ஐந்து வாரங்களுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் வான்பரப்பில், தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 65 மில்லியன் பெறுமதியுள்ள, அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரகப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
விமானிகள் இருவருள் ஒரு அமெரிக்கப் படை வீரர் உயிருடன் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது விமானியைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய ஈரானின் வான்பரப்பில், மேம்பட்ட அமெரிக்க F-35 ரக விமானம் ஒன்று ஈரானின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பால் தாக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் முதலில் கூறியதைத் தொடர்ந்து, விமானத்தின் வால் துடுப்பு மற்றும் பிற சிதைவுகளின் படங்களை வெளியிட்டன. இந்நிலைமை குறித்து அறிந்த அமெரிக்க அதிகாரிகள், வெள்ளிக்கிழமை இரவு வரை பிறிதொரு விமானியை இன்னும் காணவில்லை என்று தெரிவித்தனர்.
படங்களில் காணப்படும் சிதைவுகள், உண்மையில் இங்கிலாந்தின் RAF லேக்கன்ஹீத் தளத்தில் உள்ள அமெரிக்க விமானப்படையின் 494வது படைப்பிரிவைச் சேர்ந்த F-15E ரக விமானத்தினுடையது என்று விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கூறினர். இருப்பினும், அந்தப் படங்கள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டன என்பதை முதலில் உறுதிப்படுத்த முடியவில்லை. சிதைவுகளில் இருந்த குறியீடுகள், பொதுவாக இங்கிலாந்தில் நிலைநிறுத்தப்பட்ட ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானங்களின் வால் துடுப்புகளின் முனைகளில் உள்ள குறியீடுகளுடன் பொருந்துவதாகத் தெரிகின்றது.
ஒரு F-15E விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஈரானியர்களுக்கு முன்பாக அதன் விமானிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பென்டகன் தீவிரமாக முயன்று வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் பின்னர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
“அமெரிக்கா, ஈரானைத் தோற்கடித்து முற்றிலுமாக அழித்துவிட்டது” என்றும், ”இந்த மோதல் முடிவுக்கு அருகில் உள்ளது” என்றும் டொனால்ட் டிரம்ப் போர்க்குணம் மிக்க ஓர் உரையை ஆற்றிய ஓரிரு நாட்களில், அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
“எல்லா வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன. அவர்களிடம் எதுவும் இல்லை” என்று அமெரிக்க அதிபர் புதன்கிழமை அன்று அறிவித்திருந்தார்.
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், டிரம்புக்கு இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறினார், ஆனால் அவர் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை. என்பிசி நியூஸுக்கு அளித்த ஒரு சுருக்கமான நேர்காணலில், தேடுதல் மற்றும் மீட்புப் பணி குறித்து விவாதிக்க அதிபர் மறுத்துவிட்டார், ஆனால் இந்தச் சம்பவம் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்று கூறினார். “இல்லை, நிச்சயமாக இல்லை,” என்று அவர் கூறினார். “இல்லை, இது போர். நாம் போரில் இருக்கிறோம்”
பெயர் குறிப்பிடப்படாத ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி, 48 மணி நேர போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை டெஹ்ரான் நிராகரித்துவிட்டதாக ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ’ஃபார்ஸ்’ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மீட்புப் பணி குறித்த விவரங்கள் குறைவாகவே இருந்தன, ஆனால் இது அதிக ஆபத்து நிறைந்த நடவடிக்கையாக இருந்திருக்கக்கூடும், மேலும் மீட்பு விமானங்கள் தரையிலிருந்து வரும் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகும் அபாயம் இருந்தது. ஈரானில் மாலை நேரம் நெருங்கியபோதும் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், இரண்டாவது விமானியின் நிலை தெளிவாகத் தெரியவில்லை.
F-15E விமானியை உயிருடன் பிடிப்பவருக்கு 60,000 டாலர் (45,000 பவுண்டுகள்) மதிப்புள்ள வெகுமதியை வழங்குவதாக ஈரானியத் தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். மேலும், நாட்டின் தென்மேற்கில் உள்ள மலைப்பகுதியான கோஹ்கிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தை தளமாகக் கொண்ட ஒரு ஈரானியத் தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளர், எந்தவொரு ’எதிரி விமானியையும்’ காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார், மேலும் அவ்வாறு செய்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அது சம்பவத்தின் இருப்பிடத்திற்கான ஒரு துப்பை அளித்தது. தாழ்வாகப் பறக்கும் மீட்பு விமானங்களின் புவியிடங்காணப்பட்ட காணொளி, வளைகுடாக் கடற்கரையிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில், அண்டை மாகாணமான குசெஸ்தானில் உள்ள பெஹ்பஹான் அருகே விமானங்கள் பறப்பதைக் காட்டியது.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர், முகமது-பாக்கர் காலிபாஃப், அமெரிக்காவைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்: “தொடர்ந்து 37 முறை ஈரானைத் தோற்கடித்த பிறகு, அவர்கள் தொடங்கிய இந்த அற்புதமான, வியூகம் இல்லாத போர், இப்போது ‘ஆட்சி மாற்றம்’ என்பதிலிருந்து மாறி, ‘ஏய்! தயவுசெய்து யாராவது எங்கள் விமானிகளைக் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று தரம் தாழ்ந்திருக்கின்றது.”
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடையது என்று கூறிக்கொள்ளும் ஒரு சமூக ஊடகக் கணக்கு, பாலைவன நிலப்பரப்பில் உள்ள ஒரு வெளியேற்றும் இருக்கை (an ejector seat in a desert landscape, which appeared to be consistent with the ACES II type used in F-15Es)யின் படத்தை வெளியிட்டது. ரூசி ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டைச் (ரூசி) சேர்ந்த விமானப் போக்குவரத்து நிபுணர் ஜஸ்டின் ப்ரோங்க் கூறுகையில், “இது உண்மையானால், விமானக் குழுவில் இருந்த இருவரில் குறைந்தபட்சம் ஒருவர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளார் என்பதை இது உணர்த்தும்” என்றார்.
நன்றி : தி கார்டியன்
