| தப்லீக் அன்றும் இன்றும் |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய நூல்கள் | ||||||||
| புதன், 10 மே 2006 15:08 | ||||||||
|
ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா தவிர்க்க முடியாத சில குறிப்புகள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் உத்தம ஸஹாபாக்கள் துயர்ந்தோர் அனைவர் மீதும் யுக பரியந்தம் சொரியட்டும். 'எவர்கள் மெய்யாகவே விசுவாசம் கொண்டு தங்கள் விசுவாசத்துடன் யாதோர் அக்கிரமத்தையும், கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக அபயமுண்டு. அவர்கள் தாம் நேரான வழியிலும் இருக்கின்றனர். (6:82) நீண்டகால எண்ணம் செயல்வடிவம் பெறுகின்றபோது மனம் நிறைகிறது. கடந்த ஏழு வருடங்களாக நாட்டின் பல்வேறு மஸ்ஜித்துக்களில் இமாமாக கடமையாற்றிய அனுபவத்தின் வெளிப்பாடு இச்சிறுநூல், தப்லீக் ஜமாஅத் முழுமையாக மஸ்ஜித்துக்களை தளமாகக் கொண்டியங்கும் ஓர் இயக்கம் என்பதாலும் அதனுடனான நெருக்கமான தொடர்பாலும் அதுபற்றிய நடுநிலையான விமர்சனத்தை என்னால் எழுத முடிகறது. இலங்கையில் பல தஃவா இயக்கங்கள் இயங்கிவருகின்ற போது ஏன் தப்லீக் ஜமாஅத்தை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அதன் அபிமானிகளுக்கு எழலாம். பிற இயக்கங்களை விட, இஸ்லாத்தில் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் தப்லீக் ஜமாஅத்துக்கு ஏற்பட்டுள்ளது. இருட்டறைக்குள் கூடி தப்லீக் ஜமாஅத்துப்பற்றி விமர்சிப்பதைவிட ஆராக்கியமான விமர்சனத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது சிறந்தது என்ற சிந்தனை ஏற்பட்டபின்புதான் இதை எழுதத் துணிந்தேன். எதார்த்தத்தில் தப்லீக் தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதும் இல்லை. விமர்சனங்களை அங்கீகரிப்பதுமில்லை. இந்தப்போக்கை அது மாற்றவேண்டும் என்பதே அறிஞர் அவா. விமர்சனங்களினால் பாதுகாக்கப்படுவதை விட, புகழ்ச்சியினால் அழிந்து போவதைத்தான் தப்லீக் பெரிதும் விரும்புகிறது. தப்லீக்கின் பரிபாசையில் 'ஹிக்மத்' என்பது தந்திரத்துடன் இணைந்த தஃவா முயற்சியாகும். இது முற்றிலும் தவறான கணிப்பீடாகும். ஹிக்மத் என்பது நளினமுடன் கூடிய நாகரீகமுள்ள வார்த்தை மூலமாக இறைவழியில் அழைப்புவிடுக்கும் அல்லது தர்க்கிக்கும் இங்கிதத்தைக் குறிக்கின்றது. (6:125) ஷரீஅத்துக்கு முரண்பட்ட அனுஷ்டானங்களை மூடிவைத்து அல்லது அங்கீகரித்து செய்கின்ற எத்தகைய அணுகுமுறைக்கும் ஹிக்மத் என்ற பதத்தை பிரயோகிக்க முடியாது. இது கபடத்தனமான 'தஃவா' முயற்சியாகும். ஹிக்மத் விரிந்த கருத்துப் பரிமாற்றத்தையும் ஆழமான பொருட்செறிவையும் கொண்ட வார்த்தையாகும். விரிவை அஞ்சி அவற்றைத்தவிர்த்து விஷயத்துக்கு வருகின்றேன். நான் 92 இன் இறுதிப் பகுதியில் கண்டி மாவட்டத்தின் பல்கும்புரை என்ற கிராமத்தின் கடமையாற்றிய போது தப்லீக்கின் நெருக்குதல்களை எதிர் கொள்ள ஆரம்பித்தேன். மூன்றுநாள் தப்லீக்கில் வெளிக்கிளம்பாதவர்கள் முழு மனிதனாக முடியாதென என்னை நோக்கி ஒருவர் கூறினார். இன்னொருவரோ, அரபு சஞ்சிகைகள், நூற்களை வாசித்தால், இதுவெல்லாம் வஹ்ஹாபிகள் எழுதிவைத்தது, வாசிக்கக் கூடாதென்பார். குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவயில் கடமையாற்றியபோதும் இவ்வாறானதோர் அனுபவத்தை எதிர் கொள்ள நேரிட்டது. மிம்பரில், தஸ்லீமா, ஸல்மான் ருஷ்டி போன்ற இஸ்லாத்தில் வைரிகளை சாடியதற்காக, அங்குவந்த ஒருவர் குத்பாவில் இதுவெல்லாம் கூறக்கூடாதென்றார். அத்துடன் என்னை 'தப்லீக் விரோதி' எனப் பிரச்சாரப்படுத்தியும் வந்தார். பின்பு அனுராதபுர மாவட்டத்தில் 'இக்கிரிகொல்லாவ' என்ற கிராமத்தில் கடமையாற்றிய காலத்தில் பல கசப்பான நிகழ்வுகளை எதிர் கொள்ள நேரிட்டது. அவை என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவங்கள், ஒருநாள் இரவு இஷாத் தொழுகைக்குப் பின் தஃலீம் தொகுப்பு வாசிப்பதற்கு பதிலாக, நபி பெருமானார் (ஸல்) தொழுகைக்குப்பின் ஓதிவந்த வாரிதான் அவ்றாதுகள் பற்றிய விபரங்களை கூறினேன். இதை சகித்துக் கொள்ள முடியாத ஒருவர், 'அஸா' வைத்தூக்கிக் கொண்டு குத்தி கிழித்து விடுவேன் எனப்பாய்ந்து வந்தார். காரணம் யாதெனில் தஃலீம் வாசிக்கப்படுவதற்குப் பதிலாக, பெருமானாரின் பொன் மொழிகள் விளக்கப்படுவதை அவர் விரும்பவில்லை என்பதை பின்பு அறிந்தேன். 'அது ஹதீது' வித்தியாசமாக வாசிக்கவில்லையே என்றேன். 'ஹதீதை தூக்கி அங்கால எறி' என்றார் இன்னொருவர். இதுபோன்ற அனேக கசப்பான அசௌகரியங்களை நேருக்குநேர் முகங்கொள்ள நேரிட்டது: நேரிடுகிறது. தனது ஜமாஅத்துக்கு ஒட்டுதல் இல்லாத ஒருவன் எத்தகைய அந்தஸ்துள்ளவனாக இருந்தாலும், அவனின் தன்மானத்திற்கும் சுயகௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துவதில் சில தப்லீக் அங்கத்தினர் பின்நிற்பதில்லை என்ற அழுத்தமான உண்மை இவற்றின் மூலம் எனக்கு கற்றுத்தரப்பட்டது. இச்சிறுநூலை படிப்போர் தப்லீக்கை ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றேன் என்றோ, தப்லீக் விரோதி என்றோ கருதிவிடக் கூடும். உண்மை அதுவல்ல, அதன் நண்பகத்தன்மை, மக்கள் செல்வாக்கு, தியாகம் போன்ற குணாதிசயங்களை நானறிவேன். அல்குர்ஆன் தவிர்ந்த மற்றெல்லா அம்சங்களும் தீவிர விமர்சனத்திற்குட்படுத்த வேண்டியதே, ஆலோசனைகள், கருத்துப்பரிமாறல்கள் மூலம் ஓர் இயக்கம் தன்னை வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். இதன் ஆதங்கமே இந்நூல். இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை விடுத்து நோக்கும் போது தப்லீக் ஒரு தூய்மையான இயக்கம் என்ற உண்மையை எவரும் நிராகரிக்க முடியாது. மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களின் நோக்கத்திலிருந்து தப்லீக் நெறிதவறிச் செல்கிறது என்பதை விளக்குவதுதான் என் எண்ணம் மக்களின் பாமரத்தனத்தை பயன்படுத்தி, சிலமேட்டுக்குடி வியாபாரிகள் எங்ஙனம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்ற பேருண்மையை சாதாரண ஊழியனும் புரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் சமநிலை மனத்துடன் தூயசிந்தானையுடன் படிப்போருக்கு மட்டுமே தன் சொந்த இயக்கத்தின் சாதக பாதகங்களை எடைபோடமுடியும். தப்லீக்கின் சாதகமான விஷயங்களை விரிவை அஞ்சி தவிர்த்துள்ளேன். இதன் மூலம் தப்லீக் ஜமாஅத்தை தரம் தாழ்த்துவது என் நோக்கமல்ல. மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம், காலத்திற்கியைந்த சீர்திருத்தத்துடன், தன் தவறுகளை களைந்து தஃவாப்பாதையில் முன்னேற வேண்டுமென்பதே அவா. அத்துடன் சகோதர இயக்க அன்பர்களிடம் நான் வினயமாய் வேண்டுவது தப்லீக் ஜமாஅத்தினரை இழிகண் கொண்டு நோக்காதீர்கள். அவர்களினால் நிகழும் தவறுகள் அறியாமையினாலும், பாமரத்தினத்தினாலுமே ஏற்படுகின்றது. இங்கிதமாக அணுகி, தவறுகளை சுட்டிக்காட்டும் போது, பெருமனத்துடன் ஏற்றுக் கொள்வோர் அங்குண்டு. இது என்தனிப்பட்ட நீண்டகால அனுபவதும் கூட (எதிர்வாதம் புரிந்து தன்தவறை நிச்சயப்படுத்துவோர் விதிவிலக்கு) எனவே அவர்களுக்காக பரிதாபப்படுங்கள். மனிதாபிமானத்துடன் அணுகுங்கள். இறுதியாக, இருளை சபித்துக் கொண்டிருப்பதை விட விளக்கொன்றை ஏற்றிவைப்பது சிறந்தது, என்பதற்கேற்ப, இதன்மூலம் ஒருமெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த ஆத்மதிருப்தி எனக்கு ஏற்படுகிறது. அது இறை திருப்தியாகவும் அமைய வேண்டும் அல்லாஹ் நம் அனைவருக்கும் உயர் ஹிதாயத்தை தருவானாக! பணிவுடன் அறபாத் 71, பஸீர் வீதி, மாவடிச்சேனை, வாழைச்சேனை, 1997-12-01
தப்லீக் அன்றும் இன்றும் (நபியே) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிருப்போர் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான் (16:125) தஃவாப் பணி என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல. இது அண்மைக்காலமாக ஆரம்பிக்கப்பட்ட வேலையுமல்ல. நபிமார்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பரியந்தம் தனிநபராகவும், ஜமாஅத்தாகவும் இப்பணி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மறந்துபோன இத்தூதுத்துவச் செய்தியை மனித சமூகத்திற்கு நினைவூட்டி, இறைவழியில் நெறிப்படுத்த, காலத்திற்கு காலம் தனிநபர்களும் இயக்கங்களும் நிறுவன ரீதியாக தோன்றி செயற்பட்டு வருகின்றன. தற்போது தஃவாப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள இயக்கங்களும் எதிர்காலத்தில் தோன்றவிருக்கின்ற அமைப்புக்களும் முஸ்லிம் உம்மத்திற்கு புதியதுமல்ல. சிறிய கருத்து வேறுபாடுகள், சந்தர்ப்ப சூழல் என்பன காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்கு காலம் பல இயக்கங்களும், அமைப்புக்களும் தோன்றுவதுண்டு. இவற்றில் அல்லாஹ்வுக்காக தோற்றுவிக்கப்பட்டவை மட்டுமே நின்று பிடிக்கும். ஏனையவை அல்குர்ஆன் கூறுவது போல் களங்கம் ஏற்படுத்திவிட்டு மறைந்து விடும். 'தங்கள் இதயங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களின் இதயங்கள் துண்டு துண்டாகும் வரை அவற்றை உறுத்திக் கொண்டே இருக்கும். இப்பணியில் மனத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வெற்றிகண்ட மேதைகளின் வரலாறு தற்கால தாயிகளின் மன வலிமைக்கும் உத்வேகத்திற்கும் உரமூட்டுவதாய் உள்ளது. அவர்களின் தூய சிந்தனை, விடா முயற்சி, தாராள மனப்போக்கு, மென்மையான அணுகுமுறை, அக புறவாழ்வின் மாசுவறுவற்ற தொழிற்பாடு, இறையச்சம் போன்ற உயர் குணங்கள் அவர்களின் வெற்றிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டது. சமூகத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மிகச்சில. ஏனையவை தனிப்பட்ட நோக்கங்கள் உடையன. ஆனால் ஆரம்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் நாளடைவில் அவற்றுக்கென்று சில கொள்கைகளை வளர்த்துக் கொள்வதுண்டு. இதனால் சில சந்தர்ப்பங்களில் அவற்றால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கவும் முனைவதுண்டு. உண்மையில் இவ்வித கருத்து வேறுபாடுகளும் அமைப்புக்களும் அடிப்படையிலேயே கொள்கை ரீதியானவைகளாக அமைந்திருக்குமானால் அவை ஒவ்வொன்றும் தனித்துச் செயற்பட துணிந்திருக்காது. மாறாக ஏற்கனவே உள்ள இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றில் மிகவும் பொருத்தமான ஒன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கும். கடந்த நூற்றாண்டில் சத்திய இஸ்லாத்தை சரிவரப்புரிந்து செயல்வடிவம் கொடுத்து உழைத்தவர்கள் பலர். அவர்களில் மௌலானா இல்யாஸ் (ரஹ்), மௌலானா அபுல்அஃலா மௌதூதி, ஹஸனுல் பன்னாஹ் போன்ற மேதைகளை குறிப்பிடலாம். எனினும் பாமர மக்களை நெறிப்படுத்தி அவர்களிடத்தில் இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களை பயிற்றுவித்ததில் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்ள் (ஹி 1303-1363) முதன்மை பெறுகின்றார்கள். தப்லீக்கின் வளர்ச்சியை ஆய்வுசெய்வோர் இவ்வுண்மையை புரிந்து கொள்ள முடியும். 'தரீகே ஈமான்' என்ற பெயரில் இவ்வியக்கத்தை ஆரம்பித்த மௌலானா 1939 இல் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர் மாற்றத்தோடு மேவாத் பகுதியில் அத்தீவிர ஈடுபாட்டுடன் உழைக்கலானார்கள். இதுபற்றி மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது.....
இப்பணியில் முதற்கட்ட நடவடிக்கைகளை காந்தலா என்ற பின் தங்கிய கிராமத்தில் இருந்து ஆரம்பித்து நெறிப்படுத்திய பின் அயற்கிராமங்களுக்கும் பிராச்சாரப் பணியை விஸ்த்தாரமாக்கினார்கள். தனது இருபது வருடகாலப் பணியில் இதன் வெற்றிக்கு துணையாக உலமாக்களையும் கற்றறிந்த அறிஞர்களையும் அரவணைத்து அவர்களின் வழிகாட்டலின் கீழ், இப்பணியை செய்ததாக மௌலானா அவர்களே வாக்குமூலம் தருகிறார்கள்.
மௌலாவின் இந்த அபிலாஷை, இலட்சிய வேட்கை, ஆகியவற்றை தற்கால தப்லீக் ஜமாஅத்தினர் அலட்சியப் படுத்துவதுடன், உலமாக்கள், தூய்மையான தீனை முன்வைக்கும் போது, அவற்றைப் புறக்கணிப்பதுடன், எதிராக செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இயக்கத்தின் உயர் வெற்றிக்குத் தகுதிவாய்ந்த உலமாக்களின் அணுசரணை கவனத்திற் கொள்ளப்படாமையும் பிரதான காரணமெனலாம். இயக்கத்திற்குள் தற்போது இருக்கும் சில உலமாக்கள் மேட்டுக்குடியினரின் தீர்மானங்களுக்கு தலையாட்டுபவர்களாகவும், தப்லீக் ஜமாஅத்தின் தவறுகளையும் வன்முறைசார் பண்புகளையும் அனுமதித்து, தார்மீக அங்கீகாரத்தை வழங்கக் கூடியவர்களாகவுமே இருக்கின்றனர். இவ்வுயர் இயக்கத்தின் இலட்சியக் கொள்கையை மௌலானா அவர்கள் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.
தப்லீக் இயக்கத்தின் அதிஉயர் சாசனமாக இப்பிரகடனம் முழங்குகின்றது. எனினும் ஜமாஅத்தினரால் மேற்கூறிய எந்தப் பணியும் பிரச்சாரப்படுத்தப்படுவதில்லை. தொழுகைக்கு அழைப்பது, இன்னும் பிற ஆத்மீக பயிற்சி என்பதுடன் தஃவாவை மட்டுப்படுத்தி வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தின் மூலவேர் பாமரர்கள் தான். பள்ளிவாயிலை பிரதான தளமாகக் கொண்டியங்கும் இவர்களால் மூடிக்கிடந்த பள்ளிகள் அமல்களால் அலங்கரிக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மனந்திருந்தி வாழ தப்லீக் அரிய பங்களிப்பை நல்கியது. நல்கி வருகின்றது. ஐங்கால தொழுகை உட்பட, இன்னும் பிற மங்கிப் போன சுன்னத்துக்களும் உயிர் பெற்றன. தனது சொந்தப் பணத்தில் பாகுபாடின்றி கிராமந்தோறும் அலைந்து திரிந்து மக்களை இறை இல்லத்தின்பால் அழைத்து, தக்வாவையும் பக்குவத்தையும் ஊட்டியது. படிப்பறிவே இல்லாத பலர் சிறந்த இஸ்லாமிய தாயிகளாக உருவாக்கியதில் அபரித வெற்றி கண்டது தப்லீக், இவற்றை எவரும் மறுத்து விடமுடியாது. எனினும் இப்பணிகள் மட்டும் தான் இஸ்லாம் என்ற மாயையில் தஃவாவை சுருக்கிக் கொண்டது தான் வேதனைக்குரியது. தப்லீக் சரியான விதத்தில் பரவவேண்டுமானால் கீழ் கண்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டியது அவசியமென மௌலானாவே வாக்கு மூலம் தருகின்றார்கள். 1. தப்லீக் இயக்கத்தின் திட்டங்களை பிரச்சாரம் செய்வதற்கு சிறந்த பேச்சாளர்களை, உலமாக்களை தயார் செய்து அவர்கள் மூலம் தப்லீக் பிரச்சாரம் செய்தல். 2. தப்லீக் இயக்கத்தின் நோக்கங்களை அறிவிப்பதற்காக குறைந்த பட்சம் ஒரு சிறந்த வாரப்பத்திரிகையை நடத்துதல். பக்கம் : 128 இந்த இலட்சியத்துடன் இன்றைய தப்லீக் முரண்பட்டு நிற்கிறது. சஞ்சிகை, புத்தகம், பத்திரிகை மூலமாக தஃவாச் செய்வோரை தமது பயான்களில் சிலர் பரிகஷிப்பதும், அவற்றினால் பயனில்லை என்பதுடன் நின்று விடாமல், அவற்றை படிக்க தடை விதிப்பதையும் சில பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது. ஓர் இயக்கமோ அமைப்போ நீண்ட காலம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் போது அதன் இலக்கு நோக்குடன் மற்றவையும் கலந்து விடுகின்றன. பல்வேறு நோக்கங்கள், எண்ணங்கள் அதனுள் புகுந்து விடுகின்றன. எனவே இயக்கத்தின் உடல் எஞ்சி நிற்க, அதன் உயிரோட்டம் காணாமல் போய்விடுகின்றது. அதன் அமைப்பு விதிகளில் குறிக்கோளும் இலகும் தெளிவான வார்த்தைகளில் காணப்படும். அதேவேளை நடைமுறை வாழ்விலிருந்து அது அழிந்து விடுவதை அவதானிக்கலாம். இத்தகைய பாரிய அழிவை நோக்கியே தப்லீக் ஜமாஅத் சென்று கொண்டிருக்கிறது. வெறும் கொள்கை முழக்கம், புறத்தோற்றம் மாற்றம், 'வக்தில்' செல்லுதல், தினசரி அமல்களில் ஈடுபடல் மட்டும் தான் தப்லீக் என்ற பிரமை அதன் அடிமட்ட, ஏன் சில உயர் மட்ட உறுப்பினர்களிடம் கூட, வேரூன்றி உள்ளது. ஒரு கருத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லை, மிக அதிகமான மக்கள் கையாளும் போது அந்த சொல்லின் கருத்துக்கள் நாளடைவில் தேய்ந்து போகின்றன. தப்லீக்கிற்கும் இவ்வபாயம் தான் ஏற்பட்டிருக்கின்றது. நீண்ட கால உழைப்பில் கட்டியெழுப்பப் பட்ட, இஸ்லாமிய இயக்கமொன்று வெறும் சடங்கு வாத சிந்தனைகளால் சிக்குண்டு, திணறுகின்றது. தனிப்பட்ட மனிதர்கள் தப்லீகில் தம் தனித்தன்மையை (ஐனநவெவைல) வளர்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தப்லீக் ஏகாதிபத்திய வாதிகளாகவும், (ஐஅpநசயைடளைவiஉ) தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள, தமது செயற்பாடுகளை நியாயப்படுத்த கூடியவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தில் வேரூன்றி வருகின்ற அபாயகரமான வியாதியாக 'ஜமாஅத்துவாதத்தை' குறிப்பிடலாம். சகோதர தஃவா இயக்கங்களை அடக்கி ஒடுக்க நினைப்பதும், அவர்களின் தஃவா நடவடிக்கைகள் பள்ளிவாயலை மையமாகக் கொண்டு செயற்பட தடை விதிப்பதும் வெள்ளிடை மலை. (சில இடங்களில் விதிவிலக்கு) சகோதர இயக்கமொன்றின் அனுகூலங்களை விடுத்து, குறைபாடுகளை மட்டும் விமர்சிக்கும் பண்பு தப்லீக் தவிர்ந்த பிற இயக்க உறுப்பினர்களிடமும் காணப்படுகின்ற பொதுக்குணமென்பதையும் ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இது இயக்கத்தை வணங்குவதன் உச்சக்கட்ட எதிர்வினையாகும். நாங்களே சரி, எங்கள் ஜமாஅத்தே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதென்றமுடிவுக்கு ஜமாஅத்துவாதிகள் வருவதற்குக் காரணம் மேல் மட்ட தலைமைத்துவம். இது குறித்து சரியான அறிவுறுத்தல்கள் கலந்துரையாடல்களை ஏற்படுத்தாமையே! சகோதர இயக்கமொன்றுடன் கருத்துப் பரிமாற்றம் அல்லது அவர்களுடன் இணைந்து இஸ்லாத்தின் பொது விரோதிகளை எதிர்ப்பதில் ஒத்துழையாமை போன்ற இன்ன பிற செயற்பாடுகளால், தப்லீக் பிற இயக்கங்களுடன் தனக்குள்ள ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றது. இவ்வராஜரகப் போக்கு மௌலானா இல்யாஸ் அவர்களின் காலப்பிரிவில் வாழ்ந்து பாமர 'ஜமாஅத்து வணங்கி'களிடமும் ஏற்பட்டது. எனினும் மௌலானா அவர்கள் அவற்றை எங்கனம் எதிர்கொண்டார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மௌலானாவிற்குப் பின் தப்லீக் பணிசெய்த புரிந்துணர்வற்ற பாமரரும் சில இயக்க எழுத்தாளரும் இப்பணியின் மகிமையையும் தாற்பரியத்தையும் சிதைக்க முற்பட்டதுடன் இயக்க வேறுபாட்டையும் தோற்றுவித்தனர். 'இப்பணியில் ஈடுபடாதவர்கள் மிகவும் கேவலமாகக் கருதப்பட்டார்கள். சுருங்கக் கூறுமிடத்து, அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப்படாது போய் விட்டார்கள். மேற்படி நூல் பக்கம்: 89 என்றெல்லாம் எழுதி ஜமாஅத்துவாதம் வேரூன்றி வித்திட்டனர். இவ்வன்முறை சிந்தனைப் போக்குக் குறித்து மௌலானா அவர்கள் கூறுவதை நோக்கற்பாலது.
எந்த ஓர் இயக்கமாயினும் அதன் ஸ்தாபகரையும் அவருடன் தோள்நின்று உழைத்தோரையும் புகழ்வதென்பது தவிர்க்க முடியாதது. எனினும் துரதிஷ்ட வசமாக தப்லீக் ஜமாஅத்தினுள் குருபூசை ஊடுருவி, அவர்கள் அறியாமலேயே, ஈமானின் கோட்பாடு அம்சங்களை சிதைத்துக் கொண்டிருக்கின்றது. மகான்கள், பெரியோர்கள் என்ற மாயைக்குள் அகப்பட்டு அவர்களின் மூலம் நடைபெற்றதாக இட்டுக்கட்டப்பட்ட சித்து விளையாட்டுக்களையும் கதை கப்ஸாக்களையும், அவிழ்த்து விட்டு, பயான்களில் ஹக்குடன், 'பாதிலை' இரண்டறக்கலந்து, வெறும் ஊகங்களுக்கும், வெளிக்கலாச்சார கப்பாஸ்களுக்கும், இஸ்லாமிய வடிவம் கற்பிக்க முயல்கின்ற தான் தோன்றித்தனமான, தீவிர போக்கையிட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும். மார்க்கத்தை பிரச்சாரப்படுத்த பொய்யும், புரட்டும் கற்பனைக் கதைகளும் தேவையில்லை. எண்ணிலடங்கா தூய்மையான வரலாறும், நபிமொழிகளும் நம் வசமுண்டு. நபிகளார் கூறுவதை பாருங்கள். 'உங்களை நான் மிக வெண்மையான வழியில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று வெளிச்சம் நிறைந்தது. எனக்குப் பின் நான் விட்டுச் சென்ற அந்த வழியை விட்டும் வழி தவறுகிறவன் தான் நாசமாகக் கூடியவன் என்கிறார்கள்.' இர்பான் இப்னுஸாரியா, இப்னுமாஜா மேலும் நபி(ஸல்) அவர்கள், 'நான் சொல்லாததைச் சொன்னதாக எவன் சொல்லுகிறானோ அவன் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.' என்று நவின்றுள்ளார்கள்(முஸ்லிம்) 'நபியவர்கள் சொன்னார்கள், இது ஸஹீஹானரிவாயத்', என்று அப்பட்டமான போலி ஹதீதுகளையும், 'மௌலுஆன', நபிமொழிகளையும் மிக அழுத்திப் பிரசங்கம் செய்து வரும், தப்லீக் ஜமாத் நபிகளாரின் இன்னொரு எச்சரிக்கையையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மூன்று விடயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை: 1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும், 2. பணத்தை வீணாக அழிப்பதையும், 3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபியவர்கள் கூறுகிறார்கள். புஹாரி, முஸ்லிம் இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விடயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம். அவர் சொன்னார், இவர் சொன்னார், ஒரு பெரியார் கூறினார், சொல்லப்பட்டது என்ற இறை வெறுப்பு வாசகங்களை தமது பயான்களில் ஒரு விதியாகவும், நழுவல் போக்காவும், தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். நபிவழியே நம் வழி என்ற சித்தாந்தத்தில் உழைக்கும் ஓர் இயக்கம், அந்த நபியை இழிவுப்படுத்துமாற் போல், அவர் சொல்லாத செய்யாத விடயங்களை, 'பிரபல்யமான' பெயரில் செய்து வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்கலாம். இதில் வேடிக்கை என்னெவென்றால் விற்காத சரக்கிற்கு விளம்பரம் தேடமுனைவது போல், நியாஸ் மௌலவி, ரிஸ்விமுப்தி போன்ற பிரபலங்களை சொல்லி கப்சாக்களை அவிழ்த்து விடுவதுடன், இந்த இயக்கத்தில் டொக்டர், என்ஜினியர் போன்றோரும் இணைந்துள்ளனர் எனத்தனிநபர் துதிபாடி ஆள் சேர்ப்பதும், ஓர் அம்சமாகி விட்டது. இல்யாஸ் ரஹ் அவர்களின் தஃவாப்பணியை நுணுகிப்படிக்கும் எவரும் இத்தகைய இழிபண்பினையையும், விளம்பரத்தையும் கண்டு கொள்ளல் சிரமமென்பதையும் காணலாம். வேதனை யாதெனில், கொள்கைக்கு முக்கியத்துவம் தராமல் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் அவர்களை மிதமிஞ்சிப் புகழ்தல், இவர்களின் கருத்தும் முடிவும் மாற்றமுடியாதெனக் கருதல் இவ்வாறான தனிநபர் பூஜை அண்மையிற்தான் தப்லீக்கில் தொற்றிக்கொண்ட நோயெனலாம். பிரபலங்களின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவர்கள் 'ஜமாஅத் விரோதி' என ஒதுக்கப்படுகின்றனர். இது மௌலானாவின் தூய்மையான ஏகத்துவ கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டது. தனிநபர் பூசையும் கண்மூடித்தனமான பின்பற்றதலும் இஸ்லாத்தின் தௌஹீத் கொள்கைக்கே வேட்டுவைக்ககூடிய அம்சங்களாகும். இது குறித்து மௌலானா அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை நோக்குங்கள்.
சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எல்லாவகை சுதந்திரங்களையும் மார்க்கம் அனுமதிக்கின்றது. மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட எதுவும் விமர்சனத்துக்குட்பட்டவைதான். குதர்க்கவாதம் பேசமுற்படும் இயக்க உறுப்பினர்களை நோக்கி மௌலானா இவ்வாறு சொல்கின்றார்கள்.' மார்க்க மேதைகள் ஏதேனும் உங்களிடம் கேட்டால் மட்டும் பதில் கூறுங்கள். நீங்களாகவே, அவர்களிடம் பேச்சை வளர்த்து தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். தப்லீக் தோன்றிய வரலாறு பக்கம் : 76 உண்மையில் தப்லீக்கின் உன்னதம் குறித்து மௌலானா அவர்களினதும் அவர்களைப் பின் பற்றி இயக்கத்தை வழி நடத்திச் சென்ற மேதைகளினதும் இலட்சிய வேட்கையை முற்றாகப் புறக்கணித்து, ஒரு சடங்கு வாத தப்லீக் அமைப்பைத்தான் இன்று நாம் தரிசிக்க முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்களை மக்களிடத்தில் கூறுவதும் அதை எடுத்து நடப்பதும் தான் தப்லீக் ஜமாஅத்தின் வேலையின் நோக்கமென மௌலானா கூறுவதை தப்லீக் சிந்திக்க வேண்டும். இந்த உம்மத்தை எந்த நிலையில் நபிகளார் விட்டுப் போனார்களோ, அந்த நிலைக்கு இந்த உம்மத்தை உயர்த்துவதற்கு உழைப்பது தான் இப்பணியின் இலட்சியம் என்றார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இச்சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் இயக்கமாகவே தற்கால தப்லீக் மதிப்பிடப்படுகிறது. தீன்பணி செய்யும் பிற இயக்க சகோதரகளை இழிவாக நோக்கல், காழ்ப்புணர்வு, இறுக்கமான கருத்துப் போக்கு அத்தஹிய்யாத்தில் விரலசைத்து, நெஞ்சின் மீது தக்பீர் கட்டுகின்ற சகோதரர்களை பள்ளயை விட்டே விரட்டல், அல்லது நோவினை செய்தல், தன் இயக்கத்திற்கு ஒவ்வாத நபர்களை 'வஹ்ஹாபி பூச்சாண்டி காட்டி மிரட்டல் போன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து தப்லீக் ஜமாஅத் விடுபடுவதென்பது கடின முயற்சியுமல்ல. மௌலானா கூறுவதைப் போல 'தப்லீக் வேலையின் நோக்கம் வக்து கொடுப்பது அல்ல' (மல்பூஜாத்: 49) என்பதிலிருந்து இதன் நோக்கம் மனிதனை ஒழுக்க மாண்பு, தூய சிந்தனை, தாராள வாதம், இங்கிதம், அடக்கம், தயாள குணம் போன்ற உயர்நெறயாளனாக பயிற்றுவிப்பதே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே, 'வக்து' செல்வதால் ஒருவன் பண்பாளனாக மாறிவிடுகின்றான் எனக் கருத முடியாது. அவன் புறச்சுழலில் ஏற்படுகின்ற தாக்கம் ஈமானியச் சுடர், அகச் சுழலை தூய்மைப்படுத்துகின்றதா என்பதே இங்கு முக்கியம். தப்லீக்கின் இலட்சியம் 'வக்தல்ல' மனிதனின் அகமிய எண்ணங்களில், தக்வா வடிவம் கொடுக்க வேண்டும். இதுவே, இந்த வேலையின் குறிக்கோள். இஸ்லாம் என்றால் தொழுகை, திக்ர் போன்ற அனுஷ்ட்டானங்களுடன் முற்றுப்பெறுகின்ற மார்க்கம் என்ற தவறான மனப்பிராந்தியை தப்லீக் ஜமாஅத் ஏற்படுத்த முனைகின்றது. இது இல்யாஸ் (ரஹ்) அவர்களின் கொள்கைக்கே வேட்டு வைக்கும் முயற்சியாகும். இது இயக்க வழிபாட்டால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமாகும். பொதுவாக மனிதனுடைய பலஹீனம் இரண்டு வகைப்படும். 1.அடிப்படை விபரங்களை அறியாதிருத்தல் 2. அறிந்திருந்தாலும் அதனைக் குறித்து அலட்சியமாக இருத்தல், அல்லது மறந்து விடுதல் சரியான அறிவு புகட்டாமலும், இயக்கத்தை சரிவர நடத்தாமலும், அழைப்பை சுலபமாக எடுத்துரைக்க முடியும் என்ற அபிப்பிராயத்தாலும் இத்தவறுகள் நடந்து விடுகின்றன. அத்துடன், இலங்கை தப்லீக், ஜமாஅத், வளைகுடா போன்ற அரபு நாடுகளில், இருந்து வரும், ஜமாஅத்துக்குமிடையே, பாரிய கருத்து முரண்பாட்டை அவதானிக்க முடிகிறது. இந்தியா, பாகிஸ்த்தான், ஜமாஅத்துக்கள், இலங்கை தப்லீக் இயக்கத்தின் தீவிரத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைப்புக்களாக இயங்குகின்றன. மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் ஜமாஅத்தினர், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதையும், நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதையும் கூட்டுத்துஆ ஓதாமலிருப்பதையும் இங்குள்ள ஜமாஅத்தினர் அலட்டிக்கொள்வதில்லை. அதே நேரம் இலங்கையர் ஒருவர் இதே கிரிகைகளை செய்யும் பட்சத்தில், அதைப் பிரச்சனைக்குரியதாக மாற்றி விடுகின்றனர். (அட்டுலுகம இஜ்திமாவின் போது ஹஜ்ரத்ஜீயின் மகன் ஜும்ஆ தொழுகை நடத்தி விட்டு, கூட்டுத்துஆ ஓதாமல் எழுந்து சுன்னத் தொழுதது ஈண்டு குறிப்பிடத்தக்கது) இது குறித்து, தீர்க்கமான இணக்கப்பாடொன்றை தப்லீக் ஜமாஅத்தின் உலமாக்கள் கூட இதுவரை முன்வைக்கவும் இல்லை. இவ்வனுஷ்ட்டானங்கள் தொடர்பாக, போதிய சிந்தனைத் தெளிவை போதிக்க வேண்டிய சில அறிஞர்கள் எரியும் நெருப்பில் நெய்யூற்றும் கைங்கரியத்தைத்தான் கவனமாகச் செய்து வருகின்றனர். தமது உறுப்பினர்களை ஹதீதுடன் பரிச்சயப்படுத்தி இவ்வாறான, விடயங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் அவசியம் பற்றி வற்புறுத்த வேண்டும். நபியின் சுன்னத்தை உயிர்ப்பிக்கப்பாடுபடும் ஓர் இயக்கம் நபி வழிக்கெதிராக செயற்படுவதை அவ்வியக்கத்தின் அதி உத்தம உலமாக்கள் தடுக்காதிருப்பதும், விசனத்திற்குரியதாகும். இவ்வாறான பிணக்குகள் சமூகத்தில் ஏற்படும் போது, மௌலானா நடந்து கொண்ட இங்கிதமான பண்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மௌலானா கூறுகின்றார்கள்.
இலங்கை தப்லீக் ஜமாஅத் அவசரமாக புணர் நிர்மானம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி உள்ளது. அதன் எழுதப்படாத சித்தாந்தங்களை மீள்பார்வைக்குட்படுத்தி, சகோதர இயக்கங்களை அனுசரிக்கும் பண்பினை வளர்ப்பதற்கு உழைப்பதும், அதன் தஃவா வரலாற்றில், புறக்கணிக்க முடியாத அம்சங்களாகும். ஏனெனில் குர்ஆன் கூறுகின்றது. 'அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளைகளை கொடுக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.' (அல்குர்ஆன் 2:185) உடம்பின் தேவைகளைப் பொருட்படுத்தாது அதனைத் துயருறுத்தி ஆன்மாவை தூய்மைப்படுத்தும் முனைவுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்புவதில்லை. ஆனால் ஏனைய தர்மங்கள், இவற்றைப்போதித்து வருகின்றன. தப்லீக், இஸ்லாம் போதிக்காத இத்தகைய வெற்றுக் கோசங்களையும், உளுத்துப்போன மரபுகளையும் பேணி வருவதுடன், பள்ளியே கதி, அல்லாஹ்வே விதியென ஒரு மந்த வாழ்வை பயிற்றுவிக்கிறது. குடும்பத்தை ஒழுக்க நெறியில் இட்டுச்செல்ல உழைத்தல், சமூக்கடமை, தார்மீகப்பொறுப்பு, சமூக நலன்களில் பங்கெடுத்தல் போன்ற கடமைகளும் ஓர் 'இபாதத்' என்பதை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயற்பட வேண்டும். அத்துடன் எந்த ஓர் அமைப்பாயினும் தலைமைத்துவம் என்பது ஒரே அமீரின் கீழ் இயங்கி வருவதுதான் சுன்னாவாகும். உயர்மட்ட ஆலோசனை குழுவுடன் அமீர் தன் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதுதான் மரபு. நபி அவர்கள் காலத்திலும் சரி, பிற்கால கலீபாக்களின் காலமாயினும் சரி இந்த மரபு தான் பேணப்பட்டது. பேணப்பட்டு வருகிறது. தப்லீக்கின் ஒழுங்கமைப்பில் தற்போது ஐந்துபேர் அமீர்களாக செயற்பட்டு வருகின்றனர். ஏன் விட்டுக்கொடுத்து ஒருவரை தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யக்கூடாது. அத்துடன் 'அமீர்பதவி' யில் இருப்பவர்களில் உலமாக்கள், புத்திஜீவிகள் எவரும் நியமனம் பெறவில்லை என்பதும் இங்கு நோக்கற்பாலது. தகுதி வாய்ந்த உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து சிலமோட்டுக்குடி, வியாபாரிகளே, அமீர்களாக நியமிக்கப்பட்டு, அம்மரபைத்தான் காலங்காலமாகப் பேணியும் வருகின்றனர். இஸ்லாமியப் பிரச்சார இயக்கமொன்றிற்கு தலைமை தாங்கும் ஒருவருக்கு ஷரிஆவின் நுனுக்கமான சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். குர்ஆனுடனும், நபிமொழியுடனும் ஆழமான பரிச்சயம் வேண்டும். கடந்த கால, நிகழ்கால பிக்ஹ் சட்டவாக்கம் வரலாற்று நிகழ்வுகள் தேசிய சர்வதேச, நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் பேராற்றல் இவை எல்லாம் ஒருங்கே பெற்ற 'தக்வா' உள்ள ஒருவர் தான் தலைமைக்கு தகுதியானவர் இவ்வனைத்து தகுதியினையும் இழந்த 'லேபல், அமீர்கள் தான் தப்லீக்கை தற்போது இழுத்துச் செல்கின்றனர். குறைந்த பட்சம் மஹல்லாக்களில் அமீராக இருப்பவர், நான்கு மாதம், அல்லது ஒரு 'சில்லா' (40 நாள்) முடித்தவராக இருக்க வேண்டுமென தப்லீக்கின் உயர்மட்டம் எதிர் பார்க்கின்றது. இதனால் அதிருப்தியுற்ற உலமாக்கள் தப்லீக்கை விட்டும் நழுவி, அதை விமர்சிக்கக்கூடியவர்களாக மனம் சோர்ந்துள்ளனர். அமீர் என்பவர் வெறுமனே இயக்கத்தை வழிநடத்தும் இழுவை மாடல்ல: அவரிடமிருந்து, சமூகத்திற்கு பல அரிய பணிகளை இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. 'நவீன உலகுடன் ஒன்றி தஃவாவை செப்பனிடவியலா புராதன சிந்தனைப் போக்குடன் தான் தப்லீக்கின் அமீர் சாஹிப்புகள் இவ்வியக்கத்தை வழிநடத்திச் செல்கின்றனர். தஃலீத் தொகுப்புத் தவிர்ந்த பிற இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களைப் படிப்பதைக்கூட தடை விதிக்கும் சில பொறுப்பதிகாரிகள் இங்கு இல்லாமலில்லை. எனினும் ஆரம்ப கால தப்லீக் ஜமாஅத்தினரிடம் தீனை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. 1970 இல் இலங்கை வந்த பெங்களுர் இப்ராஹீம் மௌலானா அவர்கள் ஒரு ரமழானின் ஒவ்வொரு நாளும் சுபுஹுத் தொழுகையின் பின் வேகந்தபள்ளியில் குர்ஆன் விளக்கம் செய்தார்கள். 1962 இல் மக்h சென்ற ஸஈத்கான் மௌலானா மக்கா ஹரம் சரீபில் பிரதி அஸர் தொழுகையின் பின் குர்ஆன் வியாக்கினம் செய்துவந்தார்கள். ஆனால் இன்றைய தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு குர்ஆன் விளக்கவுரை ஹதீஸ் தெளிவுரை வகுப்புக்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கின்றது, என்பதுடன் அவ்வாறு செய்பவர்களும் கடுமையாக தாக்கப்படுகின்ற அவலத்தையும் நாம் இலங்கையில் நிதர்சனமாகக் காண்கின்றோம் சகோதர இயக்கமொன்றின் எத்தகைய சொற்பொழிவுகளையும் செவிமடுக்கக் கூடாதென்ற இறுக்கமான விதிகளும் சில தாயிகளிடம் வேரூன்றியுள்ளது. இவற்றின் மூலம் இஸ்லாத்தை சரிவரப்பின்பற்ற முனையும் ஒருவனிடம் ஆர்வத்தை முடக்குவதுடன், மீறிப்போவோர்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தப்லீக் தன்னிடமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நிரூபித்து தனது தவறான செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முனைவதானது, கண்டிக்கப்பட வேண்டிய அம்சமாகும். குர்ஆன் கூட பெரும்பான்மையை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரை கண்டித்து எச்சரிக்கை விடுக்கின்றது. 2:243, 7:187, 11:17, 3:110, 5:103, 6:11 போன்ற இன்னும் அனேக வசனங்களிலும் இறை கோபம் தொனிப்பதை படித்துணரலாம். உண்மையில் இஸ்லாமிய பண்பாட்டினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் ஆத்மீக லௌகீக வரையறைகளையும், இன்னும் தப்லீக் ஜமாஅத் உணராதிருப்பது வேதனைக்குரியது. இஸ்லாம் குறித்த மேலெழுந்த சிந்தனைப் போக்கே இந்நெறி பிறழ்வுக்கு காரணமெனலாம். எனவே தப்லீக் புணரமைக்கப்படுவதற்கு முன், அதன் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஆரோக்கியமான தீர்மானத்திற்கு வரவேண்டும். தலை சிறந்த உலமாக்கள் இஸ்லாமிய தஃவாத்துறையில் அனுபவமும் பாண்டித்தியமும் பெற்ற புத்தி ஜீவிகள், மூலமாக இம்மாற்றம் நிகழவேண்டும். இன்னும் தெளிவாகக்கூறின், தூய்மையான தீன் செழிக்க தகுதி வாய்ந்த உலமாக்கள் கொண்ட 'மஸுராசபை'யே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். வழி தவறிச் செல்லும் தப்லீக் ஜமாஅத்தை நெறிப்படுத்த இது ஒன்றுதான் உகந்த வழியெனப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் 1952-53 காலப்பகுதியில் தப்லீக் அறிமுகமானதாக குறிப்புகள் உள்ளன. தாவூத் மௌலானா மேவாத்தி என்பவர் 1953இல் ஒருஜமாஅத்துடன் இலங்கைக்கு வந்தார். அதற்குமுன் 1952இன் இறுதிப்பகுதியில் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு அப்துல் மலிக் மவுலானாவும், குழுவினரும் கொம்பனித்தெரு வேகந்த பள்ளியில் தங்கியிருந்து தப்லீக்கை அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. இலங்கை தப்லீக் அமைப்பு 169 பிரதேசங்களாகவும், 12 கொத்தணிகளாகவும் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. இவ்வளவு பழமையும், திட்டமிட்ட ஒழுங்கும் உள்ள ஓர் இயக்கம், தன் இயக்கத்தை நம்பி, அதனை எதிர்கேள்வியின்றி, கண்மூடித்தனமாய் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான பாமர அப்பாவிகளை, ஏமாற்றிவருவது அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும். தப்லீக்கின் தலைமையும், அதன் தலையாட்டி உலமாக்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சத்தியத்துடன் அசத்தியத்தைக் கலந்து விற்கும் மட்டரக சரக்காக தப்லீக்கை சில மேட்டுக்குடி உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எதேச்சதிகாரப் போக்கையிட்டு மௌலானா அவர்கள் மனங்குமுறுவதை இவர்கள் கவனிக்க வேண்டும்.
இதே தொடரில் மௌலானா கூறுவதைக் கவனிக்க வேண்டும். குர்ஆன், ஹதீதின் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைக்கேற்ப விளங்கிக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் இன்ஷா அல்லாஹ் ஒருபோதும் தவறான விளக்கம் ஏற்பட்டுவிடாது. பக்கம்: 105 இன்று தவறான விளக்கங்களாலேயே தப்லீக் பரிணாமம் பெற்று வளர்கிறது. இல்யாஸ் ரஹ் அவர்கள் தோற்றுவித்த தூய்மையான தப்லீக்பணி சந்தர்ப்பவாதிகளின் கைபட்டு அதன் பெறுமானத்தை இழந்து நிற்கின்றது. சுயநலமிகளும் வன்முறையாளர்களும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுமாக அதன் சடங்கு ரீதியான வடிவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. இங்கு வலியுறுத்தவிரும்புவதெல்லாம் தப்லீக் பழமைக்குத்திரும்ப வேண்டும் என்பதே! பழமை என்பது மௌலானாவின் காலத்தில் எந்த உயிர்ப்பு நிலையில் பிரகாசித்ததோ, அந்த இயல்பான நபிவழிக்குத்திரும்ப வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்க வேண்டும். தஃலீம் தொகுப்பை பரிசீலித்து தூய்மையான நபிமொழிகளும் உணர்வுட்டும் ஸஹாபாக்களின் கலப்பற்ற வரலாறும் இணைக்கப்பட வேண்டும். பிற அறிஞர்களின் நூற்களை படிப்பதுடன் அது பற்றிய விவாதம் கருத்துப் பரிமாற்றம் என்பனவும் நிகழவேண்டும். தஃலீம் தொகுப்புக்கு குர்ஆனிய அந்தஸ்த்து வழங்கப்படுவதை விடுத்து, அதன் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதில் தவறுகள் உள்ளதாக தப்லீக்கின் முக்கிய உலமாவான ரிஸ்விமுப்தியே ஏற்றுக் கொண்டுள்ளதை, ஜமாஅத்தினர் கவனிக்க வேண்டும். வான்சுடர் ஆகஸ்ட்-செப்டம்பர் 97 பக்கம் 21 சிலசந்தர்ப்பங்களில் தன் தவறினை நியாயப்படுத்த இதே ரிஸ்விமுப்தி போன்ற உலமாக்கள் தஃலீம் தொகுப்பை ஆறு ஹதீஸ் கிரந்தங்களுக்குச் சமனாகத் தூக்கிப்பிடித்து வாதாட முற்படுவதையும் பார்க்கிறோம். தீனின் பாதுகாப்பை விட தனது சுயநலத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்க, எத்தகைய இழிசெயலையும் அவர்கள் செய்யப் பின் நிற்பதில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. 1960 இல் இலங்கை வந்த அல்லாமா அபுல்ஹஸன் அலிநத்வி அவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலில் (அதுதான் அன்றைய மர்கஸ்) ஜுமைராத்தில் பேசும் போது 'ஏ தப்லீக்காரரே! ஆறு நம்பருக்கு அப்பால் உள்ள விசயங்களையும் படியுங்கள்' என்றார்கள். இந்த அறிவுரையை அமுல் படுத்த தப்லீக்கின் உறுப்பினர்கள் தயாரில்லை என்பதுடன் ஆறு நம்பர் என்ற பங்கருக்குள் விழுந்து, மூர்ச்சையுறும் 'லேபல் தீன் தவளைகளாகவே இறுதிவரை இருப்போம் என பிடிவாதமாகவும் இருக்கின்றனர். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை இரவு தோறும் பிரதேச ரீதியான 'ஜுமேராத்' இரவுகளில் அங்கு குழுமியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எத்தகைய செய்தி சொல்லப்படுகின்றது என்பதையும் நோக்குவது சிறந்தது. உண்மையில் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கப்சாக்களும் கீறல் விழுந்த ஒலிப்பேழையாய் தூசிதட்டிய ஆதிகாலப் புராணங்களுமே, அங்கு மீட்டப்படுகின்றது. (சில உலமாக்களின் சொற்பொழிவு தவிர) அந்த இரவுகளில் வந்து கூடும் சமூகத்திற்கு தப்லீக் புதிதாக எத்தகைய அறிவையும் தேடலையும் கொடுப்பதில்லை என்பதுடன் அத்தகைய ஒன்று கூடலில் தான் சகோதர இயக்கங்களுக்கெதிராக சதியாலோசனைகளும் சிலரால் தீட்டப்படுகின்றது. சுன்னத் என்றவுடன் குறிப்பிட்ட நடை, உடை, பழக்கவழக்கங்கள்தான் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். முக்கியமாக இலங்கையில் செயற்படும் பிற தஃவா இயக்கங்களுடன் இறுக்கமான உறவினையும் தொடர்பினையும் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். தப்லீக்கை சர்வதேச பயங்கரவாதிகள் என 'ஜனஉய' சிங்களப்பத்திரிகை தாக்குதல் நடத்திய போது அவற்றுக்கெதிராக போர்க்குரல் எழுப்பியது சகோதர இயக்கங்கள்தான் என்பதை தப்லீக் மறந்திருக்காது. அடிக்கடி சகல உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து சகோதர இஸ்லாமிய தஃவா இயக்கங்களின் நிகழ்வுகளில் பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் மௌலானாவின் வேணவாபோல் அன்பையும் ஆதரவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தப்லீக் இயக்கத்தின் சமூகமயப்படுத்தலையும், பாமர அங்கீகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் தப்லீக் வேடதாரிகளை அதன் இயக்க நடவடிக்கையிலிருந்து முற்றாக இடைநிறுத்துவதன் மூலம் தப்லீக் அதன் பெயரை தக்க வைத்துக் கொள்ள முனைய வேண்டும். சமூகப்பணிகள் கல்வி நடவடிக்கைகள் போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார விழுமியங்களை பேணும் கலை நிகழ்வுகளிலும் தப்லீக் தன்பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டும். தப்லீக் தான் இட்டுக் கொண்ட விலங்கினை உடைத்து புதிய உலகுடன் ஐக்கியமாகி மறுமலர்ச்சிகொண்ட முற்போக்கு இயக்கமாக மாற்றிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். ஷிர்க்கும் பித்அத்தும் மலிந்திருக்கும் மௌட்டீக சமுகத்தை தூய்மையான இஸ்லாமியப் பிரசாரத்தின் மூலம் ஆற்றுப்படுத்த வேண்டிய கடப்பாடும் அதற்குண்டு. அதன் தலைமைத்துவம் சுயநலன் கருதியும் இயக்கவாதம் பேசியும் இத்தகைய மறுமலர்ச்சிக்கு தடையாக உள்ளது குறைந்தபட்சம் சமூகப்புனரமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர இயக்கங்களை எதிர்காமல் இருக்க முடியாதா? நடமாடும் பல்கலைக்கழகங்கள் என மார்தட்டிக் கொள்ளும் தப்லீக் ஒரு நாற்பது நாளில் பயிற்றுவித்த ஆன்மீகப் பயிற்சியினை ஆராயும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெறும் திக்ர், தொழுகை, தியானம் மட்டுமா இபாதத்? இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காதியாணி, ஷீயா, வஹ்ஜதுல்வுஜுத், கபுறு வணக்கம் முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சி, அரசியல் சுரண்டல்கள், சமூக நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய எத்துறையாயினும் அவற்றை தப்லீக் அலட்சியப்படுத்தியே வருகின்றது. தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் கலைபற்றிய கருத்தரங்குகள், பயிற்சிகள் சமூகத் தொண்டு எதிலும் பட்டுக்கொள்ளாமல் இதுவெல்லாம் இஸ்லாத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்ட அனுஷ்டானங்கள் என்ற தவறான கணிப்பீடு அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும். இன்னும் சில சிந்தனைகளை முன்வைத்து இச்சிறுநூலை முடிக்கலாம் எனக் கருதுகின்றேன். நமது தவறு யாதெனில் மார்க்கத்தை இயக்க ரீதியாக கூறுபோட்டுக் கொண்டதாகும். குறிப்பிட்ட இயக்கம் ஒரு குறிப்பிட்ட துறையில்தான் தஃவாச் செய்ய வேண்டுமென்ற விதியினை மீறி முழுமையாக இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திடசங்கற்பம் நமக்கேற்பட வேண்டும். சன்மார்க்கம் என்பது தனிமனிதனினதும் அவன் சார்ந்த சமூகத்தினதும் தியாக சிந்தனையிலிருந்து தான் விரிவடைகிறது. வலியுறுத்த விரும்புவது, தப்லீக்கின் தியாகம் அர்ப்பணிப்பு போன்றவற்றுடன் ஒன்றுபட்டு, பிற இயக்கங்களும் சாதாரண மக்களுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். பள்ளியைத் தளமாக கொண்டியங்க தப்லீக் அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். எனவே தப்லீக் பிற சகோதர இயக்கத்தை அகீதாவில் ஒருங்கிணைந்த ஒரே 'தஃவா வர்க்கம்' என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிற்றில் சிந்தனை மாற்றங்கள் கருத்து வேறுபாடுகள் ஒரு சக முஸ்லிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குரிய நியாயமான காரணங்களாகா. கலிமாவின் கொடியின் கீழ் திரண்டிருக்கும் இம்மாபெரும் உம்மத்தை நமது குறைமதியின் தவறன கணிப்பீட்டினால் தள்ளிவைத்தல் மிகப்பெரிய பாவமாகும். கொள்கையினாலும் இலட்சியத்தினாலும் ஒன்றுபட்ட சகோதர இயக்கமொன்றின் உள்ளார்ந்த செயற்பாடுகளை தப்லீக் ஜமாஅத் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமெனக் கருதுகின்றேன். மறுமைக்கான நீண்ட பயணத்தில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றைக் குறிக்கோளாக கொண்ட தஃவா இயக்கங்களின் அகவய செயற்பாடுகளை தப்லீக் நிராகரிக்கவோ வன்முறையின் மூலம் அவற்றின் பணிகளை அடக்கி ஒடுக்கவோ அதற்கு எத்தகைய தார்மீகக் கடமையும் கிடையாது. தீமையாயினும் அதைத்தடுக்கும் அணுகுமுறைகள் குறித்து நபியவர்கள் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும். பிற இயக்கத்தினரைவிட தன்னை சகல முனைவுகளிலும் மிகப் பெரிய மகானாக ஒருவன் கற்பணித்துக் கொள்வதன் வெளிப்பாடுதான் இயக்க அராஜரகமாகும். எனவே, தப்லீக்கின் புத்தி ஜீவிகள், அறிஞர்கள், உலமாக்கள் சகல தரப்பினரையும் தாழ்மையுடன் வேண்டுவது என்னவெனில் "நடுநிலையாக சிந்தியுங்கள்". விமர்சனங்கள் ஆலோசனைகளை அங்கீகரித்து இயக்கத்தை நெறிப்படுத்துங்கள். அது ஒன்றுதான் தப்லீக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். குறுகியவாத சிந்தனைப் போக்கிலிருந்து நெகிழ்ந்து தஃவாப் பணியை பன்முக சிந்தனைத் தெளிவுடன் முன்னெடுத்துச் செல்ல தப்லீக் நீண்ட காலம் உழைக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் வெள்ளிடை மலை. முஸ்லிம்கள் யாவரும் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத் சமூகமாக வாழவேண்டும என்பதே அல்லாஹ் மற்றும் அவனது தூதர் அவர்களின் கட்டளையாகும். முஸ்லிம்கள் பிளவுபட்டு வேற்றுமையைக் கற்பித்துக் கொள்வதை அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள். நல்ல விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்பதிலும் நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துழையுங்கள். பாவமான காரியங்களிலும், சண்டை சச்சகரவுகளிலும் நீங்கள் ஒருவர் மற்றவருடன் ஒத்துழைக்க வேண்டாம் (அல்குர்ஆன் 5:2) அன்பு, பற்று, பாசம் என்பதில்தான் முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். உடலின் ஏதாவது ஓர் உறுப்புக்கு நோய் ஏற்பட்டால் அதன் எல்லா உறுப்புக்களுமே உறக்கமின்றியும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டும் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கின்றன. (அல் ஹதீஸ்) ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி அதன் மற்றப் பகுதிகளை தாங்கிக் கொள்வதுபோல் ஒரு மூஃமின் மற்ற முஸ்லிமுக்கு பக்கபலமாக இருப்பான் என்று கூறிய நபி ஸல் அவர்கள் தங்கள் விரல்களை இறுக்கமாக கோர்த்துக் காட்டினார்கள். மேலே கண்ட நபிமொழிகள் உணர்த்துவது போல புரிந்துணர்வு சகோதரத்துவம், கட்டுப்பாடான அமைப்பு என்பன முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது அவசியமாகும். இவ்விதமான சூழலை ஏற்படுத்த முயற்சிப்பதே இஸ்லாமிய இயக்கங்கள் அமைப்புக்கள் என்பவற்றின் தலையாய கடமையாகும். ஏனெனில் முஸ்லிம் சமூக அமைப்பும் அதுநிலைப்பதற்கு துணைபுரியும் சூழலும் இல்லாதவிடத்து இஸ்லாமிய ஷரிஅத் சட்டங்களை பின்பற்றி முழு அளவில் வாழ்வது சாத்தியமற்றது. நீங்கள் தீனை இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் பூரணமாக நிலை நாட்டுங்கள் அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்று இஸ்லாமிய சகோதரத்துவம் ஐக்கியம் என்பன பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் "இவையன்றி இஸ்லாத்தை பூரணமாக பின்பற்ற முடியாது" என்பதை உணர்த்துவதாகும். எனவே, சமூக ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றில் தப்லீக் கரிசனை கொள்ள வேண்டும். மிகப் பயங்கர வீழ்ச்சியையும், தோல்வியையும் எதிர்கொண்டு நீச்சலடிக்கும் தப்லீக் ஜமாஅத் திறந்த மனதுடன், சமூக ஒற்றுமையை பேணிக் கொள்ள வேண்டும். இன்றைய நிலைப்பாட்டிலிருந்து தப்லீக் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இதே பிற்போக்குத்தனத்தில் செல்லுமாயின் தப்லீக் என்ற பெயரைத் தவிர வேறொன்றும் வரலாற்றில் எஞ்சி நிற்காது என்ற எச்சரிக்கையை அது கவனத்திற் கொள்ளட்டும். பல நூற்றுக்கணக்கான மக்களின் ஆன்மீக வறுமைக்கு தப்லீக்கின் உலமாக்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். ஆதலால் நீங்கள் உங்களுக்கு இட்டுக் கொண்ட விலங்குகளை உடைத்தெறியுங்கள். இயக்கத்திலிருந்து சன்மார்க்கத்தை எடைபோடுவது இருக்கட்டும். தப்லீக்கின் கட்டுப்பாடுகளை தகர்த்தி சற்று உலகை விழித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களால் பரந்த இஸ்லாமிய ஞானத்தை பருக முடியும். இது ஒன்றுதான் மௌலானா இல்யாஸ் (ரஹ்) அவர்களுக்கு தப்லீக் செலுத்தும் மகத்தான நன்றிக் கடனாகவும் இருக்கும். இறுதியாக ஒரு சிந்தனையுடன் இந்நூல் முற்றுப் பெறுகிறது. உம்மத்தவரிடையே நியாயமான காரணங்களுக்காகவேனும் எழும் கருத்து வேறுபாடுகளை விசாலமாக்க ஒருபோதும் ஒருவரும் முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் இவ்வாறு ஏற்படும் ஒரே குடும்ப உறுப்பினர்களிடையே சிற்சில காரணங்களுக்காக அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாட்டைப் போன்றதாகும். எனவே ஊர்மட்டத்திலும், மஸ்ஜிதுகளிலும், ஏனைய இடங்களிலும் ஏன் வெளிநாடுகளிலும் கூட இவ்வித பிளவுகளை வளர்க்க முயற்சிப்பது மிகவும் பெரிய கொடுமையாகும். முஸ்லிம்களாகிய எங்களுக்கிடையில் இவ்வாறு நிகழ்வது இஸ்லாத்தின் போதனைகளை விளங்கி அது தரும் பயிற்சிகளால் பயனடையாதவர்களும் எம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது. இஸ்லாமாகிய சகோதரத்துவத்தின் இயல்புகள் ஒருவர் தனது சகோதரரான அடுத்த முஸ்லிமைப் பற்றி நல்லெண்ணம் உடையவராய் இருப்பது. இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஆகக்குறைந்த தரமாகும். முஸ்லிம்கள் அனைவருமே ஒரே உடலைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் நலன் காக்கப் பாடுபடவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை இனங்கண்டு அவர்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்பன போன்ற இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களும் எங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்பதையே இப்பிரிவுகள் உணர்த்துகின்றன. - ஷெய்க். நாதிர் அந்நூரி -
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (23)
![]()
nalla muyarchi.parattukkal.puthaga vadivil irundhal kidakkumidathai theriappaduthavum.please....
1
July 17, 2006 06:54
இந் - நூலை, ஏற்கனவே படிக்க கிடைத்தபோது - மின்னணு வடிவத்தில் இருந்தால், நண்பர்களுக்கு அனுப்ப நலமாக இருக்குமே என யோசித்தேன். அல்லாஹ் சத்தியமார்க்கம் மூலம் என் எதிர்பார்ப்பை நிறைவு செய்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்,
எல்லோரும் படித்துப் பயனடையவேண்டிய ஒரு அருமையான நூலை எழுதிய ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் - அவர்களுக்கும், அதனைக் கணனியாக்கம் செய்த சகோதரி : பாத்திமா ருக்ஷானா அவர்களுக்கும், சத்தியமார்க்கம் நிர்வாகத்தினருக்கும் - அல்லாஹ் அருள்புரியட்டுமாக..
உங்கள் பணி தொடர - எனது விஷேட வாழ்த்துக்கள்..
மானா
13.08.2006
2
August 13, 2006 04:17
assalamu alaikum
anpu sahoyharar arafath avarhal thapleek patri eluthiya intha intha siru urai nadu nilaiyahave ullathu yar manthaiyum punpatuththakootiyathaha illai unmaiyai unarththa punpata vaithtalum paravaillai enra kootrukum marupattu nanrahave eluthi ullar sahotharar arafathitam irunthu ithu fonra innum nalla karuththukalai natuhinren
nasar
rpc road
meera lane
oddamavadi
3
September 28, 2006 20:23
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
தப்லீக் சேவை, இன்று முஸ்லீம்களுக்கு கிடைத்த ஒருமாபெரும் பொக்கிஷமே ஆகும். அல்லாஹ்வின் உதவிகொண்டு எத்தனையோ கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அல்லாஹ்வின் கட்டளைப்படியும், அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்க்கைமுறைப்படியும் செயலாற்றுவதற்கு இந்த அமைப்பு இன்று உலகலவில் முஸ்லீம்களுக்கு மத்தியில் முக்கிய பங்கு ஆற்றிவருகிறது என்றால் மிகையாகாது.
மனிதர்கள் குறையுடையவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். தப்லீக் ஜமாத்தில் செல்பவர்களில் சிலகுறை இருக்கலாம். அவர்களும் முற்றிலுமாக தீனின்படி நடப்பதற்காகத்தான் இந்தவேலை. குறைகூறுவதைவிட்டுவிட்டு பல இயக்கங்களில் உள்ளவர்களும் இணைந்து இந்த வேலையைச் செய்வீர்களாயின் நாம் விரும்பும் இஸ்லாமியர்கள் தீன்வழி நடந்திட வேண்டும் என்ற நோக்கம் விரைவில் இன்ஷாஅல்லாஹ் நிறைவேறும். அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்
4
October 22, 2006 22:09
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தப்லீக் ஜமாத்தின் முக்கிய உழைப்பு, மனிதன் மனிதாக அல்லாஹ்வுடைய கட்டளை நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வாழ்க்கைவழிமுறைக்கு உட்படுத்தி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டும் வாழவேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற உழைப்பாகும். மனிதனை ஆர்வப்படுத்தவதற்காகத்தான் அமல்களின் சிறப்புகளை அறிந்து அந்த அமல்களை பூரணமாக செய்வதற்கு முக்கிய பங்களிப்பதே அமல்களின் சிறப்புகள் என்ற தொகுப்பாகும். இன்று இயக்கங்களில் உள்ளவர்கள் திருக்குர்ஆனையின் மொழிபெயர்ப்புகளில் குழப்பங்கள் செய்வது உங்களுக்குத் தவறாகப்தெரியவில்லையா???
அமல்களின் சிறப்புகளிலுள்ள பெரியார்களின் சம்பவங்கள் வரலாற்று சம்பவங்களாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோல் சிறப்புகளைக் கூறும் விசயத்தில் பலவீனமான ஹதீஸ்களை அவர்களை விளக்கியும் எழுதியுள்ளார்கள்.
குறையுடைய பார்வையை வைத்துப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் குறையாகத்தான் தெரியும். அமல்கள் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் பார்த்தால் அமல்செய்ய ஆர்வம் பிறக்கும். அல்லாஹ் நமக்கு உதவிசெய்வானாக. ஆமீன்.
5
October 26, 2006 08:27
ASSALAMU ALAIKKUM W.R.B.
1. ' தனிநபர் பூசையும் கண்மூடித்தனமான பின்பற்றதலும் இஸ்லாத்தின் தௌஹீத் கொள்கைக்கே வேட்டுவைக்ககூடிய அம்சங்களாகும்.'
' குர்ஆன் கூட பெரும்பான்மையை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரை கண்டித்து எச்சரிக்கை விடுக்கின்றது. 2:243, 7:187, 11:17, 3:110, 5:103, 6:11 போன்ற இன்னும் அனேக வசனங்களிலும் இறை கோபம் தொனிப்பதை படித்துணரலாம்.'
' உண்மையில் இஸ்லாமிய பண்பாட்டினையும், அதன் கலாச்சார விழுமியங்களையும் ஆத்மீக லௌகீக வரையறைகளையும், இன்னும் தப்லீக் ஜமாஅத் உணராதிருப்பது வேதனைக்குரியது. '
' பழமையும், திட்டமிட்ட ஒழுங்கும் உள்ள ஓர் இயக்கம், தன் இயக்கத்தை நம்பி, அதனை எதிர்கேள்வியின்றி, கண்மூடித்தனமாய் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான பாமர அப்பாவிகளை, ஏமாற்றிவருவது அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும். '
' மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி சத்தியத்துடன் அசத்தியத்தைக் கலந்து விற்கும் மட்டரக சரக்காக தப்லீக்கை சில மேட்டுக்குடி உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.'
'தஃலீத் தொகுப்புத் தவிர்ந்த பிற இஸ்லாமிய அறிஞர்களின் நூற்களைப் படிப்பதைக்கூட தடை விதிக்கும் சில பொறுப்பதிகாரிகள் இங்கு இல்லாமலில்லை.'
'தஃலீம் தொகுப்பை பரிசீலித்து தூய்மையான நபிமொழிகளும் உணர்வுட்டும் ஸஹாபாக்களின் கலப்பற்ற வரலாறும் இணைக்கப்பட வேண்டும் '
' மார்க்கத்தை பிரச்சாரப்படுத்த பொய்யும், புரட்டும் கற்பனைக் கதைகளும் தேவையில்லை. எண்ணிலடங்கா தூய்மையான வரலாறும், நபிமொழிகளும் நம் வசமுண்டு. நபிகளார் கூறுவதை பாருங்கள்.'
'உங்களை நான் மிக வெண்மையான வழியில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்று வெளிச்சம் நிறைந்தது. எனக்குப் பின் நான் விட்டுச் சென்ற அந்த வழியை விட்டும் வழி தவறுகிறவன் தான் நாசமாகக் கூடியவன் என்கிறார்கள்.'இர்பான் இப்னுஸாரியா, இப்னுமாஜா.
மேலும் நபி(ஸல்) அவர்கள், 'நான் சொல்லாததைச் சொன்னதாக எவன் சொல்லுகிறானோ அவன் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.' என்று நவின்றுள்ளார்கள்(முஸ்லிம்)
''நபியவர்கள் சொன்னார்கள், இது ஸஹீஹானரிவாயத்', என்று அப்பட்டமான போலி ஹதீதுகளையும், 'மௌலுஆன', நபிமொழிகளையும் மிக அழுத்திப் பிரசங்கம் செய்து வரும், தப்லீக் ஜமாத் நபிகளாரின் இன்னொரு எச்சரிக்கையையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.'
மூன்று விடயங்களை அல்லாஹ் உங்களுக்கு வெறுக்கிறான். அவை:
1. (இன்னார்) சொன்னார், (இப்படி) சொல்லப்பட்டது, என்று சொல்வதையும்,
2. பணத்தை வீணாக அழிப்பதையும்,
3. அதிகமாகக் கேள்வி கேட்பதையும், என நபியவர்கள் கூறுகிறார்கள்.
புஹாரி, முஸ்லிம்
'இதில் வெறுக்கப்பட்ட, முதலாவது விடயம் தப்லீக் ஜமாஅத்தினரால் போற்றப்படும் பண்பெனக் கொள்ளலாம் '
' தஃலீம் தொகுப்புக்கு குர்ஆனிய அந்தஸ்த்து வழங்கப்படுவதை விடுத்து, அதன் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதில் தவறுகள் உள்ளதாக தப்லீக்கின் முக்கிய உலமாவான ரிஸ்விமுப்தியே ஏற்றுக் கொண்டுள்ளதை, ஜமாஅத்தினர் கவனிக்க வேண்டும்.'
'சிலசந்தர்ப்பங்களில் தன் தவறினை நியாயப்படுத்த இதே ரிஸ்விமுப்தி போன்ற உலமாக்கள் தஃலீம் தொகுப்பை ஆறு ஹதீஸ் கிரந்தங்களுக்குச் சமனாகத் தூக்கிப்பிடித்து வாதாட முற்படுவதையும் பார்க்கிறோம். தீனின் பாதுகாப்பை விட தனது சுயநலத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்க, எத்தகைய இழிசெயலையும் அவர்கள் செய்யப் பின் நிற்பதில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.'
' தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் கலைபற்றிய கருத்தரங்குகள், பயிற்சிகள் சமூகத் தொண்டு எதிலும் பட்டுக்கொள்ளாமல் இதுவெல்லாம் இஸ்லாத்தின் கொள்கைக்கு அப்பாற்பட்ட அனுஷ்டானங்கள் என்ற தவறான கணிப்பீடு அனுமதிக்க முடியாத வரலாற்றுத் துரோகமாகும்.'
' நீங்கள் உங்களுக்கு இட்டுக் கொண்ட விலங்குகளை உடைத்தெறியுங்கள். இயக்கத்திலிருந்து சன்மார்க்கத்தை எடைபோடுவது இருக்கட்டும். தப்லீக்கின் கட்டுப்பாடுகளை தகர்த்தி சற்று உலகை விழித்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களால் பரந்த இஸ்லாமிய ஞானத்தை பருக முடியும் '
' பல நூற்றுக்கணக்கான மக்களின் ஆன்மீக வறுமைக்கு தப்லீக்கின் உலமாக்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.'
தப்லீக் அன்றும் இன்றும்
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=67#josc293
2. .TEACHING OF SHIRK IN THE BOOK - (TABLEEGH JAMAAT) FADAHAAIL AMAL
http://www.fatwa-online.com/deviantgroups/jamaaahattableegh/
3.. அமல்களின் சிறப்புகள் என்று அவர்கள் போதிக்கும் - படித்துக்காட்டும் - சம்பவங்களாவது இஸ்லாத்திற்கு உட்பட்டவைகளாக இருக்கிறதா..?
http://www.tamilmuslim.com/Vimarsanam/Vimarsanam1.htm
--------------------------------
PROPER EXPLANATION IS MUCH APPRECIATED IN THE ABOVE MENTIONED.AREAS FROM THE GIVEN SITES.
IT WILL MUCH BETTER AND WISE TO READ தப்லீக் அன்றும் இன்றும் MANY TIMES AND ALL THE SITES MENTIIONED BY ME .
WASSALAM.
6
October 26, 2006 10:26
அஸ்ஸலாமு அலைக்கும்
உம்முடைய கருத்தை ஏற்றுக் கொள்கிறோம்
ஆனால் தப்லீக் ஜமாஅத்துடைய விஷயத்தில் இப்படிப்பட்ட காரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. காரணம் இது போன்ற சேவை இருந்தால் முன் உதாரணம் காட்டவும். பதில் தேவைப்பட்டால் சொல்ல தயார்
email id:
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
7
December 04, 2007 01:36
ஜின்னா அவர்கள் சரியாகச்சொன்னார்கள்.ஹம்தூன் அவர்களிடம் ஓர் கேள்வி.தொழுகையாளிகளையே போய் தொழுகைக்கு வாருங்கள் என்று கூறுவதும்,அவர்களிடமே பள்ளியில் பயான் என்ற பெயரில் தொழுகையின் சிறப்பை பற்றியும்,வெற்றி எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றியும் பேசுவது எந்த வகையில் சரியாகும்?என்பதை விளக்க முடியுமா?இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு.பின்னால் கேட்கிறேன்.முதலில் இதற்கு பதில் தாருங்கள்.
8
December 04, 2007 15:34
சகோதரி பிந்த் ஹிதாயா,
உங்களின் கேள்வி சரியல்ல. தொழுகையாளிகளிடமே தொழுகையின் சிறப்பைக் குறித்துப் பேசுவது சரியல்ல என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
நபித்துவத்தின் அடிப்படையே நினைவுறுத்துதல் தான். ஒரு விஷயத்தைக் குறித்துத் திரும்பத் திரும்ப நினைவுறுத்திக் கொண்டிருப்பது, அவ்விஷயத்தின் மீதான பற்றுதலையும், நெருக்கத்தையும் இன்னும் அதிகரிக்க உதவுமே. இதனைத் தவறு என்றாக் கூற வருகிறீர்கள்?.
தொழுகை விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அதற்கான நேரத்தில் ஜமாஅத்துடன் தொழுவதில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்திலும் ரொம்பவே சிரத்தை எடுத்து செய்வதில் தப்லீக் சகோதரர்களைப் போன்று வேறு எந்த ஜமாஅத்திலும் நான் சகோதரர்களைக் காணவில்லை. இதற்கு என்னக் காரணம் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
- ஹாஜியார்.
9
December 05, 2007 08:51
'தப்லீக்' சேவையின் நன்மைகள்; சீர்திருத்தங்கள் பற்றி யாரும் மறக்கவும் இல்லை- மறுக்கவும் இல்லை. ஆனல், தற்பொழுது 'பயான்களில்' த அலீம்' களில் துறவறம் தூண்டப்படுகின்றது. அதற்கு காரணம்: 'பக்குவமற்றவர்கள்' 'உலகப் பொது அறிவுப் பற்றாக்குறையுள்ளவர்கள்' ஆகியோரின் பயான்களின் பின்விளைவுகளே. இவற்றை களைய வேண்டும் என்பதாலே அபூஅப்துல்லாஹ், 'பீஜே' போன்றோரெல்லாம் அமீர்களாக இருந்து இருந்தும் அதிலிருந்து விலகி அங்கு காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டத் தலைப்பட்டனர். இங்கு வெளியாகியுள்ள 'தப்லீக் அன்றும் இன்றும்'கட்டுரை ஆசிரியரும் ஓர் இமாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களைத் தாங்கும் 'பக்குவம்' இல்லாதவர்கள் 'தப்லீக்' இயக்கத்தில் நிறைய பேர் உளர் என்பதும் நான் கண்ட உண்மை. அதனால் தான் ஹதீஸ்களின் ஆதாரங்களைக் கூறுவதையோ கேட்பதையோ மறுக்கின்றனர். படிப்பைத் துறந்த மாணவர்கள்; வணிகத்தை மறந்த வியாபாரிகள்; மனைவி மக்களை மறந்து விட்ட குடும்பத் தலைவர்கள்- இப்ப்டியாக 'மூளைச் சலவைக்கு'ப் பலியாக்கப்பட்டு பின்னர் உண்மையான 'தீன்' எது வென்று உணர்ந்து அவர்களே அனுபவத்தால் திருந்தி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாகவும்; அதிகம் செல்வம் ஈட்டி தான தர்மம் செய்யும் வியாபாரிகளாகவும்; மனைவிக்கு உரிய மகத்தான சுகத்தைத் தரும் கணவாணகவும்- மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தகப்பனாகவும் வாழ்த் துவங்கிவிட்டனர் என்பதும் ஊர் தோறும் நாம் காணும் உண்மைச் சம்பவங்கள்.
10
December 09, 2007 04:22
அன்பு நண்பர் தாஹ்லன்...
இக்கட்டுரையில் எவ்விடத்தில் அப்பட்டமான பொய் உள்ளது என்பதையும், எங்கே ஒரு சார்பாக எழுதப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினால் தெரிந்து கொள்வேன்.
நன்றி!
12
February 09, 2008 13:28
அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புச் சகோதரர்களே!
நீங்கள் தப்லீக்கை தவறாக விமர்சனம் செய்கின்றீர்கள்.நானும் ஒரு காலத்தில் ஓடி ஒளிந்தவந்தான்.எப்பேற்ப்பட்ட ரவுடியும் ஜமாத் வருகிறது என்றால் ஓடி மறைந்து விடுவான். காரணம்! பயம்! இந்த பயம் எதனால்? யாரால்?. சைத்தானுக்கு ஏற்படும் திடுக்கம் போல்தான் .நிச்சயமாக தொழுபவர்கள் ஜமாத்தை கண்டு அஞ்சி ஓடிவிடமாட்டார்கள்.
இங்கே இருக்கும் ஆலீம்கள் எல்லாம் துனியாவுக்காக மட்டுமே பாடம் நடத்துகிறர்கள். எத்தனை ஆலீம்கள் இலவசமாக தன் சொந்த பணத்தைகொண்டு செலவு செய்து தீண் பணி ஆற்ற முன்வருகிறர்கள்???.
இன்று வரை எத்த்னை பேருக்கு சரியான உச்சரிப்புடன் ஓதத் தெரியும். காலம் கடந்தும்,வயதாகியும்,வெக்கப்பட்டுக்கொண்டும் எத்த்னை இருக்கிறர்கள்.அவர்களை எப்படி அழைத்து வருவது,யார் அழைத்து வருவது? யார் போதிப்பது? சும்மா கம்புயூட்டரில் மட்டும் எழுதி கிழித்துவிட்டால் போதுமா? உலக வாழ்க்கையில் பூண்டு கிடக்கும் மக்களை ,பாமர மக்களை அல்லாவுக்காக மட்டும் சந்திக்க நீங்கள் தயாரா? பொன்னான நேரத்தையும் பொருளையும் அல்லாவுக்காக செலவு செய்ய நீங்கள் தயாரா?.சந்து பொந்து,காடு மேடு,கொசுக்கடி இப்படி எதுவும் பாராமல் அல்லாவுக்காக மக்களை சந்திக்க நீங்கள் தயாரா?. தீனைப்பற்றி அறிந்தவர்களும் மேடைதோரும் பேருக்காகவும் புகழுக்காகவும் சுயநலனுக்காக மட்டுமே பேசித்திரிவதால். இப்படி அறைகுறையாக தீனைக்கொண்டு அல்லாஹ் அவன் விரும்பும் பனியை செய்துகொண்டு இருக்கிறான், அல்ஹம்துலில்லாஹ்!!.
13
November 09, 2008 17:20
நூருல் ஹஸன் Solluvathu 100% correct.தப்லீக் allah-val arullapetra or unnatha pokisham.ithai konnu nervahzi pettravarkal athigam..
14
September 07, 2009 15:12
சகோதரர்களே! நபிகள் நாயகத்தை உலகுக்கு வரவைக்கும் தப்லீக் கிதாபின் கதையை பாருங்கள்:
''ஒருவர் தன்னுடைய காலைத் தூக்கும் போதும்,பூமியில் வைக்கும் போதும்"அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்."இவ்வாறு நீர் சலவாத்துக்கூறுவது எதனால்?"என்று நான் கேட்டதற்கு,ஒரு தடவை நான் என் தாயாருடன் ஹஜ்ஜுக்கு சென்றிருந்தேன்.என் தாயார் அங்கு இறந்து விட்டார்.அவரது முகம் கருத்து வயிறும் ஊதி விட்டது.இதனைப்பார்த்த எனக்கு இவர் ஏதேனும் கடினமான பாவம் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு,அல்லாஹ்விடம் துஆச்செய்வதற்காக கைகளை உயர்த்தினேன்.அப்போது திஹாமாவின்(அரபு நாட்டின்)திசையிலிருந்து ஒரு மேகம் வந்தது.அதிலிருந்து ஒரு மனிதர் வெளியாகி வந்து என் தாயாருடைய முகத்தை தன் கைகளால் தடவினார்.உடனே அது பிரகாசமாக ஆகிவிட்டது.பிறகு வயிற்றையும் தடவினார்.வயிற்று வீக்கமும் போய்விட்டது. நான் அவரிடம்"என்கவலையையும்,என் தாயாருடைய துன்பத்தையும் நீக்கி வைத்த தாங்கள் யார்?"என்று கேட்டபோது,"நான் தான் உன்னுடைய நபி,முஹம்மது(ஸல்)"என்று கூறினார்கள்."எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்"என்று நான் கூறியதற்கு,"நீ காலைத்தூக்கும் போதும்,வைக்கும் போதும் அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் என்று சலவாத்தைக்கூறி வருவாயாக"என்று உபதேசித்தார்கள்''என்று அவர் தன்னுடைய அனுபவத்தைச்சொன்னார். [பார்க்க தப்லீக் ஜமாஅத்தின் சலவாத்தின் சிறப்பு புத்தகத்தில் பக்கம்229,230] மேற்கண்ட கதையில் இஸ்லாத்தின் அடித்தளத்தை தகர்த்தெறியக்கூடிய சில விஷயங்கள் ஓசையில்லாமல் சொல்லப்பட்டிருப்பதை நாம் அறியலாம். முதல் விஷயம்: நபிகள் நாயகத்தை களங்கப்படுத்துகிறது இந்தக்கதை."நபி(ஸல்)உயிருடன் வாழ்ந்த காலத்தில் எந்த அந்நிய பெண்ணின் கையையும் தொட்டதில்லை"[புகாரி 60வது அத்தியாய விரிவுரை]ஆனால் மேற்கண்ட கதையிலோ,நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மேகங்களிலிருந்து தங்களது பூத(?)உடலுடன் வருகைத்தந்து அந்த அந்நிய பெண்ணின் முகத்தையும்,வயிற்றையும் தடவுகிறார்கள்.(நவூதுபில்லாஹி)தப்லீக் ஜமாஅத்தினரே!நபி(ஸல்)அவர்களை கலங்கப்படுத்திவிட்டு தப்லீக் செய்கிறீர்களா?மேற்கண்ட கதைக்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்? இரண்டாவது: காலைத்தூக்கும் போதும் வைக்கும் போதும் சலவாத் சொல்ல வேண்டும் என்று இக்கதை கூறுகிறது.அப்படியானல் நபியவர்கள் தங்களின் ஜீவித காலத்தில் இதை ஏன் கற்றுக்கொடுக்கவில்லை?மறந்து விட்டார்களா?அல்லது மறைத்துவிட்டார்களா?தன் தோழர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் இக்கதையில் வரும் யாரோ ஒருவருக்கு ஏன் கற்றுக்கொடுத்தார்கள்?நபித்தோழர்களை விட இவர் செயல் படுவார் என்பதற்காகவா?நபிகளார் அவர்கள் மேகங்களிலிருந்து வந்தார்கள் என்பதே பச்சைப்பொய். மூன்றாவது விஷயம்: இறந்தவர்கள் மீண்டும் உலகத்துக்கு வர முடியுமா?"அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது அவன் "என் இறைவனே!என்னை(உலகுக்கு)திருப்பி அனுப்புவாயாக.நான் விட்டு வந்ததில் நற்ச்செயலைச்செய்வதற்காக"என்று கூறுவான்.அவ்வாறில்லை நிச்சயமாக அதை(ப்பற்றி)அவன் கூறுகின்ற ஒரு(வெரும்)வார்த்தையாகும்.அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்களின் முன்னே ஒரு திரை இருக்கிறது.[23:99,100] என்னை நபி(ஸல்)அவர்கள் சந்தித்து,"ஜாபிரே!ஏன் கவலையுடன் இருக்கிறீர்?"என்று கேட்டார்கள்."அல்லாஹ்வின் தூதரே!என் தந்தை ஷஹீதாகி விட்டார்.சந்ததிகளையும் கடனையும் விட்டுச்சென்றுள்ளார்."எனக்கூறினேன்.அதற்கு நபி(ஸல்)அவர்கள்,"உனது தந்தை இறைவனை எந்த நிலையில் சந்தித்தார் என்பதை நான் கூறட்டுமா?"என்று கேட்டார்கள்."அல்லாஹ்வின் தூதரே!கூறுங்கள்"என்றேன்."அல்லாஹ் எவரிடமும் திரைக்கு அப்பாலிருந்தே பேசுகிறான்.ஆனால் உன் தந்தையிடம் நேருக்கு நேராக பேசினான்.நீ விரும்பியதைக்கேள் உனக்குத்தருகிறேன் என்றான் அதற்கு உன் தந்தை"இறைவா என்னை நீ உயிர்ப்பிக்க வேண்டும்.உனக்காக இன்னொரு முறை நான் கொல்லப்படவேண்டும்"எனக்கூறினார்.அதற்கு இறைவன்"இறந்தவர்கள் திரும்பச்செல்ல மாட்டார்கள் என்று என்னால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது"எனக்கூறினான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள் என்ற இறை வசனமும் இறங்கியது"என்று ஜாபிர்(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.[நூல்:திர்மிதீ]முஹம்மது(ஸல்)உட்பட இறந்தவர்கள் யாருமே மீண்டும் உயிருடன் திரும்ப முடிய்யாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றாகும்.புத்தகத்தின் ஆசிரியர் ஜெகரிய்யா சாஹிபுக்கு இந்த அடிப்படைக்கூடத்தெரியாதா?தப்லீக் ஜமாஅத்தினரே!அடிப்படையை தகர்த்து விட்டு கட்டிடம் கட்ட நினைப்பது அறிவீனம் இல்லையா?குர் ஆன் நபிவழிக்கு மாற்றமான கதைகளைக்கொண்டு வந்து,தூய இஸ்லாத்தில் கலப்படம் செய்வதாக இது ஆகாதா?இதற்குப்பெயர்தான் அமல்களின் சிறப்பா?இது வாழ்க்கையை தூய்மையானதாக ஆக்குமா?தவறை எண்ணி வருந்தி மன்னிப்புக்கோரி,குர் ஆன் ஹதீஸை மட்டும் கையில் ஏந்தி தப்லீக் செய்யுங்கள்.அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக. ibn shah 15
November 24, 2009 10:42
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே நானும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தப்லீகில் இருந்து தப்லீக் செய்தவன் எனும் அடிப்படையில் அவர்களுடைய, தூய எண்ணம், நேர்மை, இக்லாஸ், தக்வா எனும் இறையச்சம், தொழுகைகளை பேணுதல், தஃவாவுக்காக பல மணிக்களையும் நாட்களையும் பல் தியாகங்கள் செய்து முயல்தல் போன்ற பல நற்பண்புகளால் கவரப்பட்டவன் தான் அதே நேரம் சகோதரர் இப்னு ஷா அவர்கள் ஆக்கத்தில் கூறியுள்ள.... // குர் ஆன் நபிவழிக்கு மாற்றமான கதைகளைக்கொண்டு வந்து,தூய இஸ்லாத்தில் கலப்படம் செய்வதாக இது ஆகாதா?இதற்குப்பெயர்தான் அமல்களின் சிறப்பா?இது வாழ்க்கையை தூய்மையானதாக ஆக்குமா?தவறை எண்ணி வருந்தி மன்னிப்புக்கோரி,குர் ஆன் ஹதீஸை மட்டும் கையில் ஏந்தி தப்லீக் செய்யுங்கள்.அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக. // இந்த கேள்வி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இது இம்மை மற்றும் மறுமையை பாதிக்கக் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை... இது போன்ற சிந்தனையால் தூண்டப்பட்டு தப்லீஃகின் இது போன்ற பலவீனமான ஹதீஸ்களுடைய் நூல்களின் துணையுடனான தஃவாவை விட்டு விடுபட்டு இன்று பல ஆண்டுகளாக குர் ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் தஃவா (தப்லீக்) செய்து வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். சகோதரர்களே நாளை (26.11.2009) அரஃபா நாள் பாவ மன்னீப்பு கேட்க மிக சிறந்த நாள், நாளை நோன்பு வைத்து பாவமன்னிப்பு கேட்டு இது போன்ற இஸ்லாத்திற்கு முரணான பாவத்திலிருந்து மீட்சி பெற்று தூய இஸ்லாத்தினை குர் ஆன் மற்றும் நபி வழியில் வாழ்ந்தும் தப்லீக் செய்யவும் முன் வருவோமாக. அருள் புரிந்திட அல்லாஹ் போதுமானவன். 16
November 25, 2009 07:50
Please no comment, not blame to any body Allah will watch interior of human
sorry 17
May 23, 2010 16:46
islam is established one and only by thabligh jamath. no of people changed there life style as Muhammad's (sal) style, u don't have any authority to clarify thabligh.
18
June 01, 2010 12:56
அப்படியா முஹம்மத்?
சரி, அப்படின்னா நீங்களாவது தப்லிக்னா என்னன்னு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் 19
June 01, 2010 23:39
For Br.Mohammed and Br.Hajiyar: Let us avoid unnecessary arguements between us. Constructive comments should be welcome always. Islam is based (only) on Alqur'an and as-sunnah. Nobody should offrer comments on these two holy sources of islam. But Thabligh jamath might be able to accept valuable comments and act accordingly, wherever possible. If that happens, thabligh jamath could be the strongest muslim ummah.
20
June 08, 2010 12:52
இப்படியே அடித்துக்கொண்டு நாசமாய்ப் போங்கள்.
பொருளாதாரத்திலும், கல்வியுலும் பின்தங்கிய ஒரு நோயுற்ற சமூகத்திற்க்கு ஒரு சிறிதேனும் நன்மை செய்ய இயலுமென்றால் கருணை கூர்ந்து குழாயடிச் சண்டையை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கியிருங்கள். இனியும் சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்காதீர்கள். தப்லீகோ அல்லவோ விருப்பமுள்ளவர்கள் இருந்துவிட்டுப்போகட்டும். 21
June 09, 2010 14:14
Salam! I can say 100% Tableeq dawa is the one only doing and excepting rewards from Almighty!
Rest all Organization finally end to the world needs, I can give more explanations!, Tableeq dawa aim is each and every muslims should become like shabaas i mean 100% follow the Mohameed(Sal) and obey the Almighty orders! We are not call for prayer and any others ammals. So some peoples are misunderstand that! Or U can spend a 3 days with us then say about! if any can say i was mean! I hope they are saying lie because Allah only know the how purify that. We are not register to any ware! We dnt have any Fund Collection! but we have all over branch's! Can u any one Challenge with us??? IF any wrong i m really sorry! 22
August 22, 2010 16:26
கருத்து எழுதுக :
|
|
ANEES FATHIMA :
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள் |
|
sarfdin :
அருள் முருகன் சகோதரா
முஸ்லிம்களில் ப... |
|
Naseema :
அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட... |
|
ummu afsy :
salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m... |
|
MOHAMED RAFI :
RAFI,
THIS VERY INFROMATIVE |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
அஸ்ஸலாமு அலைக்கும்...
புனித மிகு ரமலா... |
|
nilam :
assalamu alaykkum i m seeking a job in riligius side |
|
peacfulmuslim :
why our arabs cant help to gaza to become an oil rich country ??[removed]void(0); |
|
Satyamargam.com :
Dear Banupriya,
Thanks for your visiting and your comment.
Are you participating in our quiz/s?
P... |
|
G.BANUPRIYA :
hello, i am banupriya from hindu regional,
but i also like ur website
thank u somuch
|
|
சஃபி :
எதிர்வரும் அக்டோபர் 3-14, 2010 தேதிகளில் ட... |
|
Lareena Abdul Haq :
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்..... |