மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29
எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக்கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாத காலம் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது.
மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை எஞ்சியுள்ள தமது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.
ஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணிய கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.
மற்றும் சிலர், இயற்கையான வாழ்க்கைக்கு ஒன்றிய வழிமுறைகளைத் தரும் இஸ்லாம் தந்த இப்புனித மாதத்தினை வெறும் சடங்காகப் பேணி, அது விட்டுச் செல்லும் யதார்த்த நினைவுகளையும் பாடங்களையும் உயிரோட்டமில்லாத ஆன்மீக வழிபாடுகளில் தொலைத்து விடுகின்றனர். விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.
(1) இவ்வுலக மாந்தர் சுபிட்சம் பெறுவதற்குப் படைப்பாளனால் வகுத்தளிக்கப்பட்ட அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் பாடப் புத்தகமாம் இறைவனின் வார்த்தைகள், – அல்குர்ஆன் – பட்டுத்துணியால் போர்த்தி, பாதுகாப்பாகப் பரணில் அடுக்கி வைத்திருந்ததைத் தூசி தட்டி, மாதம் முழுதும் வெளிச்சம் காண வைத்துள்ளது. இவ்வுலக மாந்தருக்கான அருட்கொடையாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இந்த அமானிதத்தை, இதுவரை சென்று சேராதவர்களுக்குச் சேர்த்து வைப்பது, ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதனை நினைவுறுத்தும் முகமாக, தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டதைப் படித்து விளங்கி, தூதர் வழிகாட்டுதல்படி எட்டாதவர்களுக்குச் சேர்த்து வைத்தல். |
(2) இறை அளித்த வழிகாட்டுதல் – அல்குர்ஆன்படி வாழ்வை அமைத்துக் கொண்டால் எதிரிகளின் எத்தகைய பராக்கிரம சக்தியையும் இறை உதவியுடன் தகர்த்தெறிய முடியும் என்ற பத்ரின் அறிவிப்பு. |
எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டியாக அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்புச் செய்கின்றான்.
இதனைத் தத்துவார்த்தரீதியில்கூட உணர்ந்து கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டுச் செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, உறுதிகூற இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரமளான் வந்து விடுகிறது. ஆனால், அதன் பலனான பத்ரு மட்டும் முஸ்லிம்களுக்கு கிட்டுவதே இல்லை.
புத்திசாலி, பட்டதை வைத்து சுதாரித்துக் கொள்வான். இதுவரை பட்டதை வைத்து முஸ்லிம்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த ஆண்டின் ரமளான், இன்ஷா அல்லாஹ் பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் – திருமறை போதிக்கும் வழியில், தூதர் தம் வழியில் கவனம் செலுத்த இதோ கைவிட்டும் செல்லும் ரமளானாவது முஸ்லிம்களுக்குத் தூண்டுதல் அளிக்கட்டும்!
சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைப்படி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.
அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரியவேண்டிய போராட்ட வாழ்வாக இருந்தாலும் சரி!
இறைமறை இறக்கம் மற்றும் பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈகைப் பெருநாளில், உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!
தொடர் நிறைவுற்றது (அல்ஹம்துலில்லாஹ்!)