பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 130 கோடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் நார்வே பத்திரிகைகள் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் கற்பனை உருவங்களை வரைந்த செய்தியையும், அதன் விளைவாக உலகெங்கிலும் ஏற்பட்ட எழுச்சியையும் நாம் அனைவரும் அறிவோம்.
இஸ்லாம் அனுமதித்த வழியில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு கொடுத்த டாக்டர் யூஸுஃப் அல் கர்ளாவி, வரம்பு மீறிய வன்முறைச்செயல்களை வன்மையாக கண்டித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளும் விவாத அலைகளும் எழுந்துள்ள இச்சூழலில், இஸ்லாமிய ஆங்கில இணையதளங்களில் புகழ்பெற்ற இஸ்லாம்ஆன்லைன். நெட் (islam-online.net) இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் எடுத்துரைத்த வாழ்வியல் தத்துவங்களை உலக மக்களுக்கு எளிமையாக அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றினை வெகு விரைவில் துவங்க உள்ளது.
ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் துவங்கவுள்ள இந்த இணையதளம், வெகுவிரைவில் உலக மொழிகள் அனைத்திலும் விரிவாக்கம் பெறத்துவங்கும் என்பது சிறப்புச்செய்தியாகும்.