கேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியை கேட்ட சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.
பச்சைக் குத்துதல் இஸ்லாத்தில் கூடாத செயலாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும், அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி.
சவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி.
அல்லாஹ்வின் சாபம் பச்சை குத்துவோரின் மீது இறங்குகின்றது என்பது ஒன்றே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகவே பச்சைக் குத்திக் கொள்ளுதல் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என எச்சரித்துள்ளதாலேயே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இறைவனே மிக்க அறிந்தவன்.