சத்தியமார்க்கம்.காம்

இறையச்சம் (கை)கூடியதா? print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
சனி, 22 ஆகஸ்டு 2009 11:25

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2

தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.

ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.

குர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரம் ஆகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளை விடப்பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.

 

இதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன? ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.


ரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனதில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.


".... நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்." (அல்குர்ஆன் 2: 183)


ஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.


கடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன? என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் "இறையச்சம் உடையவர்கள்" ஆகிக் கொண்டிருக்கிறோமா? ஆகிவிட்டோமா? ஆகவேயில்லயா? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளைவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 

 

- தொடரும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

< பகுதி-1

கருத்துக்கள் (1)add comment
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்.. நோன்பின் முக்கிய நோக்கமாகிய இறையச்சம் / இறையுணர்வு என்பது மனிதர்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் என்றென்றும் தேவையான ஒரு சிறந்த பண்பாகும்.. இதைப் பெற்றிட தரப்படும் ஒருவித ஆன்மீக பயிற்சியே இந்த நோன்பு...

எந்நேரமும் நான் (நாளை மறுமையில் என்னை கேள்விக் கேட்க கூடிய எனது குற்றங்களுக்கு தண்டிக்கக் கூடிய ) எல்லாவற்றையும் கண்காணிக்க வல்ல இறைவனின் நிகரற்ற மேற்பார்வையில் உள்ளேன் என்பதே இந்த இறையச்சம் எனும் உணர்வு

ரமலானின் நோன்பு மூலம் பெறப்படும் / பெறவேண்டிய இவ்வுணர்வு ( இறையச்சம்) அது உள்ள ஒரு மனிதனுக்கு மட்டுமின்றி அவன் வாழும் சுற்றத்திலும் சமூகத்திலும் நீதமான, சாந்தியான, மற்றும் ஒழுக்கமான... ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பரவிடவும் அதனால் எல்லாவற்றிலும் சிறந்த நற்பலன்கள் விளைவிக்கவும் வல்லது.

நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் "
எவர் பொய்யையும் தீயகாரியங்களையும் கைவிடவில்லையோ அவர் வெறுமன உண்ணாமலும் பருகாமலும் இருப்பது அல்லாஹுக்கு தேவையற்றது.


இந்த இறைவசனத்திலும் நபி மொழியிலும் வலியுறுத்தப்பட்ட பேருண்மையை மறந்து நோன்பை வெறும் சடங்காக நிறைவேற்றும் நிலையில் முஸ்லிம்கள் இருந்து விட்டால் அல்லது இந்த பெரும் நன்மையை முறையாக பெறாத நிலையில் இந்த நோன்பு மாதம் மூதல் மீதமுள்ள நாட்களும் கழிவது என்ற நிலை இருப்பின், இந்த முக்கிய நோக்கத்தை முறையாக பெறாதலால் அது மிகப்பெரும் கைசேதமாக அமைந்து விடும். இறைவன் இதை ஒரு முக்கிய கடமையாக விதித்துள்ளதன் நோக்கம் பெற்றதாக அமையாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்....

கருத்து வேறுபாடுகளை களைந்து / மறந்து ரமளானையும் நோன்பையும் வெறும் சடங்காக நிறைவேற்றிடும் நிலையை தவிர்த்து... இறைமறை மற்றும் நபி வழியில் முழுமையாக இந்த மாத அமல்களை நிறைவேற்றி இந்த பயிற்ச்சியை தக்க வைத்து உளப்பூர்வமாக வாழ்வதன் மூலம்... இந்த "இறையச்சம்" உள்ளவர்கள் எனும் பெரும் பாக்கியத்தை ரமலானின் நோன்பின் போது மட்டுமின்றி என்றும் இழந்து விடாமல் இறுதி மூச்சு வரை இருக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
1

August 22, 2009 22:06

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம். நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்"" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் இறையச்சம் (கை)கூடியதா?