தீவிரவாதச் செயல்கள் நடந்தாலும் அதனைச் செய்தவர்களைக் குறித்து எவ்வித தகவலோ தடயமோ கிடைப்பதற்கு முன்பாகவே முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்துக் கொண்டு செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் அனைத்தும் ஒருமித்து செயல்படுகின்றன. ஊடகங்களுக்குத் தீர்ப்பு கூறும் அதிகாரத்தை இந்தியாவில் எவரும் வழங்கவில்லை. இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" மற்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான "சி.ஐ.ஏ" வின் ஏஜண்ட்கள் இந்திய ஊடகங்களில் ஊடுருவி நுழைந்திருப்பதன் விளைவால் தான் இந்திய ஊடகங்கள் விஷமத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகத் தீர்ப்பு கூற விழைகின்றன. இந்த அயோக்கியச் செயல்பாட்டை இந்திய ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என இதில் பங்கெடுத்த அறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்த பொழுது அதனை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் நடத்திய பேரணிகளோ முஸ்லிம் தலைவர்கள் நடத்திய பத்திரிக்கைக் கூட்டங்களோ முக்கிய பத்திரிக்கைகளில் ஒரு செய்தியாக கூட வெளிவரவில்லை. ஆனால் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மஹாராஷ்டிரா காவல்துறை கூறிய சந்தேகத்திற்கிடமான கதைகளை முஸ்லிம் சமுதாயத்தோடு தொடர்பு படுத்தி முன் பக்கத்தில் தருவதில் அனைத்து முக்கியப் பத்திரிக்கைகளும் போட்டியிட்டன. அதே சமயம் காவல்துறை கூறிய கட்டுக்கதைகளுக்கு மாற்றமாக சம்பவ இடத்தில் வசித்திருந்த பொதுமக்கள் கூறிய காவல்துறையின் விசாரணை நாடகங்களைக் குறித்த சந்தேகங்களில் இவை எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே போல் பஜ்ரதங்கள் நடத்தும் குண்டுவெடிப்புகள், தேசவிரோதச் செயல்களும் பத்திரிக்கைகளில் செய்தியாவதில்லை. நடுநிலையான பார்வையுடன் கூடிய உண்மையான செய்திகள் மட்டுமே நாட்டு முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று இந்த விவாத அரங்கில் பங்கு கொண்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் செய்தி ஊடகத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, சமூக சேவகி டீற்றா செட்டல்வாத், பிரபல தேசிய பத்திரிக்கைகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.