கவுகாத்தி (13 டிசம்பர் 2025): இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்று, பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்த இந்திய விமானப் படையின் (IAF) ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட் அதிகாரி குலேந்திர ஷர்மா அசாமின் தேஸ்பூரில் கைது செய்யப் பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராகப் போர் புரிவது, குற்றச் சதி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிப்பது, ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் BNS சட்டத்தின் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டு குலேந்திர ஷர்மா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாகிஸ்தான் உளவாளி குலேந்திர ஷர்மா கைது பற்றி சோனித்பூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் (எல்லை) ஹரிச்சரண் பூமிஜ் கூறியதாவது:
குலேந்திர ஷர்மாவின் கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. “எங்களுடைய தகவல் மூலங்களின் அடிப்படையிலும், கைப்பற்றப்பட்ட சாதனங்களின் ஆய்விலும், அவர் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு பாதுகாப்பு தொடர்பான நுணுக்கமான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்திருப்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. அவர் தகவல் பகிர்ந்த நபர்களின் அடையாளங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
கடந்த சில வாரங்களில் அருணாச்சல் பிரதேசத்தில் உளவு குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; நான்காவது நபரின் அடையாளம் இன்னும் காவல்துறையால் வெளியிடப் படவில்லை.
DSP பூமிஜ் மேலும் கூறுகையில், ஷர்மாவின் மின்னணு சாதனங்களில், “தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததுடன், வாட்ஸ்அப் மூலம் எதிர்தரப்பிலிருந்து வழிமுறைகளையும் பெற்றிருந்தார்” என்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் மேலதிக ஆய்வுக்காக நீதியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். பாகிஸ்தானுடன் ஷர்மாவுக்கு தொடர்புகள் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, தேஸ்பூரின் படியாசுபுரி பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரை காவல்துறை அழைத்துச் சென்றது.
குலேந்திர ஷர்மா 2002ஆம் ஆண்டு IAF-இலிருந்து ஓய்வு பெற்றவர். அதன்பின், தேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்தப் பணியை விட்டு விலகினார்.
தேஸ்பூர், ராணுவத்தின் IV கோர்ப்ஸின் தலைமையகமாகும். அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தின் பெரும் பகுதிகள், தவாங் எல்லைப் பகுதி உட்பட, அதன் செயல்பாட்டு கட்டுப்பாட்டில் உள்ளன. தேஸ்பூரின் புறநகரான சலோனிபாரியில் IAF-இன் சுகோய் விமான தளம் அமைந்துள்ளது.
https://www.dinakaran.com/retiredindianairforceofficer-arrested-spying-pakistan/


