பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி

பாபர் மசூதி : சில நினைவுகள்
Share this:

பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி

பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டது 1949 இல். மசூதி இடிக்கப்பட்டது 1992 இல். இடைப்பட்ட 42 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. சிலைகள் இப்படி சொருகப்பட்டது மட்டுமல்ல. இப்படி வன்முறையாக வைக்கப்பட்ட சிலைகளுக்கு மசூதியைத் திறந்து பூசை வழிபாடுகள் செய்யவும் நீதிமன்றம் 1950 இல் அனுமதி வழங்கியது!

பாபர் மசூதி தொடர்பான வழக்குத் தீர்ப்பு 2010 இல் வெளிவந்தது. வழக்கில் உள்ள மூன்று ‘பார்ட்டிகளில்’ இரண்டு ’பார்ட்டிகள்’ இந்துக்கள் பக்கத்தினர். ஒருவர் முஸ்லிம்கள் சார்பாக வழக்காடியவர். நீதிபதிகள் சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான், தரம்வீர் சர்மா ஆகியோர் அளித்த தீர்ப்பு 8,000 பக்கங்களைத் தாண்டி இருந்தது.

“பிரச்சினைக்குரிய பகுதி” என வரையறுக்கப்பட்ட பாபர் மசூதிக்கு உரிய 277 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்த தீர்ப்பு மூன்றில் இரண்டு பங்குகளை இரு இந்துத் தரப்பு வழக்காடிகளுக்கும், ஒரு பங்கை மட்டும் முஸ்லிம்களுக்கும் – (அதாவது சுன்னி வக்ஃப் வாரியத்திற்கும்) அளித்தது.

இந்த எட்டாயிரம் பக்கங்களையும் ஒருவர் மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தால் சட்ட விளக்கங்களைக் காட்டிலும் அவற்றில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மத, தத்துவ, வேத விளக்கங்கள் ஏராளமாக இருப்பதைப் பார்க்கலாம்.

21 பாகங்களாக 5,000 பக்கங்களில் தன் தீர்ப்பை எழுதியுள்ள நீதிபதி அகர்வால் சொல்வதைப் பார்க்கலாம்:

“அந்நாளில் – Day of Dissolution – லோகமும் இல்லை. லோகத்திற்கு அப்பாலான வெளியும் இல்லை. அதுவரை என்னதான் இருந்தது? இருப்பிடம் எங்கிருந்தது, யாருடையதாக அது இருந்தது? நமது அறிவிற்கு அப்பாற்பட்டதும் ஆழக் கடலுமான அது என்ன?”

-என்றெல்லாம் வேதங்களை ஏராளமாக மேற்கோள் காட்டி படைப்புக்கு முந்திய நிலை என்று ’விளக்குகிறார்’ நீதிபதி. தொடர்ந்து,

“எங்கிருந்து படைப்புகள் தோன்றின? எவ்வாறு தோன்றின? என்றெல்லாம் யாருக்குத் தெரியும்? யாரால் சொல்ல முடியும்? ஏனெனில் அறிஞர்களும் ஞானிகளும் கூட படைப்புக்குப் பின் தோன்றியவர்கள் தானே?”

“அப்போது மரணமும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வும் இல்லை. பகலும் இல்லை. இரவும் இல்லை.சூரியனும் இல்லை. நிலவும் இல்லை. எதுவும் அற்ற அந்த வெற்று வெளியில் ப்ரம்மம் மட்டுமே இருந்தது. தனது சொந்த ஆற்றலில் படைப்புகளைப் படைத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு அப்பாலும், அவனன்றியும் எதுவுமில்லை…”

என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறார்.

நீதிபதிகள் தீர்ப்பில் விரிவாகச் சட்ட விளக்கங்கள் அளிப்பது அறிஞர்களை மேற்கோள் காட்டுவது என்பதெல்லாம் உண்டுதான். புகழ்பெற்ற முக்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, சட்டத்தின் நுண்ணிய இழைகளைப் பிரித்துச் சொல்லி அதனடிப்படையில் நீதி வழங்குவதைத்தான் பார்த்துள்ளோம்.

வேதம், உபநிடதம் என்பதெல்லாம் ஒருசாரரின் நம்பிக்கை மற்றும் தத்துவங்கள் மட்டுமே. இவை இன்னொரு சாரரால் ஏற்க இயலாத ஒன்றாகவும் இருக்கக் கூடும். இருசாரரும் நம்பி ஏற்ற நமது சட்டங்களை விட்டு விட்டு, இரண்டில் ஒருசாரர் மட்டும் ஏற்ற நம்பிகையை அளவு கோலாகக் கொண்டு தீர்ப்பளிப்பது சாத்தியமா, சரிதானா என்பதை நாம் சிந்திப்பது அவசியம்.

இன்னொரு நீதிபதி சர்மா அவர்களோ நானூறு ஆண்டுகளாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் தொழுது வந்த பாபர் மசூதியை ”ஒரு மசூதியே இல்லை” என்றார். அதற்கான அவரது விளக்கத்தைக் (logic) கேளுங்கள். பாபர் மசூதி கோவில் ஒன்றை இடித்து அதன் மீது கட்டப்பட்டதாம். ஆனால் இந்த மூவரில் இன்னொரு நீதிபதியான கான் அம் மசூதி கோவில் எதையும் இடித்துக் கட்டப்படவில்லை என்கிறார். ஆனால் இராமர் கோவிலை இடித்துத்தான் பாபரின் தளபதி மீர்பாகி அம்மசூதியைக் கட்டினான் என ஒருசாரர் மட்டுமே கூறும் கதையை வரிக்கு வரி ஏற்றுக் கொண்ட நீதிபதி சர்மா அவர்கள் அப்படிக் கோவிலை இடித்து மசூதியைக் கட்டியதால் முஸ்லிம் நம்பிக்கைகளின்படி அது மசூதியே இல்லை என ஒரு போடு போட்டார்.

சரி. இப்படி ஒரு விளக்கம் சொல்கிறார்களே கற்றறிந்த நீதிபதிகள் இதுதொடர்பாக முஸ்லிம் மத அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் யாரையேனும் அழைத்துக் கேட்டார்களா? மசூதிக்கு முன் அங்கு கோவில் இருந்ததா என அறிந்து சொல்ல பா.ஜ.க அரசின் தொல்லியல் துறையைக் கேட்டது போல அலகாபாத் உயர்நீதிமன்றம் இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் யாரையும் கலந்து ஆலோசித்ததா என்றால் இல்லை.

சில வரலாற்றுக் குறிப்புகள்

பாபர் மசூதி வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் சிலவற்றை நாம் புரிந்துகொள்ள இயலும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் அரசுகளின் ஆதரவுடன்தான் பாபர் மசூதிக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அது ஆங்கில அரசானாலும் சரி, காங்கிரஸ் அரசானாலும் சரி, பா.ஜ.க அரசானாலும் சரி அதுதான் வரலாறாக இருந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குறிய தொடக்க காலத்தில் காங்கிரசுக்குள் தான் பா.ஜ.கவும் இருந்தது என்பதையும் நாம் கவனம் கொள்ளல் வேண்டும்.

1528 இல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்போது முஸ்லிம் ஆட்சி நடந்தது.

இதுதொடர்பான முதல் வழக்கு 1853 வாக்கில்தான் தொடரப்பட்டது. பாபர் மசூதி பிரச்சினை அப்போதுதான் தொடங்குகிறது. 1855 இல் பாபர் மசூதியை ஒட்டி நுழைவாயிலுக்கு வெளியே ஒரு பகுதியை இராமர் பெயரால் மகந்த் ரகுபர்தாஸ் என்பவரோடு ஒருசிலர் ஆக்ரமித்துத் திண்ணை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகின்றனர். பிரச்சினை இப்படித்தான் தொடங்குகிறது.

1857 இல் பகதூர்ஷா தலைமையில் சிப்பாய்ப் புரட்சி வெடிக்கிறது. அதில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக நின்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையை எதிர்க்கின்றனர். ஆங்கிலப் படைகள் புரட்சியை ஒடுக்கி இந்தியத் துணைக் கண்டம் விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். அந்நியச் சுரண்டலுக்கு எதிராக இப்படி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாய்த் திரள்வதை ஆங்கில அரசு விரும்பாததை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

புரட்சி நடந்த அதே ஆண்டில் மசூதி வளாகத்தில் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த “ராம் சபுத்ரா” எனும் முன் குறிப்பிட்ட அந்தத் திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலி அமைத்து இராமர் சிலை உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அன்றைய ஆங்கிலேய அரசு அனுமதித்தது. எனினும் அந்தத் திண்ணைமீது கூரை அமைக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இப்படியாகப் பிரச்சினை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆங்கிலேய அரசைப் பொருத்த மட்டில் இந்திய மக்களிடையே இப்படியான ஒரு மோதல் இருப்பது அதற்குத் தேவையாக இருந்தது. அதுவும் சிப்பாய்ப் போராட்டத்திற்குப் பின் அவர்களுக்கு அது கூடுதலாகத் தேவைப்பட்டது.

ரகுபர்தாஸ் வழக்குத் தொடர்ந்தும் பயனில்லை. முஸ்லிம்கள் மசூதியில் தொழுவதும் இவர்கள் வெளியில் இருந்த இந்தத் திண்ணையில் உள்ள விக்கிரகங்களுக்குப் பூசைகள் செய்வதும் (limited rights) தொடர்ந்தன.

1931ல் அயோத்தியில் நடந்த ஒரு மிகப் பெரிய மதக் கலவரத்தில் பாபர் மசூதி தொடர்பான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்த கல்வெட்டு உடைத்து அகற்றப்படுகிறது. இப்படியாக பாபர் மசூதி நீக்கத்திற்கான கால்கோள்கள் படிப்படியாக வெற்றிகரமாக நடந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைகிறது. பாகிஸ்தான் பிரிவினை, அதை ஒட்டிய கொடூரமான மதக் கலவரங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நேரு செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுகிறார். காஷ்மீர் யாருக்கு, இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்கா? இல்லை அது ஒரு சுதந்திர நாடாக விளங்குமா என்கிற கேள்விக் குறியோடுதான் முதல் இந்திய – பாக் போருக்கு மத்தியில் காஷ்மீர் தற்காலிகமாகவும், தனித்துவமான சிறப்புரிமைகளுடனும் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது.

அப்போது காங்கிரசுக்குள் இருந்த பா.ஜ.க நேரு அமைச்சரவையில் பங்கேற்று இருந்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தி கொல்லப்பட்ட பின்தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை முதலான அமைப்பைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கக் கூடாது என்பது நிபந்தனை ஆக்கப்பட்டு அமைச்சரவையில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி முதலானவர்கள் வெளியேறி “பாரதீய ஜனசங்” கட்சியைத் தொடங்குகின்றனர்.

ஆனாலும் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். அதன்பின்னும் கூட நேரு அமைச்சரவையில் இருந்த துணைப் பிரதமர் வல்லபாய் படேல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் வல்லபபந்த், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் உட்படப் பலரும் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்றான மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல என்பது முக்கியமாக நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும், சோமநாதபுரம் ஆலயத்தை அரசு செலவில் புதுப்பித்துக் குடமுழக்கு நடத்த வேண்டும், அம்பேத்கரின் இந்து திருமணச் சட்டத்தை ஏற்கக் கூடாது முதலான கொள்கைகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு வற்புறுத்தியவர்கள்தான் இவர்கள்.

இப்படியான சூழலில்தான் 1949 மே 22 – 23 தேதிகளுக்குப் பொதுவான நள்ளிரவில் பாபர் மசூதியின் பெருங் கதவுகள் தகற்கப்பட்டு மசூதியின் தொழுகை மையத்தில் இராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.

முதல்நாள் இரவு ‘இஷா’ தொழுகையை முடித்துச் சென்றபோது அயோத்தி முஸ்லிம்கள் அதுதான் தாங்கள் அங்கே மேற்கொண்ட கடைசித் தொழுகை என்பதை அறிந்திருக்கவில்லை. காலையில் அவர்கள் ‘சுப்ஹு’ தொழுகைக்கு வந்தபோது மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டுப் புனிதம் அழிந்து (desecration) கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. சிலைகள் வைக்கப்பட்டுப் புனிதம் அழிந்த அந்த மசூதியில் சிலைகள் நீக்கப்படாமல் தாங்கள் தொழ முடியாது என அவர்கள் திரும்புகின்றனர்.

அப்போது ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகியாக (District Magistrate) இருந்த K.K.K. நய்யார் ஒரு அப்பட்டமான இந்துத்துவவாதி. இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடையவர். அவருடைய ஒப்புதலுடன்தான் மசூதிக்குள் இந்தச் சிலை வைப்பு நடந்தது. பின்னாளில் இந்த அதிகாரி தன் பணியை விட்டு விலகி பாரதீய ஜனசங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்ட செய்தி அறிந்த நேரு பதறினார்.

அப்போது நேரு உ.பி மாநில முதலமைச்சர் வல்லப பந்த், அரசியல் சட்டம் இயற்றப்படும் இடைக்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி மற்றும் தனது நண்பர் ஒருவர் முதலானோருக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பை என் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு’ நூலில் காணலாம். ஜவஹர்லால் நேரு ஒருவர்தான் அன்றைய சூழலையும் ஆபத்துக்களையும் சரியாகப் புரிந்துகொண்டவர். இப்படி பாபர் மசூதிக்குள் பிற மத அடையாளங்கள் வைக்கப் பட்டது என்பது பின்னாளில் நமது ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எப்படி மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை முன்னூகித்தவர். இந்திய அளவில் தலைமை அமைச்சராக அவர் இருந்த போதும், அவர் எத்தனை வேண்டிக் கொண்ட பின்னும் முதல்வர் பந்த் பாபர் மசூதிக்குள் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்ட அந்தச் சிலைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

1949 டிசம்பர் 29 அன்று ஃபைசாபாத் நீதிமன்றம் அரசிடம் மசூதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்கிறது. ஃபைசாபாத் கூடுதல் நடுவர் முனிசிபல் தலைவரை ‘ரிசீவராக’ நியமிக்கிறார். மசூதியைப் பூட்டி, ‘சீல்’ வைத்து அது ‘சர்ச்சைக்குரிய பகுதி’ என அறிவிக்கப்படுகிறது. மாநில அரசு எல்லாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டது..

1949 இல் முஸ்லிம்கள், இந்துக்கள் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகினர். 1950 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராம் லல்லாவுக்கு பூசை செய்ய அனுமதிக்குமாறு இந்துக்கள் தரப்பில் இரு வழக்குகள் தொடரப் பட்டன. மசூதியில் வைக்கப்பட்ட ராமர் சிலைகளுக்குத் தினமும் பூசை செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. எனினும் வணங்க வருவோர் உள்ளே செல்ல இயலாது. வாசல் மூடப்பட்டிருக்கும். வெளியிலிருந்தே வணங்க வேண்டும்.

1959 இல் ‘நிர்மோகி அகாரா’ எனப்படும் வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ராமானந்தி பைராகியின் சாதுக்கள் அமைப்பு ஒன்றும் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. அதுவும் ராமர் அங்குதான் பிறந்தார் எனவும் தாங்களே பாபர் மசூதி உள்ள இடத்தை நிர்வகிக்கும் ‘ஷெபாய்த்’ (மேலாளர்) எனவும் அவர்கள் உரிமை கோரினர். 1961டிசம்பர் 11 அன்றுதான் ‘சன்னி வக்ஃப் வாரியம்’ வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. ‘லிமிடேஷன்’ சட்டத்தின்படி காலம் கடந்துவிட்டதால் அவர்கள் இனி வழக்கில் சேர முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்தது. எனினும் 12 ஆண்டுகள் வரை ஒருவர் தமது உரிமையைக் கோரலாம் என்கிற வரையரையைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களின் மேல் முறையீட்டை அனுமதித்தது..

காந்தி கொலைக்குப் பிறகு சற்றே அடங்கிக் கிடந்தவாறே தம் இயக்கங்களை வலுவாகக் கட்டிக் கொண்டிருந்த இந்துத்துவத் தீவிர அமைப்புகள் மீனாட்சிபுர மதமாற்றத்தை (1983) ஒட்டி இந்திய அளவில் ஏற்பட்ட சர்ச்சைகளின் பின்னணியில் வெளிப்படையாகக் களத்தில் இறங்கிச் செயல்படத் தொடங்கின. 1984 இல் ‘விசுவ இந்து பரிஷத்’ பாபர் மசூதியைத் தகர்த்து அங்கே ராமர் கோவில் கட்டுவது என வெளிப்படையாக அறிவித்துச் செயல்படத் தொடங்கியது. பாபர் மசூதிக்கு அருகில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் ஒன்றும் நாட்டப் பட்டது. அனுமதி இன்றிக் கட்டப்பட்ட அந்த அடிக்கல் அகற்றப்படவும் இல்லை. அதை ஒட்டி 1986 இல் முஸ்லிம்களும் பாபர் மசூதியைப் பாதுகாப்பதற்கென ‘பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவை’ உருவாக்கினர்.

1986 பிப்ரவரி 1 அன்று ஃபைசாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே பாபர் மசூதியைத் திறந்து, உள்ளே சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு பூசை செய்ய அனுமதிக்கிறார். அதாவது அன்றுமுதல் பக்தர்கள் மூடப்பட்ட கதவுக்கு வெளியிலிருந்து வணங்காமல் மசூதிக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் சிலைகளுக்கு நடக்கும் பூசையில் கலந்துகொண்டு வணங்கலாம். ராஜீவ் காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்புடன் அது நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.

நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து எந்தச் சட்ட நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட முஸ்லிம்களின் அதிருப்தியை ஈடு செய்ய ராஜீவ் காந்தி 1986 பிப் 25 அன்று அப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த ஷாபானு தீர்ப்பிற்கு எதிராக நாடாளுமன்ற்த்தில் மசோதா கொண்டு வந்தது தனிக் கதை.

1989 இல் இந்துக்கள் சார்பாக இன்னொரு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடர்ந்தது இராமனின் “அடுத்த நண்பர்”. நீதித்துறை மொழியில் யாரொருவர் நேரடியாக வந்து வழக்காட முடியாதோ அவருக்குப் பதிலாக நீதி மன்றத்தில் வழக்காட அனுமதிக்கப்படுபவர் ‘அடுத்த நண்பர்’ (next friend) எனப்படுவார். அப்படியான அடுத்த நண்பர் உயிருள்ள மனிதராக இருக்கவேண்டும் என்பதில்லை என்கிற அடிப்படையில் இங்கு ‘ராம் லல்லா’ சிலையும், இராமர் பிறந்த இடமும் (ஜன்மஸ்தானம்) இதன் மூலம் வழக்காடிகளாக (juridical entities) நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டன. 1989 ஜூலை 10 அன்று எல்லா வழக்குகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

1990 இல் எல்.கே அத்வானி பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுவதற்கான இரத யாத்திரையைத் தொடங்கினார். கஜினி முகமதால் பலமுறை தாக்கப்பட்டதாகக் கருதப்படும் சோமநாதபுரம் ஆலயத்திலிருந்து தொடங்கிய அந்த ரத யாத்திரை வடமாநிலங்கள் பலவற்றின் ஊடாகவும் மக்களைப் பிளவுறுத்தும் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்தவண்ணம் அயோத்தியை நோக்கி வந்தது.

1992 டிசம்பர் 6 அன்று மத்திய மாநில அரசுகளின் கண்முன் ஷார்சி முகலாயக் கட்டிடக் கலையின் அழகிய சின்னமாக விளங்கிவந்த அந்த மசூதி இடித்துத் தகர்த்து மண்ணாக்கப்பட்டது.

அது மட்டுமல்ல மசூதி இருந்த அந்த இடத்தில் இராமர் சிலைகளை வைத்து பூசை செய்ய தற்காலிகக் கூறையுடன் கூடிய அமைப்பு ஒன்றும் கட்டப்பட்டது. ஒரு பிருமாண்டமான கட்டிடத்தை உடைத்து அள்ளி அகற்றத் தேவையான உரிய வசதிகள் மற்றும் கருவிகளுடன் அது நடந்தது. இரண்டே நாட்களில் எல்லாம் முடிந்தன. அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய காவற்படைகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அன்றைய பிரதமர் நரசிம்மாராவ் எல்லாம் முடிந்ததை உறுதி செய்து கொண்டபின் உ.பியை அப்போது ஆண்ட கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியைக் கலைத்தார். மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியே கட்டித் தரப்படும் என வாக்குறுதி ஒன்றையும் அள்ளி வீசினார். ஆனால் அவரது பதவிக் காலம் முடியும் வரை அவர் அந்தத் திசையில் எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை.

1993 இல் இரண்டு சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தவதற்கான சட்டம் ஒன்று. மற்றது 1947 ஆகஸ்ட் 15 அன்று வழிபாட்டுத்தலங்கள் எங்கெல்லாம் இருந்தனவோ அந்த நிலை இனி மாற்றமின்றித் தொடரும் என்பது.

இப்படி இந்தப் பிரச்சினை தொடங்கிய காலம் முதலே சட்ட மீறல்களின் ஊடாகவே எல்லாம் நடந்து வந்தன.

வரலாற்றின் முன் பதிலளித்தே ஆக வேண்டும்!

1528 ஆம் ஆண்டு முதல் அங்கே ஒரு மசூதி இருந்தது. 450 ஆண்டுகளாக அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். 1992 இல் அது உலகின் கண்முன் ஒரே நாளில் இடித்து வீழ்த்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இட்ட ஆணையின்படி நடத்தப்பட்ட அகழ்வாய்வு மசூதிக்கு முன் அங்கொரு கட்டுமானம் இருந்தது எனக் கூறியுள்ளது. ஆனால் அது ஒரு இராமர் கோவில் என்பதற்கு எந்த ஆதாரமும் சாட்சியமும் இல்லை. அது
ஒரு நம்பிக்கை மட்டுமே.

மேலே சொன்ன இவை அனைத்தையும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது முக்கியம். கூடுதலாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது “இந்த வழக்கு மசூதி இருந்த அந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் (title suit) எனத் தீர்மானிக்கும் வழக்கு மட்டும்தான்” என்பது. அதாவது மசூதியை இடித்தது குறித்த வழக்கு அல்ல.
தீர்ப்பளித்துள்ள இந்த உச்சநீதிமன்ற அமர்வு ஆக மூத்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியல்சட்ட அமர்வு. ஒரு ஜனநாயக அமைவின் ஆக உன்னதமானதும் இறுதியானதுமான அடிப்படை நமது அரசியல் சட்டம் மட்டுமே. அதைக் காட்டிலும் எதுவும் அடிப்படையானதாகவோ புனிதமானதோ இருக்க முடியாது – “நம்பிக்கை” உட்பட. நம்பிக்கைகள் பரஸ்பரம் போற்றி மதிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் ஒரு தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு அப்படியான நம்பிக்கைகள் எல்லாம் ஒரு சான்றாகவோ அடிப்படையாகவோ இருக்க முடியாது. “சான்று” (evidence) தொடர்பாக நமக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன.

தீர்ப்பின் அடிப்படையாக அரசியல் சட்டமும் சான்றும் அதாவது “சாட்சியமும்” மட்டுமே இருக்க முடியும். எப்படி ஒரு தீர்ப்பிற்கு நம்பிக்கை அடிப்படையாக இருக்க இயலாதோ அப்படியே வழக்காடிகளில் யார் பக்கம் “எண்ணிக்கை” அதிகமாக இருக்கிறது என்பதும் அடிப்படையாக இருக்க முடியாது.

நமது அரசியல் சட்டம் தன் குடிமக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையையும் / மதத்தையும் கடைபிடிக்கும் உரிமையை அடிப்படைகளில் ஒன்றாக்குகிறது. கடைபிடிப்பது என்பதில் தமது வணக்கத் தலத்தைப் பாதுகாக்கும் உரிமையும் அடங்கும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு அரசியல் சட்ட அடிப்படை உரிமை ஒன்றைப் பறித்துள்ளது. ஆம் ”மத நம்பிக்கை” என்பது சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக வைக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஆக இறுதியான அரசியல் சட்டம் பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் துருத்தி நிற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு என்னவெனில் அதுவே, “சொத்து தொடர்பான வழக்கொன்றைத் தீர்மானிப்பதில் நம்பிக்கைக்கு இடமில்லை” என்பதையும் அதே தீர்ப்பில் ஏற்றுக் கொண்டுள்ளதுதான்.

பாபர் மசூதி முதலான இப்படியான தீர்ப்பு குடிமக்கள் அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இழப்பதற்கே இட்டுச் செல்லும். அந்த வகையில் நவம்பர் 09, 2019 என்பது நமது அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு வேதனை மிகு நாளாகவே பதியப்படும்.

ஒரு சில முஸ்லிம் அமைப்புகள், சிறு குழுக்கள் தவிர இடதுசாரிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. இது இன்னும் பெரிய சோகம். நீதிமன்றத் தீர்ப்பிற்கு உள் நோக்கம் கற்பிக்கக் கூடாதுதானே ஒழிய அதை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்பதை எப்படி அவர்கள் புறக்கணித்தார்கள்? வரலாற்றின் முன் அவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்துத்தான் ஆக வேண்டும்.

அடுத்த பகுதி:  பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி (முன்பகுதி)

பாபர் மசூதி : சில நினைவுகள் – இறுதிப்பகுதி

  • அ. மார்க்ஸ்

Share this: