| தோழர்கள் - 1 |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் |
| செவ்வாய், 02 பிப்ரவரி 2010 20:46 |
|
அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே! அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார். பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும். வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்! 1. ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி). அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேகரம் ஆகும் பணம் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்! பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ”யார் இந்த ஸயீத்?" என்று கேட்டார். "எங்கள் அமீர்" என்றனர். அமீர் என்றால் அந்தப் பகுதியின் கவர்னர் எனலாம். "என்ன, உங்கள் அமீர் ஏழையா?" என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது!. "ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்" என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர். உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!. ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, "என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்". குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்தது. பை கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்து தீனார்கள் கண்டு உரத்த குரலில், "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்றார் ஸயீத். மரணம் போன்ற பேரிடரின் நிகழ்வில் முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைத் தான் கூறினார் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு. * * * * * * மக்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்தபோது ஹஜ்ஜுக் கடமைச் செயல்பாடுகளின் இடையில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்பட்டு, கஅபாவைத் தவாஃப் செய்ய இயலாமல் ஆகிவிட்டது. அவர்கள் தூய்மை அடைந்த பின்னர் தன்ஈமுக்கு வந்து இஹ்ராம் மேற்கொண்டு, கஅபாவுக்குச் சென்று தவாஃப் செய்து ஹஜ்ஜை முழுமைப் படுத்தினார். அந்த இடத்தில் இப்பொழுது ஆயிஷா (ரலி) பள்ளி என்ற பெயரில் ஓர் அழகிய பள்ளி உள்ளது. தன்ஈமில் அன்று ஒரு சம்பவம். குபைப் இப்னு அதீ (ரலி) எனும் நபித்தோழர் ஒருவர் மக்கத்துக் குரைஷிகளால் கைப்பற்றப்பட்டு அன்று கொலைத் தண்டனைக்கு உட்பட்டிருந்தார். (இன்ஷாஅல்லாஹ் இவரைப் பற்றிய வரலாறு விரிவாய் பின்னர்). கொளுத்தும் சுடுமணலில் வெற்றுடம்பாய்ப் படுக்க வைத்து, மார்பில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கப் பட்ட பிலால் (ரலி) அவர்களை குதூகலத்துடன் வேடிக்க பார்த்த கூட்டமல்லவா? எனவே மக்கா நகரவாசிகள் வேடிக்கை பார்க்கக் குழுமி விட்டிருந்தனர். ஸயீத் இப்னு ஆமிர் அப்பொழுது இளைஞர். முண்டியடித்துக் கொண்டு அவரும் கூட்டத்தில் புகுந்திருந்தார். சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்ட குபைபிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது. "இரண்டு ரக்அத் தொழ வேண்டும்". அனுமதியளிக்கப்பட்டது. மரணப் பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார். பின்னர் அநியாயத்திற்குத் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார். "சரியில்லை, இது எதுவுமே சரியில்லை" என்று ஸயீத் மனம் நிச்சயமாய் சொன்னது. தொடர்ந்து வந்த நாட்களில் மனதை மரணம் வென்றது. ஒருநாள், ”போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்" என்று குரைஷிகளிடம் கூறிவிட்டு மதீனா சென்றுவிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தஞ்சமடைந்து விட்டார். பிறகு கைபர் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற போர்களிலும் கலந்து கொண்ட வீரர் ஸயீத். அபூபக்ரு மற்றும் உமர் இருவரும் ஸயீத் இப்னு ஆமிரின் (ரலியல்லாஹு அன்ஹும்) நேர்மையையும் இறைவிசுவாசத்தையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவரது ஆலோசனைகளையும் அந்த இரு கலீஃபாக்கள் கேட்டறிந்து செயல்படுவர்கள். உமர் கலீஃபா பொறுப்பேற்றுக் கொண்டிருந்த ஆரம்ப நேரத்தில் ஒருமுறை ஸயீத் அவரிடம் ஆலோசனை பகர்ந்தார். ”நான் உம்மிடம் மனப்பூர்வமாய்ச் சொல்கிறேன். மக்களிடம் நீங்கள் நடந்து கொள்வதன் பொருட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஆனால் அவனிடம் உமக்குள்ள உறவு குறித்து மக்களை அஞ்ச வேண்டாம். சொன்னதையே செய்யுங்கள். ஏனெனில் வாக்குறுதியில் சிறந்தது, அதை நிறைவேற்றுவதே. முஸ்லிம்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதை விரும்புவீர்களோ வெறுப்பீர்களோ அதையே அவர்களுக்கும் விரும்புங்கள்; நிராகரியுங்கள். சத்தியத்தை அடைய எத்தகைய இடையூறையும் சமாளியுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுவதில் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளுங்கள்". இதுவே அதன் சாராம்சம். இந்த நேர்மையெல்லாம்தான் ஹிம்ஸிற்கான அமீருக்குத் தகுதியான ஆள் தேர்ந்தெடுக்க உமர் யோசித்துக் கொண்டிருந்தபோது ஸயீத் இப்னு ஆமிரின் பெயர் கவனத்திற்கு வந்து உடனே டிக் செய்யப்பட்டது. உமர் நிர்வாகப் பொறுப்பிற்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கும் லாவகமும் அதற்குரியவர்கள் பதவியை வெறுத்தொதுங்குவதும், அதெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதைகள். "ஸயீத், உம்மை ஹிம்ஸிற்கு கவர்னராக நியமிக்கிறேன்" என்று உமர் அறிவித்தபோது மகிழ்ச்சி அடையாவிட்டாலும் பரவாயில்லை, அவரது பதில் தான் ஆச்சர்யம்! "உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டமாக்கி விடாதீர்கள்". உமருக்கு ஆத்திரம் எழுந்தது. "என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்". பதவியையும் பணத்தையும் அந்தஸ்தையும் செல்வாக்கையும் விட்டு ஓடிய சமூகம் அது. முன்மாதிரிச் சமூகம். நம்மால் வரலாறுகளில் படித்துப் பெருமூச்செறிய மட்டுமே முடியும்!. உமர் வாதத்தின் நியாயம் ஸயீத்திற்குப் புரிந்தது. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை நான் கைவிடமாடடேன்". ஏற்றுக் கொண்டார் ஸயீத். கல்யாணமாகியிருந்த புதிது. புது மனைவியுடன் ஹிம்ஸ் புறப்பட்டார் ஸயீத். உமர் பணம் கொடுத்திருந்தார். புது இடத்தில் அமீர் குடும்பம் அமைத்துக் கொள்ள வேண்டுமே. ஹிம்ஸ் வந்து சேர்ந்தவுடன் அடிப்படைக்குத் தேவையான பொருட்கள் மட்டும் வாங்கிக் கொண்டார் ஸயீத். பிறகு மனைவியிடம் கூறினார். "நாமிருக்கும் நகரில் வர்த்தகத்தில் நல்ல இலாபம் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தை நல்லதொரு வியாபாரத்தில் முதலீடு செய்கிறேன்". மனைவி கேட்டார், "வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு விட்டால்?" வீட்டிற்கு மேற்கொண்டு சில பொருட்கள் வாங்கிக் கொள்ளலாமே என்ற எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை அவருக்கு இருந்தது. "யாரை நம்பி முதலீடு செய்கிறேனோ அவனை அதற்கு உத்தரவாதம் அளிக்க வைக்கிறேன்" என்று பதில் கூறிவிட்டார் ஸயீத். மீதமிருந்த அனைத்துப் பணத்தையும் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் முற்றிலுமாய்க் கொடுத்துவிட்டார் அவர். பின்னர் அவரின் மனைவி வியாபாரத்தின் லாபம் குறித்துக் கேட்கும் போதெல்லாம், "அதற்கென்ன? அது பிரமாதமாய் நடக்கிறது. அதன் லாபமும் பெருகி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது" என்று கூறிவிடுவார். ஒருநாள் ஸயீத் பற்றிய விஷயம் அறிந்த உறவினர் முன்னிலையில் அவர் மனைவி இப்பேச்சை எடுக்க நேர்ந்தது. உறவினரின் பலமான சிரிப்பு மனைவிக்கு சந்தேகத்தை அளிக்க, வற்புறுத்தலில் உறவினர் உண்மையைச் சொல்லிவிட்டார். மனைவியின் கேவலும் அழுகையும் ஸயீத்திடம் இரக்கம் ஏற்படுத்த, "என்னுடைய நண்பர்கள் எனக்கு முன்னர் மரணித்து விட்டார்கள். இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் அதற்கு ஈடாக கிடைப்பினும் சரியே, அவர்களின் நேர்வழியிலிருந்து நான் விலகிவிட விரும்பவில்லை" என்றார். அழுகையிலும் மனைவியின் அழகு அவரை ஈர்த்தது. சுதாரித்துக் கொண்டவர், "சுவர்க்கத்திலுள்ள அழகிய கண்களையுடைய ஹுருல் ஈன்களைப் பற்றி உனக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் பூமியை நோக்கினாலும் அதன் சக்தியில் முழு பூமியையும் பிரகாசப்படுத்தும். சூரிய சந்திர ஒளிகளையும் மிகைத்தது அது. உன்னை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பது என்பது சிறந்ததுதான்". ஸயீதின் மனைவி அமைதியானார். தன் கணவரின் எண்ணமும் மனவோட்டமும் அவருக்குப் புரிந்தது. இப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் புதிதாய் தீனார்கள் வந்தால்? * * * * * * "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்ற சத்தம் கேட்டு ஓடி வந்த ஸயீதின் மனைவி கேட்டார், "என்ன? கலீஃபா இறந்து விட்டார்களா?" "அதை விடப் பெரிய சோகம்". "முஸ்லிம்களுக்குப் போரில் தோல்வியேதும் ஏற்பட்டுவிட்டதா?" "அதை விடப் பெரிய இடர், ஒரு பேரிடர். என்னுடைய மறுமை வாழக்கையைக் கெடுத்து, என் வீட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருக்கிறது". "எனில் அதனை விட்டொழியுங்கள்" என்றார் மனைவி தீனார் பற்றி அறியாமல். "அப்படியானால் எனக்கு உதவுவாயா?" மனைவி தலையாட்ட அனைத்து தீனார்களையும் ஒரு பையில் போட்டு நகரில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் அளித்து விட்டார். என்ன சொல்வது? போதாமையில் உள்ளதே போதும் என்ற வாழ்க்கையை நம்மால் முழுதும் உணர்ந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஹிம்ஸ், ஈராக்கிலுள்ள கூஃபாவிற்கு இணையாய் ஒரு விஷயத்தில் திகழ்ந்தது. கூஃபா நகரின் மக்கள் அதன் ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தனர். அதைப் போல் ஹிம்ஸ்வாசிகளும் குறை சொல்ல, இது சிறு கூஃபா என்றே அழைக்கப்படும் அளவிற்கு ஆகிவிட்டது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியா வந்தடைந்தார்கள். ஹிம்ஸ் மக்களுக்கு ஸயீத் பின் ஆமிர் அவர்களின் மீது மிகப் பிரதானமாய் நான்கு குறைகள் இருந்தன. நமது ஆட்சியாளர்களைப் பார்த்துப் பழகி விட்ட நமக்கு அவையெல்லாம் கிறுக்குத் தனமான குறைகள். ஆனால் குறைகளைக் கேட்ட உமர் அவர்கள் மிகவும் அதிர்ச்சியுற்றார்கள். அது பொறுத்துக் கொள்ள முடியாத குறைகள். ஸயீத் மேல், தான் கொண்டிருந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விடுமோ என்று கலீஃபாவை கவலை கொள்ள வைத்த குறைகள். மக்களுக்குப் பதிலளிக்க கவர்னரை அழைத்தார். "இவர் அலுவலுக்கு வருவதே சூரியன் உச்சிக்கு வருவதற்குச் சற்று முன்னர்தான்" என்று முதல் குறை தெரிவிக்கப்பட்டது. "இதற்கு என்ன பதில் சொல்கிறாய் ஸயீத்?" என்று கேட்டார் உமர். சற்று நேரம் மௌனமாயிருந்தார் அவர். "அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் இதனை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆயினும் இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது கடமையாகி விட்டது. எனது குடும்பத்திற்கு ஒத்தாசை புரிய வேலையாட்கள் யாரும் கிடையாது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைவேன். மாவு உப்பி வரும்வரை காத்திருந்து, பிறகு அதனை அவர்களுக்குச் சமைத்துக் கொடுத்துவிட்டு வருவேன்". "இரவில் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை" என்று அடுத்த குறை தெரிவிக்கப்பட்டது. மிகவும் தயக்கத்திற்குப் பிறகு ஸயீத் இதற்கு பதிலளித்தார். "இதனையும் நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. பகலெல்லாம் எனது நேரத்தை இவர்களுக்காக அளித்து விடுகிறேன். ஆகவே இரவு நேரத்தை என் இறைவனுக்காக அவனது பிரார்த்தனையில் கழிக்கிறேன்". "மாதத்தில் ஒரு நாள் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை" என்று மூன்றாவது குறை சொல்லப்பட்டது. "அமீருல் மூமினீன்! எனக்கு வீட்டு வேலையில் உபகாரம் புரிய வேலையாட்கள் யாரும் இல்லை. உடுப்பு என்று என்னிடம் இருப்பது, நான் உடுத்தியிருக்கும் இந்த ஆடை மட்டும்தான். மாதத்தில் ஒருமுறை இதனைத் துவைத்துக் காயவைத்து உடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் அன்றைய தினம் என்னால் பொது மக்களைச் சந்திக்க முடிவதில்லை". "அடுத்து என்ன குறை?" வினவினார் உமர். "அவ்வப்போது இவர் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார்". அதற்கு பதிலளித்தார் ஸயீத். "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் குபைப் இப்னு அதீ (ரலி) கொல்லப்படுவதை என் கண்ணால் பார்த்தேன். குரைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிக் கொண்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் கேட்டனர், 'உனக்கு பதிலாக இப்பொழுது இங்கு முஹம்மத் இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாய்தானே?' அதற்கு குபைப், 'முஹம்மத் மீது ஒரு முள் குத்த விட்டுவிட்டுக்கூட நான் எனது குடும்பத்துடன் பாதுகாப்பாய் இருந்து விட மாட்டேன்' என்று கூறினார். அவர்களது ஆக்ரோஷம் அதிகமடைந்து அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக நின்று கொண்டு அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேனே, என்ற எண்ணமும் கைச்சேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது! என்னையறியாமல் மயங்கி விழுந்து விடுகிறேன்". அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் கூறினார், "அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் ஸயீத் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை". நாளும் பொழுதும் கொலைகளும் அட்டூழியங்களும் சகாய விலைக்குப் பார்த்து மரத்துப் போன நம் உள்ளங்களுக்கு இந்த வரலாறு கூறும் செய்தியையும் அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்வது சற்றுச் சிரமம்தான். ஸயீத் இப்னு ஆமிர் பின் ஹதீம் பின் ஸலாமான் பின் ரபீஆ அல் குறைஷி அவர்கள் ஹிஜ்ரீ 20இல் மரணமடைந்தார்கள்; ரலியல்லாஹு அன்ஹு! கருத்துக்கள் (23)
![]() எழுதியவர்: Nizar Ahamed , February 03, 2010 09:36 வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர.... இது போல நிரைய நபித் தோழர்களின் வாழ்க்கை பாதைகளை தொடராக வெளியிடுங்கள்.... எழுதியவர்: அபூ நூறா , February 03, 2010 20:31 மாஷா அல்லாஹ்! அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம்....... ஜஸாகல்லாஹு ஃகைரா எழுதியவர்: Adirai Dawood - Dallas, Texas , February 03, 2010 20:45 மாஷா அல்லாஹ். கட்டுரை அழகாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகளை ஆங்கிலத்தில் முன்னர் கேட்டிருக்கிறேன். ஆனால் தாய் மொழியில் படிக்கும்போது அது பெருத்த தாக்கத்தை நிச்சயமாய் ஏற்படுத்துகிறது. தொடருங்கள் நூருத்தீன். பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், திறம்பட தமிழில் எழுதும் திறமை இன்னமும் உங்களிடம் உள்ளது. __________ சகோதரர் அதிரை தாவூத். பின்னூட்டத்திற்கு நன்றி. கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி! http://www.satyamargam.com/TamilTyping எழுதியவர்: Ahamed Basheer , February 04, 2010 10:20 அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! பொறுப்பைக் கண்டு அஞ்சிய அந்த சமுதாயம் எங்கே! பதவியை கேட்டு வாங்கும் நாம் எங்கே! இது போன்ற ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் இத்துப் போன ஜனாநாயகத்தில் தேடும் சமுதாயமே, இத்தகைய ஆட்சி ஏற்பட உழைப்போம். எழுதியவர்: கடையநல்லூர் முஹம்மது ரபி , February 04, 2010 19:14 மஷா அல்லா இறைவன் பாதையில் உங்கள் பணி தொடற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். கடையநல்லூர் முஹம்மது ரபி , டல்லாஸிலிருந்து எழுதியவர்: மஸ்தூக்கா , February 05, 2010 13:37 நபித்தோழர்களின் வரலாறுகளைப் படித்திருக்கிறோம். ஆனாலும் இன்னமும் நிறைய படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை கட்டுரையாளர் ஏற்படுத்தியிருக்கிறார். மெய்சிலிர்க்க வைக்கும் நல்ல எழுத்து நடை. நபித்தோழர்களின் சிறந்த முன்மாதிரி வாழ்க்கையை நம் அனைவருக்கும் பயனபடும் விதத்தில் வழங்கும் சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கும் “சத்தியமார்க்கம்“ தளத்திற்கும் பாராட்டுக்கள். எழுதியவர்: மு முஹம்மத் , February 06, 2010 00:37 அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் அருமையான கட்டுரை ஜஸாக்கல்லாஹு கைரன். //மக்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி. மக்காவிற்குள் இருக்கும் யாத்ரீகர்கள் மறுமுறை உம்ராச் செய்ய நாடினால் இங்குச் சென்று மீண்டும் இஹ்ராம் புனைய வேண்டும். இப்பொழுது ஆயிஷா (ரலி) பள்ளி என்று அழகிய பள்ளி அதற்காகவே கட்டப்பட்டுள்ளது.// மக்காவிற்கும் இருக்கும் யாத்ரீகள் மறு முறை உம்ரா செய்வது என்பது. கருத்து வேறுபாடுள்ள ஆதாரமற்ற ஒன்றாகும். ஒரு பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகமான உம்ரா செய்வது நபிவழி ஆதாரமற்ற செயல். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டு உம்ரா நிரைவேற்ற இயலாததால் அதற்கு பகரமாக இந்த தன்ஈம் எனும் இடத்திற்கு சென்று இஹ்ராம் கட்டி வரும் படி நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மறு உம்ரா என்று ஒன்று இருக்குமெனில் அவரும் சென்ரு இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றி காட்டியிருப்பர்கள். அல்லது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு துணையாக சென்ற சகோதரர் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் இஹ்ராம் அணிந்து மறு உம்ரா செய்து காட்டியிருப்பார்கள் ஆனால் அவ்வாரு செய்ததாக ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை என்பதை கவனிக்கவும். எழுதியவர்: ibnu shah , February 06, 2010 07:08 சகோதரர் முஹம்மத் அவர்கள்,நான் சுட்டிக்காட்ட நினைத்ததை என்னை முந்திக்கொண்டு சுட்டிக்காட்டி விட்டார்.ஜஸாஹுல்லாஹு கைரன்.சத்திய மார்க்க குழுவினர் இந்த மாதிரி விஷயங்களை நன்கு கவனித்து தணிக்கை செய்து அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.இல்லையென்றால் ஒரு தவறான கருத்தை பரப்பியதன் விளைவு தங்களைத்தான் சேரும்.அது மட்டுமில்லாமல் இந்த அழகான கட்டுரையின் சுவாரசியமும் குறைந்து போகிறது.இனி அடுத்தடுத்து வரும் கட்டுரையில் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எழுதியவர்: அப்துல்லாஹ் M , February 06, 2010 21:51 அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே தன்ஈம் எனும் இடத்தில் ஆயிஷா(ரலி) அவர்கள் பெயரில் உள்ள பள்ளிக்கு சென்று தமக்கு பல மறு உம்ராக்கள் என்றும், தாய், தந்தை, போன்ற உறவினர்களுக்கு உம்ராக்கள் என்றும் இஹ்ராம் கட்டி வரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது ஆனால் அது ஆதாரமற்ற அமல் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு ஹஜ், உம்ரா நிறைவேற்ற இயலாதது போல் நிலை ஏற்படுபவர்கள் இங்கு சென்று இஹ்ராம் அணியலாம் என்பதையும் மறுக்க முடியாது. இதை ஆக்கத்தில் சம்பந்தபட்ட இடத்தில் முறையாக தெளிவுபடுத்த வேண்டும் அல்லது அதை தணிக்கை செய்து நீக்கிவிட வேண்டும் என்பதே இந்த தவறான கருத்தினை பரப்புவது அல்லது துணை போவதில் இருந்து சத்தியமார்க்கம்.காம் தளத்தினரை காக்கும் செயலாக அமையும். அல்லாஹ் போதுமானவன். எழுதியவர்: M.Mohamed Abbas , February 08, 2010 08:36 அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரர் நூருத்தீன் பதித்த கட்டுரை சரியானது தான், ஆயிஷா(ரலி) அவர்கள் மறு உம்ரா செய்தார்கள்: நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிய விரும்புகிறார்களோ அவர்கள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்; யார் உம்ராச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் மட்டும் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' எனக் கூறினார்கள். எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர். இன்னும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்; நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாவேன். அரஃபா நாள் நெருங்கியவதும் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. எனவே நான் நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு, வாரிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது என்னுடன் அப்துர்ரஹ்மானை அனுப்பித் தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் என்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டேன் ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். மாதவிடாய் சமயத்தில் கஅபாவை தவிர மற்ற வழிப்பாட்டை நிறைவேற்றினார்கள்: ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள்: மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள். மேலும் ஆயிஷா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?' என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை, ஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்: ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?' எனக் கேட்டதற்குவர்கள், 'இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!" என்று பதிலளித்தார்கள் தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களின் கட்டளை: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக ஆயிசா(ரலி) அவர்கள் இஹ்ராம் அணிந்தார்கள்: "(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!" என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!" என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். "அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்" என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!" என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எழுதியவர்: M.Mohamed Abbas , February 08, 2010 08:39 அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரர் நூருத்தீன் பதித்த கட்டுரை சரியானது தான், ஆயிஷா(ரலி) அவர்கள் மறு உம்ரா செய்தார்கள்: நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிய விரும்புகிறார்களோ அவர்கள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்; யார் உம்ராச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் மட்டும் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' எனக் கூறினார்கள். எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர். இன்னும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்; நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாவேன். அரஃபா நாள் நெருங்கியவதும் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. எனவே நான் நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு, வாரிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது என்னுடன் அப்துர்ரஹ்மானை அனுப்பித் தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் என்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டேன் ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். மாதவிடாய் சமயத்தில் கஅபாவை தவிர மற்ற வழிப்பாட்டை நிறைவேற்றினார்கள்: ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள்: மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள். மேலும் ஆயிஷா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?' என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை, ஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்: ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?' எனக் கேட்டதற்குவர்கள், 'இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!" என்று பதிலளித்தார்கள் தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களின் கட்டளை: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக ஆயிசா(ரலி) அவர்கள் இஹ்ராம் அணிந்தார்கள்: "(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!" என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!" என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். "அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்" என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!" என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எழுதியவர்: M.Mohamed Abbas , February 08, 2010 08:40 தொடர்ச்சி... ஆயிசா(ரலி) அவர்கள் மாதவிடாய் முடிந்த பிறகு உம்ரா செய்தார்கள்: நாங்கள் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து, ஹஜ்ஜுக்குரிய கட்டுப்பாடுகளுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு, 'ஸரிஃப்' என்னும் இடத்திற்கு வந்து தங்கினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், 'பலிப்பிராணி கொண்டு வராமல் ஹஜ்ஜை உம்ராவாகச் செய்ய விரும்புகிறவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்! பலிப்பிராணி வைத்திருப்பவர் அவ்வாறு செய்ய வேண்டாம்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களில் ஓரளவு வசனதி படைத்தவர்களிடமும் பலிப்பிராணிகள் இருந்தன. எனவே, அவர்கள் உம்ராவுக்கெனத் தனியாக வலம் வரவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை செவியுற்றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டேன்!" என்றேன். அதற்கவர்கள் 'என்ன காரணம்?' எனக் கேட்டதும், 'நான் தொழக்கூடாது நிலைமைக்கு ஆளாம்விட்டேன்! (எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது!) என்றேன். அவர்கள், 'உனக்கொன்றுமில்லை! நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அப்பெண்மக்களுக்கு விதிக்கப்பட்டதே உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது! எனவே, ஹஜ் செய்பவளாகவே இரு! அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக் கூடும்!" என்றார்கள். நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு மினாவிலிருந்து புறப்படும்வரை நான் அப்படியே (மாதவிடாயுடன்) இருந்தேன். பிறகு முஹஸ்ஸப் வந்து தங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, 'உன்னுடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக் நடுநிசியில் வந்தபோது '(தவாஃபை) முடித்து விட்டீர்களா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார்கள். மக்களும், ஸுப்ஹுக்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். மேலே உள்ள ஹதிஸ்கள் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள். தாய்,தந்தையர்களுக்காகவும், முதியவர்களுக்காவும் ஹஜ்ஜும், உம்ராவும் செய்யலாம்: அல்லாஹிவின் தூதரே! என் தந்தை முதியவராக இருக்கிறார், ஹஜ் செய்யவும் பிராயணம் செய்யவும் அவருக்கு சக்தி இல்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன், அதற்கவர்கள் உன் தந்தையின் சார்பாக நீர் ஹஜ்ஜும்,உம்ராவும் செய்வீராக என்று விடையளித்தார்கள். இதை அபூரஸீன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். ஒருவர் மற்றவருக்காக உம்ரா செய்யலாம் என்பது இந்த ஹதிஸிலிருந்து விளங்கப்படுகின்றது. என இமாம் திர்மதி(ரஹ்)அவர்கள் இந்த ஹதிஸிற்கு விளக்கம் அளிக்கிறார்கள். எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , February 08, 2010 09:24 வாசகர்கள் மு.முஹம்மத், இபுனு ஷா, அப்துல்லாஹ் ஆகியோரின் சுட்டிக் காட்டலின்படி, "மக்காவிற்குள் இருக்கும் யாத்ரீகர்கள் மறுமுறை உம்ராச் செய்ய நாடினால் இங்குச் சென்று மீண்டும் இஹ்ராம் புனைய வேண்டும்" என்ற பிழையான தகவல் நீக்கப் பட்டது. வாசகர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! எழுதியவர்: அப்துல்லாஹ் M , February 08, 2010 21:38 அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியமார்க்கம்.காம், சகோதரர்களே. ஜஸாக்கல்லாஹு கைரா.. சகோதரர் அப்பாஸ் அவர்களே, ஆயிஷா(ரழி) அவர்கள் மாதவிடாய் கழிந்த பின்னர் உம்ரா செய்ததில் மாற்றுக் கருத்தில்லை. அதே போல் பெற்றோர்களுக்கு செய்யப்படும் ஹஜ் விஷயத்திலும் மாற்று கருத்தில்லை இவற்றிர்க்கு அனுமதியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஒரே பயணத்தில் இவ்வாரு ஒருவர் அந்த பள்ளிக்கு சென்று இஹ்ராம் அணிந்து மறு உம்ராக்கள் செய்வதற்கு ஆதாரமில்லை என்றே பின்னூட்டங்களில் கூறப்பட்டுள்ளது கவனிக்கவும். எழுதியவர்: ibnu shah , February 08, 2010 21:59 மற்றவர்களுக்காக உம்ரா செய்யக்கூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை.உம்ராவுக்கு சென்ற ஒரு பயணத்தில் ஒரு உம்ரா மட்டும் தான் செய்ய முடியும்.திரும்ப திரும்ப"தன்யீமுக்கு"சென்று பல பேருக்காக பல இஹ்ராம்களைக்கட்டி பல உம்ராக்களை நிறைவேற்றுவது தான் தவறு என்று சொல்கிறார்கள். சகோதரர் அப்பாஸ் அவர்களே!தாங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸ்களை யாரும் மறுக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் எங்களுடைய கருத்துக்கு அவை வலு சேர்க்கின்றன.மாதவிடாய் வந்தவர்களுக்குத்தான் அந்த மாதிரி இஹ்ராம் கட்டி விடுபட்டுப்போன உம்ராவை நிறைவேற்ற முடியுமே தவிர மற்றவர்கள் மீண்டும் மீண்டும் செய்ய முடியாது என்பதற்குத்தான் அவைகள் ஆதாரமாகத்திகழ்கின்றன.மேலும் தாங்கள் இரண்டாவதாக பதிந்திருக்கும் பத்தியில் குறிப்பிடப்பட்ட ஹதீஸ் மூலம் ஏற்கனவே தன்னுடைய உம்ராவை நிறைவேற்றியவர்கள் தான் மற்றவர்களுக்காக மீண்டும் உம்ராசெய்ய முடியும்.அதற்காக மீண்டும் பயணம் செய்ய வேண்டும் என்பது புலப்படுகிறது. சகோதரர் அப்பாஸ் அவர்களே!தாங்கள் எந்த ஹதீஸாவது ஒரு உம்ராவை நிறைவேற்றியவர்கள் தலையின் ஒரு பகுதியை மட்டும் கொஞ்சமாக வெட்டிவிட்டு,மீண்டும் உம்ரா செய்வதற்கும்,எத்தனை உம்ராக்கள் செய்ய வேண்டுமோ அத்தனை உம்ராக்களையும் செய்து விட்டு கடைசியாக முழு தலையையும் மொட்டை அடிக்கிறார்களே நம் மக்கள்?அதற்கும்,தெளிவான ஆதாரமாக இருந்தால்,முன்வையுங்கள் பார்ப்போம்.தாங்கள் எடுத்து வைத்த ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் தங்களுக்கு தான் பாதகமாக போகிறது சகோதரரே! எழுதியவர்: M.Mohamed Abbas , February 09, 2010 09:45 அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரர் மு.முஹம்மத் அவர்கள் பதித்தது: // அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டு உம்ரா நிரைவேற்ற இயலாததால் அதற்கு பகரமாக இந்த தன்ஈம் எனும் இடத்திற்கு சென்று இஹ்ராம் கட்டி வரும் படி நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மறு உம்ரா என்று ஒன்று இருக்குமெனில் அவரும் சென்ரு இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றி காட்டியிருப்பர்கள். அல்லது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு துணையாக சென்ற சகோதரர் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் இஹ்ராம் அணிந்து மறு உம்ரா செய்து காட்டியிருப்பார்கள் ஆனால் அவ்வாரு செய்ததாக ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை என்பதை கவனிக்கவும். // இங்கு சகோதரர் அவர்கள், ஆயிசா(ரலி) அவர்கள் இஹ்ராம் மட்டும் அணிந்தார்கள் என்றும், மறு உம்ரா செய்யவில்லை என்றும் பதித்துள்ளார்கள், அதற்கு தான் மறு உம்ரா செய்தார்கள் என ஹதிஸ்களில் இருந்து ஆதாரம் எடுத்து வைத்தேன். நான் தவறாக எதுவும் கூறவில்லையே! அதற்கு சகோதரர் இப்னு ஷா அவர்கள் நான் கருத்து பதிக்கும் முன்பு பதித்தது: //சகோதரர் முஹம்மத் அவர்கள்,நான் சுட்டிக்காட்ட நினைத்ததை என்னை முந்திக்கொண்டு சுட்டிக்காட்டி விட்டார்// சகோதரர்இப்னு ஷா அவர்கள் நான் கருத்து பதித்த பின்பு பதித்தது: //மாதவிடாய் வந்தவர்களுக்குத்தான் அந்த மாதிரி இஹ்ராம் கட்டி விடுபட்டுப்போன உம்ராவை நிறைவேற்ற முடியுமே தவிர மற்றவர்கள் மீண்டும் மீண்டும் செய்ய முடியாது என்பதற்குத்தான் அவைகள் ஆதாரமாகத்திகழ்கின்றன// சகோதரர் எதை நான் எடுத்து கொள்வது. எழுதியவர்: மு முஹம்மத் , February 09, 2010 21:39 அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் அப்பாஸ் அவர்களே // அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டு உம்ரா நிரைவேற்ற இயலாததால் அதற்கு பகரமாக இந்த தன்ஈம் எனும் இடத்திற்கு சென்று இஹ்ராம் கட்டி வரும் படி நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மறு உம்ரா என்று ஒன்று இருக்குமெனில் அவரும் சென்ரு இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றி காட்டியிருப்பர்கள். அல்லது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு துணையாக சென்ற சகோதரர் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் இஹ்ராம் அணிந்து மறு உம்ரா செய்து காட்டியிருப்பார்கள் ஆனால் அவ்வாரு செய்ததாக ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை என்பதை கவனிக்கவும். // இதில் ஆயிஷா(ரலி) அவர்கள் இஹ்ராம் மட்டும் அணிந்தார்கள் உம்ரா செய்யவில்லை என்று நான் கூறவில்லை, மேலும் ஆயிஷா(ரலி) அவர்கள் மறு உம்ரா செய்யவில்லை மாதவிடாய் ஏற்பட்டதால நிரைவேற்ற இயலாமல் போனதை நிறைவேற்றினார்கள் என்றே கூறவேண்டும். அதே போல் //மறு உம்ரா என்று ஒன்று இருக்குமானால் அவரும் சென்று இஹ்ராம் அணிந்து நிறைவேற்றி காட்டியிருப்பார்கள் // என்பது நபி(ஸல்) அவர்களை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதாகும். எழுதியவர்: மஸ்தூக்கா , February 11, 2010 00:48 சகோதரர் முஹம்மது அப்பாஸ்அவர்கள் தவறாக விளங்கி பின்னூட்டங்களில் இடப்பட்டுள்ள கருத்துக்களை சரியாக கவனிக்காமல் பதில்அளித்துக் கொண்டிருப்பதாக கருதுகிறேன். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவ வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஆதாரம் புகாரி பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1529 எழுதியவர்: M.Mohamed Abbas , February 11, 2010 12:00 அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், சகோதரர் மஸ்துக்கா அவர்களே! நான் பதித்த கருத்துகளை முழுமையாக சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள், நான் தவறாக எதுவும் பதிக்க வில்லை, அப்படி தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் முன்பு நான் பதித்தது: //தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களின் கட்டளை: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக ஆயிசா(ரலி) அவர்கள் இஹ்ராம் அணிந்தார்கள்: "(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!" என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, 'உன்னுடைய உம்ராவைவிட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!" என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்// விடுப்பட்ட உம்ராவுக்கு பகரமாக அல்லது மறு உம்ரா என்று பதித்துள்ளேன் தவிர, அங்கு தான் அனைவரும் முதல் தடவைக்கான உம்ராவை கட்ட வேண்டும் என்று பதிக்கவில்லை. ஆயிசா(ரலி) அவர்கள் மறு உம்ராவை நிறைவேற்ற தன்யீம் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் செல்ல சொன்னார்கள், மறு உம்ராவை நிறைவேற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்ன இடம் தன்யீம் தவிர வேறெதையும் என்னால் காணவில்லை,விடுப்பட்ட உம்ரா பகரமாக மறு உம்ரா ஒருவர் செய்ய விரும்பினால் அங்கு செல்வது தவறு ஒன்றுமில்லை,குற்றமும் இல்லை, ஏனென்றால் நமது அம்மா ஆயிசா(ரலி) அவர்களும் அவ்வாறு தான் உம்ரா செய்து காட்டியுள்ளார்கள், நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் அது தான், தவறு என்றால் அதற்கான ஆதாரத்தை முன் வையுங்கள்.நான் திருத்தி கொள்கிறேன். எழுதியவர்: U F O , February 11, 2010 16:59 அனைத்து சகொதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் எளிய அரிய வாழ்க்கை என் மனதை கலக்கி விட்டது. என்னுள் பெரிய தாக்கத்தை எற்படுத்திவிட்டது. அதன்பிறகு படித்த மேற்கண்ட சகோதரர்களின் மறுமொழிகள் ஆக்கப்பூர்வமானவையும், தெளிவானவையும் ஆகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. எழுதியவர்: ibnu shah , February 13, 2010 19:44 சகோதரர் அப்பாஸ் அவர்களே! தாங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.நான் மற்றும் அப்துல்லாஹ்,முஹம்மத்,மஸ்தூக்கா ஆகியோர் பதித்த விஷயங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமல் மீண்டும் கருத்து எழுதியிருக்கிறீர்கள்.நமது அம்மா ஆயிஷா அவர்கள் இயற்கை உபாதை ஏற்பட்டதால் விடுபட்டுப்போன(செய்யமுடியாமல் போன)உம்ராவை மீண்டும் செய்ய இஹ்ராம் கட்டுவதற்காக"தன்யீம்"என்ற இடத்துக்கு போனார்கள்.மறு முறை உம்ரா செய்வதற்காக அல்ல என்பதை விளங்க வேண்டும்.எனவே இக்கால சகோதரிகளுக்கு அது போன்றதொரு காரணத்தால்,உம்ரா விடுபட்டு போனால் அவர்கள்,அதற்காக மட்டும் இஹ்ராம் கட்டுவதற்காக அங்கு செல்வார்கள் மாறாக முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ரா செய்வதற்காக அல்ல.அதே போன்றுதான் ஆண்களுக்கும் தவிர்க்க முடியாத ஏதாவது காரணத்தால் உம்ரா செய்யமுடியாமல் போனால் விடுபட்டுப்போனதை நிறைவேற்றுவதற்காக இஹ்ராம் கட்டுவதற்கு அங்கு செல்வார்கள்.மாறாக மீண்டும் மீண்டும் உம்ரா செய்வதற்காக அல்ல.தாங்கள் தான் பல உம்ராக்கள் செய்வதற்கோ அல்லது தாங்கள் சொன்ன மாதிரி(//மறு உம்ராவை நிறைவேற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்ன இடம் தன்யீம் தவிர வேறெதையும் என்னால் காணவில்லை,விடுப்பட்ட உம்ரா பகரமாக மறு உம்ரா ஒருவர் செய்ய விரும்பினால் அங்கு செல்வது தவறு ஒன்றுமில்லை,குற்றமும் இல்லை//)மறு உம்ரா செய்வதற்கோ ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.எனவே தான் நான் என்னுடைய பின்னூட்டத்தில்//சகோதரர் அப்பாஸ் அவர்களே!தாங்கள் எந்த ஹதீஸாவது ஒரு உம்ராவை நிறைவேற்றியவர்கள் தலையின் ஒரு பகுதியை மட்டும் கொஞ்சமாக வெட்டிவிட்டு,மீண்டும் உம்ரா செய்வதற்கும்,எத்தனை உம்ராக்கள் செய்ய வேண்டுமோ அத்தனை உம்ராக்களையும் செய்து விட்டு கடைசியாக முழு தலையையும் மொட்டை அடிக்கிறார்களே நம் மக்கள்?அதற்கும்,தெளிவான ஆதாரமாக இருந்தால்,முன்வையுங்கள் பார்ப்போம்.//என்ற கருத்தை வைத்துருந்தேன்.ஆனால் அதற்கு பகரமாக தாங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.மறு உம்ரா செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஆதாரத்தை தாங்கள் கேட்கிறீர்கள்.நேரடியாக தடை செய்யப்பட்ட ஹதீஸ் எதுவும் இல்லை.ஆனாலும் ஆயிஷா(ரழி)அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸிலேயே நாம் அதற்குண்டான ஆதாரத்தை பெற முடியும்.சகோதரர் மு.முஹம்மத் அவர்கள் எழுதிய பின்னூட்டத்தை நன்கு படித்து சிந்தித்து பாருங்கள் //அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டு உம்ரா நிரைவேற்ற இயலாததால் அதற்கு பகரமாக இந்த தன்ஈம் எனும் இடத்திற்கு சென்று இஹ்ராம் கட்டி வரும் படி நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மறு உம்ரா என்று ஒன்று இருக்குமெனில் அவரும் சென்ரு இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றி காட்டியிருப்பர்கள். அல்லது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு துணையாக சென்ற சகோதரர் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் இஹ்ராம் அணிந்து மறு உம்ரா செய்து காட்டியிருப்பார்கள் ஆனால் அவ்வாரு செய்ததாக ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை என்பதை கவனிக்கவும். //மறு உம்ரா செய்வதாக இருந்தால் தானே தன் மனைவியை கூட்டிக்கிட்டு போயிருப்பார்களே?அவர்களல்லவா அதற்கு தகுதியானவர்கள்?தன் மனைவியோடு தானும் இஹ்ராம் கட்டிவிட்டு வந்து மறு உம்ரா செய்துருப்பார்களே?அவர்களின் சகோதரரை ஏன் அவர்களுக்கு துணையாக அனுப்ப வேண்டும்?எந்த ஒன்றுக்கும் நபிகளாரின் அங்கீகாரம் இல்லையென்றால் அது எப்படி மார்க்கமாகும்? அன்புச்சகோதரரே!ஏதாவது தவறாக எழுதியிருப்பதாக தங்களுக்கு தோன்றினால்,தயவு செய்து அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்.வல்ல ரஹ்மானான அந்த அல்லாஹ் தங்களுக்கும் எனக்கும் அருள்செய்வானாக.அவனே ஞானமிக்கவன்.மிக்க நுன்னறிவாளன். எழுதியவர்: அபூஃபைஸல் , February 17, 2010 23:28 அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.நூருத்தீன் மிக அருமையான எழுத்தாற்றல் கொண்டவராக விளங்குகிறார் தமிழகத்தில் இருந்துகொண்டே தமிழ் அதிகம் எழுத படிக்க தெரியாதவர்கள் உள்ள நிலையில் சகோதரர் அமெரிக்காவில் பத்தாண்டுகளாக இருந்தும் எளிய தமிழில் அளித்துள்ள இந்த கண்ணீர் சரித்திரம் மனதை விட்டு அகலவில்லை ஸயீத் இப்னு ஆமிர் அவர்கள் நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்கு பின்னூட்டம் இட்டுள்ள சகோதரர்களின் பின்னூட்டமே ஒரு கட்டுரை போல் இருக்கிறது கொஞ்சம் குறைத்து கொண்டால் அதை முழுமையாக வாசிக்கலாம் கருத்து எழுதுக :
|