{mosimage}பிரிட்டோரியா: ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கான சில வன்சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது. ''ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்தான சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் விரிவான புதிய அறிக்கை வெளிவர இருக்கையில், இவ்விஷயத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன?'' என ஐநா பாதுகாப்புச் சபை உறுப்பினரான தென்ஆப்பிரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரானுக்கு எதிராக மூன்றாம் கட்டப் பொருளாதாரத் தடைக்குத் தயாராகும் தீர்மானம் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கிடையில் சென்ற நாட்களில் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுக்குப் பயணத்தடை, அவர்டம் நிறுவனங்களின் சொத்து முடக்கல், ஈரானின் பொருளாதார நிறுவனங்களைக் கண்காணித்தல் போன்ற ஆலோசனைகள் தீர்மானத்தில் இருக்கின்றன.
"பிப்ரவரி 20 அன்று சர்வதேச அணு ஆயுதக் கழகத்தின் அறிக்கை வெளிவரும். ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கும் பொழுது அதற்குத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கைவசம் உள்ளது என உறுதி படுத்தப்பட வேண்டும். நிரபராதிகளான ஒரு சமூகத்தை நாம் தண்டித்து விட்டால் அதன் பின்விளைவு எப்படி இருக்கும்?'' என தென்ஆப்பிரிக்காவின் ஐநா பாதுகாப்புச் சபை பிரதிநிதி துமிசானி குமாலோ கேள்வி எழுப்பினார்.
கூடுதல் தகவல்கள்:
1. ஈரான் அடுத்த மூன்று வருடங்களில் அணு ஆயுதம் தயார் செய்யும் என மொசாத் கூறியுள்ளது. இது அமெரிக்காவின் CIA கூறிய 2015க்குள் ஈரானால் அணு ஆயுதம் தயார் செய்ய இயலாது என்ற அறிக்கைக்கு நேர் மாறானதாகும். சிரியா மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு அதிக வீரியமுள்ள ராக்கட்டுகள் கொடுப்பதற்கு ஈரான் தயாராகி வருவதாகவும் மொசாதின் டைரக்டர் மீர் பாகன் இஸ்ரேலிய வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அளித்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2. ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்த ராக்கட் ஐரோப்பாவிற்கு அபாயத்தை விளைவிக்கும் என பெண்டகன் பிரமுகர் ஜெஃப் மோரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானிடமிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே போலந்தும் செக் குடியரசும் ராக்கட் எதிர்ப்பு தளங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்தார். முன்னர் போலந்தும் செக் குடியரசும் உருவாக்க இருக்கும் ஏவுகணை எதிர்ப்புத் தளத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாரான அமெரிக்காவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஐரோப்பாவில் உள்ள தங்களின் நட்பு நாடுகளையும் அமெரிக்கவையும் ஈரானிடமிருந்துப் பாதுகாத்துக் கொள்ளவே ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புக் களம் உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என அதற்கு அவர் நியாயம் கற்பித்தார்.